பயணம்

எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கல்கி டெஸ்க்

காயத்திரி

Ladakh

கடந்த 15 ஆண்டுகளாக நான் இந்தியாவில் விரிவாகப் பயணம் செய்துள்ளேன். லடாக் (ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது) செல்ல எப்போதும் விரும்பினேன். எனவே இந்த முறை லடாக்கிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். லடாக்கின் தனிச்சிறப்பு என்னவென்றால், பனி மூடிய மலைகளை ஒட்டிய பாலைவனங்கள், மலைப்பகுதிகளில் செதுக்கப்பட்ட பழங்கால மடங்கள் மற்றும் நிலம் முழுவதும் பசுமையான மேய்ச்சல் நிலங்கள்.

உயரமான மலைப்பாதைகளை கடந்து செல்வது, மடங்களுக்குச் செல்வது, திருவிழாக்களில் கலந்துகொள்வது மற்றும் பிரமிக்க வைக்கும் உயரமான ஏரிகளுக்கு அருகில் முகாமிடுவது ஆகியவை லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள். சுற்றுலா என்பது லடாக்கின் பொருளாதாரத்தின் இதயம், எனவே தாராள மனப்பான்மை கொண்ட மக்களுக்கு ஏதாவது ஒன்றைத் திரும்பக் கொடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

என் .சாந்தினி

Madurai Meenakshi Temple

ஊரிலே கல்யாணம் , மாரிலே சந்தனம் என்பார்கள் . மார்ச் 24 ல் திருப்பரங்குன்றம் விழா எல்லாம் முடிந்து , மதுரை மீனாட்சி திருக்கல்யாண விழா ஏப்ரல் 11 ல் ஆரம்பித்து திருக்கல்யாணம் , தேர் , கள்ளழகர் திருவிழா என மதுரையே குலுங்கும் . தினம் ஒரு புடவை கட்டி , வீட்டு விசேஷம் போல் குழந்தைகளை அம்மன் போல அலங்கரித்து , நான்கு மாசி வீதி சுற்றி வந்து ஏப்ரல் 29 கள்ளழகரை அழகர் கோவிலுக்கு வழியனுப்பும் வரை ஓய மாட்டோம் .

அதன் பின் தேர்தல் திருவிழா , அப்புறம் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவிடம் , ராமேஸ்வரம் , தனுஷ்கோடி , தேவிப்பட்டினம் என ஒரு மினி டூர் போக பிளான் ரெடி . ஹாட்டான பிளேஸ் என்றாலும் , அட்வான்ஸ் புக்கிங் எதுவும் இல்லாமல் கூலாக செல்வோம் .

என் .பாக்யலக்ஷ்மி

madurai tourist places

பெங்களூரில் இருக்கும் அண்ணன் , அங்கே வரும்படி அன்போடு அழைப்பு விடுத்ததால், இரண்டு மாதங்களுக்கு முன்பே சம்மர் லீவில் பெங்களூரு , மைசூரு என்று சுற்றிப் பார்க்க பதினைந்து நாட்கள் செல்ல பிளான் போட்டிருந்தேன் . ஆனால் இப்போது அங்கே பயங்கர தண்ணீர் கஷ்டமாயிருப்பதால், அவர்கள் குடும்பம் மதுரை வரப் போகிறார்களாம் . வேறு என்ன செய்ய ..? அவர்களோடு மதுரையைத் தான் சுற்றி வர வேண்டும் .

திருமதி.பானு பெரியதம்பி

Arapaleeswarar Temple, Agaya Ganga Falls

எங்கள் ஊர் சேலத்திற்கு அருகே 90 கி. மீ தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு, கோடை விடுமுறைக்கு வரும் பேரக்குழந்தைகள், மகளோடு செல்வதற்கான ஏற்பாடுகளையும், தங்குவதற்கு காட்டேஜையும் புக் செய்து விட்டோம். திருமணத்திற்கு முன்பு என் மகளோடு சென்று இருந்தோம். வரலாற்று சிறப்பு மிக்க இடமாகவும், கூட்டம் அதிகம் இல்லாததாலும் மிகவும் ரசித்தோம். அதே இடத்திற்கு தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல மகள் விரும்பியதால் சுற்றுலா ஏற்பாடு செய்துவிட்டோம்.

தமிழ் புத்தாண்டு முடித்துவிட்டு மறுநாள் செல்கிறோம். ஆதலால் வல்வில் ஓரி ஆண்ட இடம் பற்றியும், அறப்பளீஸ்வரர் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அனைத்தையும் எங்கள் பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க தயாராக உள்ளோம்.

குழந்தைகளுக்கும் குறுநில மன்னனான கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி ஆண்ட இடத்திற்கு அழைத்தக் கொண்டு செல்வதோடு, அவரின் வீரம், பண்பு,கலாசாரம் என அனைத்தையும் விளக்கி சொல்ல விரும்புவதால் இந்த கோடை விடுமுறை கொல்லிமலை தான். ஆகாச கங்கை நீர்வீழ்ச்சியைப் பார்க்க சுமார் 1000 படிகள் ஏறி ,இறங்குவதே பெரிய சாதனைதான்.

தி.வள்ளி

Alappuzha

வெயில் சுட்டெரிக்கும் இந்த கோடையில் ..எங்கள் குடும்பம் செல்ல உத்தேசித்திருப்பது கேரளா ..சற்று குளிர்ச்சியான இடம்.. குமரகோம் மற்றும் ஆலப்புழை ..ஆலப்புழை  போட் ஹவுஸ் இரவு தங்குவது பிள்ளைகள் ஏற்கனவே அனுபவித்த ஒன்று ..அதனால் இந்த தடவை எங்களையும் கூட்டிச் செல்ல உத்தேசித்துள்ளார்கள்.. போட்டில் இரவு தங்குவது இனிய அனுபவமாக இருக்கும்.. மேலும் சற்று வெயிலும் குறைவாக இருக்கும். அதிகம் சுற்றக்கூடிய வயதில்லை என்பதால் பிள்ளைகள் மற்றும் பேத்திகளுடன் ஒரே இடத்தில் தங்கி இயற்கை ரசிக்க ஆவலாக இருக்கிறது.

இயற்கையை ரசிப்பதுடன் குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக கூடியிருக்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அத்துடன் ரிசார்ட்களில் இருக்கும் விளையாட்டுகளை பேத்திகளுடன் விளையாடி மகிழவும்.. காலார  நடக்கவும்.. இயற்கை ரசிக்கவும் ஒரு வாய்ப்பு. தினசரி வீட்டு ரொட்டீனிலிருந்து விடுதலை. (சுற்றுலா செல்லும்போது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் ) குடும்பத்துடன் குதுக்கலிக்கும் இந்த நாட்கள் அடுத்த விடுமுறை வரை நினைவில் நிற்கும். சுற்றுலா செல்லும் நாளை . ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT