Do you know the Shiva temple with the miraculous pillar?
Do you know the Shiva temple with the miraculous pillar? 
ஆன்மிகம்

அந்தரத்தில் நிற்கும் தூண் உள்ள சிவன் கோயில் தெரியுமா?

நான்சி மலர்

ந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது வீரபத்ரர் திருக்கோயில். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசால் கட்டப்பட்டதாகும். சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரருக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் சிலையும், உலகிலேயே பெரிய நந்தியும் இங்கு இருப்பது மிகவும் விசேஷம்.

இராமாயணத்தில் அசுரன் ராவணன், சீதா பிராட்டியை கடத்தி செல்லும்போது, ஜடாயு பறவை அவனை தடுத்ததாகவும் அப்போது ராவணன் அதை வெட்டி வீழ்த்தியதாகவும், பின்பு ஸ்ரீராமர் அந்தப் பறவையிடம் எழுந்திருக்கும்படி கூறியதாகவும் வரலாறு.

தெலுங்கில், ‘லெ’ என்றால் எழுந்திரு என்றும், பக்ஷி என்றால் பறவை என்றும் பொருளாகும். அதுவே இந்த ஊருக்கு லெபாக்ஷி என்ற பெயராகக் காரணமாயிற்று. இந்தக் கோயிலில் உள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையில் படாமல் அந்தரத்தில் நிற்பது அதிசயமாகும். இதை உறுதி செய்ய பலரும் துணி மற்றும் பேப்பரை தூணுக்கு அடியில் நுழைத்து எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒரு சமயம், பிரிட்டிஷ் இஞ்சினியர் ஒருவர் இந்தத் தூணின் ரகசியத்தை தெரிந்து கொள்ள முற்பட்டு தோற்றுப்போனார். இந்தத் தூண் மட்டும் எப்படி அந்தரத்தில் நிற்கிறது என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்தத் தூணை, ‘ஆகாய தூண்’ என்றும் அழைக்கிறார்கள். இந்தக் கோயிலை, ‘கூர்மசைலம்’ என்னும் மலை மீது கட்டியிருக்கிறார்கள். பார்க்க ஆமை போலவே இந்த மலை அமைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது.

இந்தக் கோயிலில் இருக்கும் நந்தி 20 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்டது. மற்ற கோயில்களில் உள்ள நந்தி சிலைகளை விட இந்த நந்தியின் தலை சற்று தூக்கிய வண்ணம் இருக்கும். இந்த நந்தி சிலைதான் உலகிலேயே இரண்டாவது பெரியதாகும். இது ஒற்றைக் கருங்கல்லால் ஆனது என்பது இன்னொரு சிறப்பு.

லெபாக்ஷி கோயிலில் இருக்கும் காலடித் தடம் ஆஞ்சனேயருடையது என்று நம்பப்படுகிறது. ராமாயணத்தில் சொல்லப்பட்டது போல ஸ்ரீராமர் இங்கே வந்து சடாயு பறவையை எழச் செய்தார் என்பது புராணம்.

இக்கோயிலின் பின்புறத்தில் பெரிய ஏழு தலைகள் கொண்ட நாகம் ஒன்று சிவலிங்கத்துடன் காட்சியளிக்கிறது. ஒற்றை கல்லால் ஆன இந்த சிலை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். ராமாயண இதிகாச கதைகள் இக்கோயிலைச் சுற்றி வரையப்பட்டிருக்கிறது. பல அதிசயங்களையும் மர்மங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் வீரபத்ரர் கோயில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT