Underworld 
தீபம்

இப்போதைய கலிஃபோர்னியா சாம்பல் தீவு (Ash Island) அப்போதைய பாதாள லோகம்! நம்புங்க மக்களே!

பிரபு சங்கர்

புராண காலங்களில் சொல்லப்பட்ட பாதாள உலகம் இன்றும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

இருக்கிறது, நம்புங்கள்.

இந்திய பூமியைத் தோண்டிக் கொண்டே போனால், இறுதியில் கீழே அமெரிக்காவைத் தொட்டு விடலாம் என்று சொல்வார்கள். நமக்கும் அமெரிக்காவுக்கும், காலக்கணக்கில் 12 மணிநேரம் வித்தியாசம் என்ற நடைமுறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சரியானதாகவே தோன்றுகிறது.

அப்படி இந்தியாவிலிருந்து நேர்க்கோடாக அடியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்ததுதான் கலிஃபோர்னியா. இங்கே உள்ள ஒரு தீவின் பெயர் – ஆஷ் ஐலண்ட் – சாம்பல் தீவு.

Ash Island, California

இந்தியப் புராணப்படி சகரர்கள் சாம்பலாகிப் போனார்களே, அந்த பாதாள லோகம்தான் இப்போதைய கலிஃபோர்னிய சாம்பல் தீவு என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். இந்த சாம்பலைக் கரைத்த கங்கை நீர்தான் இப்போது இந்த சாம்பல் தீவைச் சூழ்ந்துள்ள நீர்ப்பகுதியாம்.

ஆனால், இந்தத் தீவில் எரிமலைகள் இருந்தன என்றும், அவை கக்கிய தீப்பிழம்பால் உருவான சாம்பல் படர்ந்த பகுதிதான் இது; அதனால்தான் சாம்பல் தீவு என்று அழைக்கப்படுகிறது என்றும் புவியியல் நிபுணர்கள் வாதாடுகிறார்கள்.

பாதாள உலகத்தில் இருந்த கபில முனிவரின் அக்னி ஆற்றல்தான் பின்னாளில் எரிமலையாக மாறியிருக்கிறது என்பது நம் புராண ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

அதுமட்டுமல்ல, இந்திரன் திருடிக் கொண்டு வந்து கட்டி வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறதே, அந்தக் குதிரை கட்டப்பட்ட இடமும் இதே கலிஃபோர்னியாவில் உள்ளது. அந்த இடம்தான், ஹார்ஸ் ஐலண்ட் – குதிரைத் தீவு என்றும் சொல்கிறார்கள்.

ஆக, அஸ்வமேத யாகத்துக் குதிரையை இந்திரன் கவர்ந்து வந்து கட்டி வைத்த அந்நாளைய இடம்தான் இப்போதைய கலிஃபோர்னிய ஹார்ஸ் ஐலண்ட் (குதிரைத் தீவு) என்றும், கபில முனிவர் சகரர்களைப் பார்வையால் எரித்து சாம்பலாக்கிய இடம்தான் கலிஃபோர்னியாவை அடுத்துள்ள ஒரேகான் பகுதியிலுள்ள ஆஷ் ஐலண்ட் (சாம்பல் தீவு) என்றும் சொல்லப்படுவதில் ஏன் உண்மை இருக்கக் கூடாது?

Horse Island

இன்னொரு விஷயம், இந்த ஆஷ் ஐலண்ட் பகுதியில் நீர்நிலை என்றுமே வற்றுவது கிடையாதாம். கங்கை என்றாவது வற்றுமா என்ன?

‘நம் புராண காலத்து கபில ஆரண்யாதான் இப்போது கலிஃபோர்னியா என்று அழைக்கப்படுகிறதோ!’ என்று காஞ்சி பரமாச்சார்யாரே ஒருமுறை கூறிப்பிட்டிருக்கிறார்.

சரி, நம் புராணக் கதை என்ன?

தசரதனுக்கு முன்னால் அயோத்தியை ஆண்ட மன்னர்களில் ஒருவன் சகரன். இவன் ஒருசமயம் அஸ்வமேத யாகம் மேற்கொண்டான். சம்பிரதாயப்படி, யாக குதிரை புவி வலம் வர அனுப்பி வைக்கப்பட்டது.

சகரன் அஸ்வமேத யாகம் செய்கிறான் என்று கேள்விப்பட்டவுடனேயே இந்திரன் கலக்கம் அடைந்தான். அந்த யாகம் வெற்றியடைந்துவிட்டால், தன் பதவிக்கு சகரன் போட்டியாக வந்துவிட வாய்ப்பு இருக்கிறது! அந்த யாகம் முழுமை பெறாதபடி தடுப்பதற்காக, அஸ்வமேத யாக குதிரையை அபகரித்துச் சென்றுவிட்டான்.

சகரனின் அறுபதாயிரம் புத்திரர்கள் யாகக் குதிரையைத் தேடிப் புறப்பட்டார்கள். பூமியில் எங்குமே அது காணக்கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர்கள், பூமியைத் தோண்டிச் சென்று பார்க்க முடிவெடுத்தனர். அதன்படி, வெட்டிக் குடைந்துகொண்டு, பாதாள உலகம் வரை சென்றுவிட்டனர்.

அங்கே கபில முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவரருகே யாகக் குதிரை மேய்ந்து கொண்டிருந்தது! குதிரையைத் திருடிய இந்திரன், யாராலுமே கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில், அதை இந்த பாதாள உலகத்தில் கொண்டு வந்து விட்டிருந்தான்.

ஆனால் சகரர்களோ, முனிவர்தான் குதிரையைத் திருடியிருக்கிறார் என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவரைத் தாக்க முற்பட்டனர். ஆரவார சந்தடி கேட்டு கண் விழித்த முனிவர், நடந்தவற்றை ஊகித்துக் கொண்டு, நெருப்புப் பறக்க, அவர்களைக் கோபமாகப் பார்த்தார். அவ்வளவுதான். அவர்கள் அனைவரும் சாம்பலாகிப் போனார்கள்.

விவரம் தெரிந்துகொண்ட சகர மன்னன், தன் பேரன் அம்சுமானை முனிவரிடம் அனுப்பி வைத்தான். அவனும் சகரர்கள் செய்த பாவத்துக்குத் தான் மன்னிப்பு கேட்டு, குதிரையை மீட்டு வந்தான். சகரனும் யாகத்தைப் பூர்த்தி செய்தான்.

ஆனால் சாம்பலாகிப் போன சகரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமே! இதற்கும் பல காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆமாம், சகரனின் வழி வந்த அம்சுமானின் பேரன், பகீரதன், கடுந்தவம் மேற்கொண்டான். அதன் பலனாக வானுலகிலிருந்த கங்கை நதியை

பூமியில் வீழச் செய்தான். அந்த நீரால் சாம்பல் கரைக்கப்பட, சகரர்கள் நற்கதி அடைந்தார்கள்.

மேலே கலிஃபோர்னியா நாட்டைப் பற்றி விவரித்ததையும், இந்தப் புராண விவரத்தையும் இணைத்துப் பார்த்தால், இந்த ஒற்றுமை வியப்பாகத்தானே இருக்கிறது!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT