Chidambaram Sri Natarajar 
ஆன்மிகம்

சிதம்பர குஞ்சிதபாதம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

பொ.பாலாஜிகணேஷ்

காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். அப்போது ஒரு நாள் மாலையில் தன்னுடைய சீடர்களை அழைத்து, “நான் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும். நடராஜரின் பூஜையில் அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும்” என்றார்.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்தி தேவி இருக்கிறார்.

அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டேயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டேயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தாலும் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.

அதனால் ஆடல்நாயகனை தரிசிக்கும்போது கண்டிப்பாக இடது காலை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.

மஹாபெரியவர், குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார். இதை கேட்ட சீடர்கள், மஹாபெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், எப்படி பெரியவரை சிதம்பரத்திற்கு அழைத்து செல்வது? என்று சிந்தித்தார்கள். குஞ்சிதபாதத்தை தரிசித்தால் தமக்கு உடல்நலம் சரியாகும் என்று நினைத்து மஹா பெரியவர் அப்படிச் சொல்லவில்லை. மோட்சம் கிட்ட வேண்டும் என்றுதான் மஹான்கள் விரும்புவார்கள். அவர்களின் உண்மையான எண்ணத்தை புரிந்துக் கொண்ட இறைவன் அமைதியாக இருப்பாரா? உடனே தனது பிள்ளை விரும்புவதை நிறைவேற்றுவார் அல்லவா? ஆம், அப்படித்தான் நடந்தது. மறுநாள் சூரியனை விட வேகமாக செயலில் இறங்கினான் இறைவன்.

kanchi Mahaperiyavar

மஹாபெரியவரை தரிசிக்க சிதம்பரத்தில் இருந்து குஞ்சிதபாதத்துடன் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தார்கள் சிதம்பர நடராஜப் பெருமானுக்கு சேவை செய்யும் சில தீட்சிதர்கள். “நாங்கள் பெரியவரை தரிசிக்க வந்தோம். பெரியவருக்காக பிரசாதம் கொண்டு வந்து இருக்கிறோம்” என்ற கூறி பெரியவரை தரிசிக்க அனுமதி கேட்டார்கள்.

இதைக் கேட்ட மஹாபெரியவரின் சீடர்களுக்கு வார்த்தையே வரவில்லை. “நேற்று இரவுதானே நம் மஹாபெரியவர், நடராஜப்பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்றார். இன்று அதிகாலையிலேயே மஹாபெரியவரை தேடி குஞ்சிதபாதத்துடன் தீட்சிதர்களை நடராஜப் பெருமானே அனுப்பி இருக்கிறாரே” என்று மெய்சிலிர்த்துப் போனார்கள்.

மஹாபெரியவரிடம் தீட்சிதர்கள், பிரசாத தட்டில் குஞ்சிதபாதத்தை வைத்துக்கொடுத்தார்கள். அதை தம் தலையில் வைத்துக்கொண்டார் மஹாபெரியவர். மஹான்கள் முக்தி கிடைக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றகிறார்.

நாம் சராசரி மனிதர்கள் அல்லவா? நல்ல உடல் நலத்திற்குத்தான் அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். உடல் நலமாக இருந்தால் எல்லா பொருள் நலமும் தேடி வரும். சகலமும் நலமாக அமையும். ஆகவே, நாமும் ஒருமுறையாவது சிதம்பர நடராஜப் பெருமானுக்கு மூலிகைகளால் தயாரிக்கபடும் குஞ்சிதபாத பிரசாதத்தை தரிசிப்போம். அத்துடன் நடராஜப்பெருமானின் இடதுகாலை வணங்கி சக்தி தேவியின் ஆசியை பரிபூரணமாக பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT