World Tourism Day 
பயணம்

World Tourism Day - இந்நாள் சுற்றுலா மற்றும் அமைதியைக் கொண்டாடுகிறது!

தேனி மு.சுப்பிரமணி

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும், சுற்றுலாவானது மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும், 1979 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலகச் சுற்றுலா நிறுவனத்தின் (United Nation World Tourism Organisation) மூன்றாவது பொது அவைக் கூட்டத்தில், இந்த அமைப்பின் சட்டங்கள் செப்டம்பர் 27 ஆம் நாளன்று ஏற்றுக் கொண்டதை நினைவூட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை உலகச் சுற்றுலா நாள் (World Tourism Day) என்று கொண்டாடுவது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 27 ஆம் நாளில் உலகச் சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

1997 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் துருக்கியில் நடந்த உலகச் சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வு, உலகளவில் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார விழுமியங்களில் சுற்றுலாவின் ஆழமான தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2024 ஆம் ஆண்டில், உலகச் சுற்றுலா நாளை நடத்தும் நாடாக ஜார்ஜியா இருக்கிறது.

உலகச் சுற்றுலா தினத்தை நடத்தும் நாடான ஜார்ஜியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் புவியியல் மற்றும் பண்பாடுகளைக் கொண்டது. இந்த நாடு சிறிய நாடு எனினும், பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கி நீண்டு, பல்வேறு பேரரசுகள், பண்பாடுகள் மற்றும் சமயங்களுக்கு ஒரு சந்திப்புப் புள்ளியாக சேவை செய்யும் ஒரு அடுக்கு வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்நாடு பண்டைய மரபுகள் மற்றும் நவீன விருப்பங்களின் தனித்துவமான கலவையாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகச் சுற்றுலா நாளின் கருப்பொருள் தேர்வு செய்யப்பெற்று, அதன் வழியாக சுற்றுலாவின் பெருமை விளக்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா நாளின் கருப்பொருளாக 'சுற்றுலா மற்றும் அமைதி' (Tourism and Peace) இருக்கிறது. பண்பாட்டு இடைவெளிகளைக் குறைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், பல்வேறு நாடுகளுக்கிடையே சரியான புரிதலை வளர்ப்பதிலும், சுற்றுலாவின் பங்கைப் பற்றி இந்தக் கருத்துரு எடுத்துக்காட்டுகிறது. புதிய பண்பாடுகளைக் கொண்டாடுவதன் மூலம், பயணிகள் பன்முகத்தன்மையுடன் அதிக சகிப்புத்தன்மையையும் மதிப்பையும் பெறுகிறார்கள்.

இதே போன்று, சுற்றுலாத் தடைகளைத் தகர்த்தெறிவது மட்டுமின்றி உலகளாவிய தொடர்புகளையும் பலப்படுத்துகிறது. இது பணிகளை உருவாக்குவதன் மூலமும், நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், நீண்டகால அமைதி மற்றும் செழுமைக்கான அடித்தளத்தை அமைப்பதன் மூலமும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துகிறது. இதன் வழியாக சுற்றுலாப் பயணிகள் உலக அமைதிக்குப் பெரும் பங்களிக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் உலகச் சுற்றுலா நிறுவனத்தின் 118 வது செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த 2025 ஆம் ஆண்டில் தெற்காசியாவிலுள்ள ஒரு நாடு, சுற்றுலா நிகழ்வை நடத்திட வேண்டும் என்றும், 2025 ஆம் ஆண்டுக்கு “சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" (Tourism and Sustainable Transformation) என்பதைக் கருப்பொருளாகக் கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் நாடுகள்!

குழந்தைகளுக்கு OCD இருப்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்! 

எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

குறைந்த அளவிலான போதைப்பொருள் பயன்பாடு உள்ள நாடுகள்!

உச்சக்கட்டத்தில் போர்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்!

SCROLL FOR NEXT