சிறந்த பக்தி https://sssbalvikas.in
ஆன்மிகம்

ஆன்மிகக் கதை: பக்தனின் லட்சணம் என்னவென்று தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

கவான் ஸ்ரீ கிருஷ்ணரை மனதில் நினைத்தபடி படுத்திருந்தான் அர்ஜுனன். அப்போது அங்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணர், “என்ன அர்ஜுனா தூக்கத்தில் மூழ்கி விட்டாயா?” என்றார்.

அதற்கு அர்ஜுனன், “தங்களைத்தான் மனதில் நினைத்திருந்தேன்” என்றான்.

“அர்ஜுனா இந்த உலகில் சிறந்த பக்தன் யார்?” என்று கேட்டார் கிருஷ்ணர்.

“அதையும் தாங்களே சொல்லுங்களேன்” என்றான் அர்ஜுனன். அதேசமயம், பகவான் தன்னையே சிறந்த பக்தன் எனச் சொல்வார் எனவும் எண்ணியிருந்தான். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரோ, பக்கத்து ஊரில் இருக்கும் மன்னர் ஒருவரை  குறிப்பிட்டு, அவரே சிறந்த பக்தர் என்றார்.

அதைக்கேட்ட அர்ஜுனன், “அந்த மன்னர் என்ன அவ்வளவு பெரிய பக்தரா” எனக் கேட்டான்.

“சரி, என்னுடன் வா. நேரில் பார்த்தால்தான் உனக்கு உண்மை புரியும்” என்றார். இருவரும் அந்த மன்னரைத் தேடிச் சென்றனர்.

அவர்களைக் கண்டதும் வரவேற்ற மன்னர், இருவரையும் ஆசனத்தில் அமரச் செய்தார். அங்கு வந்த ராணியும் மன்னரின் மகனான ஐந்து வயது சிறுவனும் பகவானின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணர், “மன்னா, நான் உன்னிடம் ஒன்று கேட்பதற்காகவே வந்தேன்” என்றார்.

“சுவாமி, தங்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்றார் மன்னர்.

“உங்களின் ஒரே மகனை எனக்குத் தர முடியுமா?” என்று கேட்டார் கிருஷ்ணர்.

“தங்களின் விருப்பம் எங்களின் பாக்கியம்” என்றார் மன்னர்.

“மிக்க மகிழ்ச்சி. முதலில் இந்தச் சிறுவனை இருகூறாக வெட்டுங்கள். அப்போது ராணி அவனது கையைப் பிடித்துக்கொள்ள, வாளால் நீயே இச்சிறுவனை வெட்ட வேண்டும். சிறுவனின் வலது பாகம் மட்டும்தான் எனக்கு வேண்டும். அப்போது அவன் கண்களில் கண்ணீர் வரக் கூடாது” என நிபந்தனையிட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

மன்னரும் அதற்கு சம்மதித்தார். அரச சபையே ஸ்தம்பித்து விட்டது. “கடைசியாக எதுவும் சொல்ல விரும்புகிறாயா?” என  சிறுவனிடம் கேட்டார் கிருஷ்ணர்.

“பிறந்தது முதல், ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்றே எனது இதயம் துடிக்கிறது. என் உடலை தங்களுக்கு அர்ப்பணிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று கூறி, ஸ்ரீ கிருஷ்ண நாமத்தை ஜபிக்கத் தொடங்கினான் அந்தச் சிறுவன்.

வாளுடன் மன்னர் நெருங்க, ராணி சிறுவனைப் பிடித்துக் கொண்டாள். அப்போது சிறுவனின் இடக்கண்ணில் கண்ணீர் பெருகியது.

அதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் உடனே, “நான்தான் கண்ணீர் சிந்தக்கூடாது என்றேனே. அதுவும் ஒரு கண்ணில் மட்டும் ஏன்” எனக் கேட்டார்.

உடனே அந்தச் சிறுவன், “எனது உடலின் வலது பாகத்தை மட்டும்தானே நீங்கள் கேட்கிறீர்கள். அதனால், ‘நான் என்ன பாவம் செய்தேன்’ என எனது இடது பாகம் கண்ணீர் சிந்துகிறது” என்றான் சிறுவன்.

இதைக் கேட்டு அங்கு கூடியிருந்தோர் அனைவரும் கண்ணீர் சிந்தினர். ‘இவன் அல்லவா கிருஷ்ண பக்தன். இவர்களுடன் ஒப்பிடும் தகுதி எனக்கு ஏது’ என்பதை உணர்ந்த அர்ஜுனன் தலை குனிந்தான். அவனைப் பார்த்த ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்தார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT