ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில், அன்னாவரம் கோயிலில் அருளும் பெருமாளின் திருநாமம் சத்யதேவர் ஆகும். தாயாரின் திருப்பெயர் சத்யதேவி. இக்கோயில் கருவறை மிகவும் புதுமையான தோற்றத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அடிப்பகுதி பிரம்மாவாகவும், நடுப்பகுதி சிவனாகவும், உச்சியில் மகாவிஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைப் போலவே அழகிய மீசையுடன் காட்சி தருகிறார். அவரது இடதுபுறம் சத்யதேவியும் வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தின் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கைலாசநாதரும் திகழ்வது தனிச்சிறப்பாகும். பக்தர்கள் சத்யநாராயண பூஜை செய்து, தங்களது கோரிக்கை நிறைவேற இக்கோயில் சத்தியதேவரை வேண்டி வழிபடுகின்றனர்.
ஆந்திர மாநில மக்கள் சத்திய நாராயண பூஜையை ஒரு கட்டாயச் சடங்காகவே செய்து இந்தப் பெருமாளை வழிபாடு செய்கின்றனர். அதுவும் திருமணம் ஆன அந்த வருடமே அன்னாவரத்தில் எழுந்தருளி இருக்கும் சத்யநாராயண சுவாமியை தரிசித்து கோயில் வளாகத்திலேயே சத்யநாராயண பூஜை செய்து விரதமும் அனுசரிக்கிறார்கள். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தங்கள் இல்லங்களில் இந்த பூஜையை செய்து வழிபடுகின்றனர்.
லிங்க ரூபமாக கைலாசநாதரும், சத்திய தேவராக மகாவிஷ்ணுவும், அனந்த லக்ஷ்மியாக மகாலட்சுமி தாயாரும் கருவறையில் ஒரே பீடத்தில் காட்சி தரும் அற்புத ஆலயமாக அன்னாவரம் திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் ஒரு பெரிய தேர் போன்ற அமைப்புடன் விளங்குகிறது. நான்கு புறமும் அழகான பெரிய சக்கரங்கள், உயர்ந்த கொடிமரம், கருவறையில் உள்ளதைப் போன்றே அர்ச்சாவதாரங்கள், கொடி மரம் அருகில் உள்ள பெரிய தூணில் வடிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் பிராகாரத்தை சுற்றி வரும்போது பக்தர்கள் சத்ய நாராயண விரதம் இருந்து செய்த சிறு சிறு ஹோம குண்டங்கள் நிறைய காணப்படுகின்றன. இக்கோயில் பிராகாரத்தில் சுமார் 1500 பக்தர்கள் ஒரே நேரத்தில் விரதம் மேற்கொண்டு வழிபடும் விதமாக வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இக்கோயிலில் வித்தியாசமாக கோதுமை ரவையை வைத்து ஸ்வாமிக்கு நைய்வேத்தியம் தயாரிக்கப்படுகிறது. பூஜையின் நிறைவில் சத்யநாராயண விரதம் தொடர்பான கதைகளும், விரதப் பலன்களும் ஸ்வாமியின் முன்பு பாராயணம் செய்யப்படுவது இக்கோயிலின் விசேஷ அம்சமாக உள்ளது.