Narasimha with Chakrathalwar 
தீபம்

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

க்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் எப்பொழுதும் இருப்பார். திருமாலின் கையில் உள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாகத் தீரும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடி வந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வாருக்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும். அவர் வேகமாக சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளை தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளை என்பது நரசிம்மருக்கு கிடையாது. துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறப்பு. இந்த அடிப்படையில்தான் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் ஸ்ரீ நரசிம்மர் இருப்பார்.

மூன்று சக்கரத்தாழ்வார்கள் அருளும் தலம் ஒன்று இருக்கிறது எங்கே என தெரியுமா?

தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபாலசாமி திருக்கோயில் இருக்கிறது. இந்த ஆலயத்தை மதனகோபால பெருமாள் கோயில் என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தின் மூலவராக இருப்பது சக்கரத்தாழ்வார். சுதர்சனவல்லி விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக இறைவன் வீற்றிருக்கிறார். பொதுவாக, பெருமாள் கோயிலில் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். அவருக்குப் பின்புறம் நரசிம்மரின் உருவம் இடம்பெற்றிருக்கும். ஆனால், இங்கு சக்கரத்தாழ்வார் மூலவராக இருக்கும் காரணத்தால் கோயில் ராஜகோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மர் இடது பக்கத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும் நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரை பார்த்தபடி இருப்பது ஆலயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இத்தல சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சனர் சக்கரபாணி ஆகிய பெயர்களும் உண்டு.

இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது சிறப்புக்குரியது. மூலவரான சக்கரத்தாழ்வார் பதினாறு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவரைப் போலவே உத்ஸவரான சக்கரத்தாழ்வாரும் கூட பதினாறு திருக்கரங்களுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இது தவிர அஷ்டபுஜம் எனப்படும் எட்டு கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலய உட்புறத்தில் நடத்தப்படும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டுமே இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுவது மிகவும் சிறப்பாகும்.

இந்தக் கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் மற்றொரு சிறிய கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தையும் கடந்து சென்றால் பலிபீடம், கருடாழ்வார் சன்னிதிகள் இருக்கின்றன. கருடாழ்வார் சக்கரத்தாழ்வாரை நோக்கியபடி இருக்கிறார். கருவறையில் எங்கும் இல்லாத வகையில் இரண்டு தாயார்களுடன் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். இது அரிதிலும் அரிதான காட்சி. இங்கு அருளும் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும். மேலும், பூர்வஜன்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்தத் தல இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். சக்கரத்தாழ்வார் முன்பாக நின்று அவருக்கான காயத்ரி மந்திரமான

‘ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ:சக்ர ப்ரசோதயாத்’

இந்த மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் விலகும். நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் தொடர்ச்சியாக ஒன்பது மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்று அல்லது ஒன்பது வியாழக்கிழமைகளும் அல்லது ஒன்பது சனிக்கிழமைகளோ வருகை தந்து ஒன்பது அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒன்பது முறை சக்கரத்தாழ்வாரை வலம் வந்து வழிபட வேண்டும். மேலும், சிவப்பு மலர்களால் ஆன மாலையை சக்கரத்தாழ்வாருக்கு சூட்டி, அதோடு கற்கண்டு மற்றும் உலர் திராட்சையை நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இந்த கோயிலில் தல விருட்சம் அத்தி மரமாகும்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

தீபாவளி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு செய்யலாம் வாங்க! 

படிக்கும்போது தூக்கம் வருகிறதா? அப்போ இவற்றை செய்யுங்கள்!

இலாபம் ஈட்ட வல்லாரை கீரை பயிரிடலாம் வாங்க!

SCROLL FOR NEXT