மனிதராகப் பிறந்து கடவுள் அவதாரமாகி அதே மனிதர்களால் வணங்கப்படுபவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலரிலும் மதம், இனம், ஜாதி, மொழி என அனைத்தையும் கடந்து உலகளாவிய அளவில் சிலைகள் அமைத்து வணங்கப்படும் புத்தர் சிறப்பு மிக்கவராகிறார்.
இன்றும் பெரும்பாலான வீடுகளிலும் அலுவலகங்களிலும் உள்ள வரவேற்பறைகளில் அழகழகான வடிவமைப்பு கொண்ட சிலைகள் தவறாமல் இடம் பெறுபவர் புத்தரே. அமைதியை வலியுறுத்தியதால் அமைதியின் அடையாளமாக ஆகிப்போன புத்தருக்கு உலகிலேயே சீனாவின் பிரசித்தி பெற்ற மலை ஒன்றில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சீனா சுற்றுலாவுக்கு ஏற்ற ஏராளமான இடங்களைக் கொண்டுள்ளது. அத்தகைய இடங்களில் முக்கியமான ஒன்று மௌன்ட் இமெய். இந்த மலை 10,103 அடி உயரத்தில் உள்ள புத்தரின் புண்ணிய தலமாகும். சீனாவின் மிக உயரமான சுற்றுலா இடங்களில் ஒன்று இந்த இமெய். பார்க்கும் இடமெல்லாம் பசுமை போர்த்திய மலைகள் ,மெலிதாக சூழும் பனி மேகங்கள் என இயற்கையின் எழில் ஓவியமாக பயணிகளைக் கவர்கிறது இந்த மவுண்ட் இமெய். இந்தியாவில் இருந்து சென்ற போதிதர்மர் போதி சத்யா என்ற பெயரில் தியானம் புரிந்த இடம் என்ற பெருமை இந்த மலைக்கு உண்டு.
மலையின் உச்சியில் சீனாவில் முதலாம் நூற்றாண்டில் முதன்முதலாக கட்டப்பட்ட கோல்டன் ஸ்மித் என்ற புத்த கோயில் உள்ளது. இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்தான் உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை மலையை வெட்டிக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது "தர்ஷன் புத்தா" என்ற பெயர் கொண்ட இந்த சிலை 71 மீட்டர் உயரம் கொண்டது கி. பி 730 இல் சிலை அமைக்கும் பணி துவங்கி கிட்டத்தட்ட 73 ஆண்டுகள் கடின உழைப்பில் இந்த சிலை உருவாக்கப்பட்டு கி.பி 803 ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
சீனர்களின் கடின உழைப்பினால் உருவான இது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு பெருமை பெறுகிறது.
மூன்று நதிகள் கலக்கும் இடத்தில் நதிகளை புத்தர் பார்க்கும் விதமாக சிலை அமைக்கப்பட்டது . மின் டடு, சிசுவன் நதிகள் இணையும் இந்த இடத்திற்கு படகு மூலம் பயணித்து வருவதன் மூலமே புத்தரை முழுமையாக பார்க்க முடியும்.
இந்த சிலை உருவான பின்னணி சுவாரஸ்யமானது. பலர் உயிரிழக்கக் காரணமாக விளங்கிய ஆர்ப்பரிக்கும் ஆற்றைப் புத்தர் அமைதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஹை டோங் என்ற சீனத்துறவி கி.பி 713 இல் இச்சிலையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதற்கான நிதிவரத்து சில காரணங்களால் தடைபடவிருந்த நிலையில் அவர் தனது நேர்மையையும் வெளிக்காட்ட தனது கண்களைத் தோண்டி இழந்ததாக கூறப்படுகிறது.
அச்சமயம் பாதியளவே முடிந்த சிலையின் கட்டுமானம் அவரது இறப்பிற்குப் பிறகு, போதிய நிதி இல்லாததால் தடைபட்டது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவ ஆளுநரான வீ காவ் இந்த திட்டத்திற்கு அளித்த நிதியுதவியுடன் 803 ஆம் ஆண்டில் ஹை டோங்கின் சீடர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
குன்றின் முகப்புப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட கற்கள் கீழே உள்ள ஆற்றில் கொட்டப்பட்டதின் விளைவாக ஆற்றின் சீற்றம் குறைந்து கப்பல்கள் கடந்து செல்வதற்கு பாதுகாப்பாக அமைந்ததாக கருதப்படுகிறது. முழுவதும் மலைப் பாறைகளில் அமைக்கப்பட்ட இந்த மாபெரும் புத்தர் சிலையின் காதுகள் மட்டும் மரத்தால் செதுக்கப்பட்டு களிமண் பூச்சுடன் சிலையில் பொருத்தப் பட்டுள்ளது.
71 மீ உயரம் கொண்ட இச்சிலை 15 மீட்டர் உயரமுள்ள தலை, 28 மீட்டர் அகலம் கொண்ட தோள்கள், 6 மீட்டர் நீளம் கொண்ட மூக்கு, 7 மீட்டர் நீளம் கொண்ட காதுகள் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது மிகச்சிறிய கால் விரல் நகம், எளிதாக ஒரு நபர் அமர்ந்துகொள்ளும் அளவு பெரியதாகவுள்ளது. தனது கைகளை தன் முழங்கால்கள் மேலிட்டு அமர்ந்தவாறு இருக்கும் மைத்ரேய புத்தரைச் சித்தரித்து கம்பீரமாக உள்ள காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
காலங்களைக் கடந்தாலும் பல சிறப்பகளை தன்னகத்தே கொண்டு நம்மை பிரமிக்க வைக்கும் இந்த புத்தர் சிலை சீனாவின் பெருமைகளுள் ஒன்றாகிறது.