Sri Hanuman https://www.youtube.com
ஆன்மிகம்

அஷ்டாம்ச ஆஞ்சனேயரின் அஷ்ட அம்சங்கள் என்ன தெரியுமா?

சேலம் சுபா

னைவருக்கும் பிடித்த கடவுளாக வணங்கப்படுபவர் ஆஞ்சனேயர். காரணம், இவரின் ஸ்ரீராம விசுவாசம். சனி பகவானே அஞ்சும் ஆஞ்சனேயர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களைக் காக்கிறார்.

ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்புகளைக் கொண்டவர் என்பதால் இவர், ‘அஷ்டாம்ச ஆஞ்சனேயர்’ எனவும் அழைக்கப்படுகிறார். ஆஞ்சனேயரின் எட்டு சிறப்பு அம்சங்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆஞ்சனேயர் தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தைப் போக்கி வலது கையினால், ‘அஞ்சேல்' என்று அபய ஹஸ்தத்துடன் கேட்கும் வரங்களை வழங்குவது முதல் சிறப்பு.

2. மனிதனின் உள் எதிரிகளான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவற்றுடன் வெளி எதிரிகளையும் அழிக்கக்கூடிய ஐந்து வகை ஆயுதங்களில் வெற்றியை மட்டுமே தரக்கூடிய வகையில் தனது இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

3. மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. லட்சுமணனைக் காக்க, தான் பெயர்த்து வந்த சகல நோய்களையும் போக்கும் அரிய மூலிகைகள் கொண்ட சஞ்சீவி மலையைத் தாங்கியும் இந்த மலையை பார்த்தபடியும் அருள்பாலிக்கும் அனுமனை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. அனுமனின் மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. அதே தெற்கு திசை நோக்கிய ஆஞ்சனேயரின் திருவடிகளைப் பற்றுவதால் மரண பயம் நீங்கி, நீண்ட ஆயுள் பெறுவது நான்காவது சிறப்பு.

5. ஆஞ்சனேயரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளது மட்டுமல்ல, குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருக்கும் சிறப்பினால் குபேரனின் அருள் முழுமையாகக் கிடைக்கும். ஆஞ்சனேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி நல்வாழ்வு பெறலாம். ‘அனுமனை துதிப்பவர்கள் யார் எனினும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்’ என்று ஸ்ரீராமரிடம் சனி பகவான் சத்தியம் செய்ததாக வரலாறு. இதுவே நவகிரக ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. பொதுவாக, ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி மும்மூர்த்திகளில் முதல்வரான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம்தான் ஆஞ்சனேயர். ஆஞ்சனேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. எனவேதான் அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் பார்ப்பதில்லை. சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு.

7. பெருமாளின் இதயத்தில் மகாலட்சுமி வாசம் செய்து அருள்பாலிப்பது போல, ஆஞ்சனேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்ட லட்சுமிகளின் அனுக்கிரகம் நமக்கு இவரை வணங்கும்போது எளிதாகக் கிடைக்கிறது. ஏழுமலையானின் அனுக்கிரகமான இது ஏழாவது சிறப்பு.

8. ஆஞ்சனேயரின்ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. இவரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.

அனுமனின் பார்வையை தரிசிப்பவர்களின் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள்மழை பொழியவல்லது என்பதை உணரலாம். எனவே, சூரிய பந்தைக் கையில் பிடித்த ஆஞ்சனேயர் கண்களில் கவலைகளை சுட்டெரிக்கும் சூரியன் எட்டாவது சிறப்பு.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT