கோகுலம் / Gokulam

நாயும் பூனையும்!

கல்கி டெஸ்க்

திடீரென்று ஒருநாள் தனது மோதிரத்தை விற்று விட முடிவு செய்தார் அந்த வீட்டுக்காரர். தொடக்கத்தில் அவர் மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் ஏழைகள்தான் என்றாலும் தினப்படிச் செலவுக்கோ உணவுக்கோ சிரமப்பட்டதில்லை. அப்படி இருக்கும்போது, எதற்காக திடீரென்று மோதிரத்தை விற்கவேண்டும்? ஆனால் தன் மனைவியின் பேச்சைக் கேட்பதாக இல்லை அவர். விற்கவேண்டும் என்றால் விற்கவேண்டும், அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார்.

சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் உடனே வீட்டை விட்டு வெளியேறினார். ஆற்றைக் கடந்து பக்கத்து ஊருக்குச் சென்று அங்குள்ள செல்வந்தர் ஒருவரிடம் மோதிரத்தை ஒப்படைத்துவிட்டார். ஒரு நட்சத்திரம் போல் மின்னிக்கொண்டிருந்த அந்த மோதிரத்தைக் கண்டதும் அந்தச் செல்வந்தரும் மயங்கித்தான் போனார். கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு மோதிரத்தைக் கொண்டு சென்று ஒரு பாதுகாப்பான மர அலமாரியில் வைத்துப் பூட்டினார்.

மோதிரத்தை விற்ற இரண்டாவது நாள், வீட்டுக் காரருக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அவர் மனைவி, வைத்தியரை அழைத்து வந்து காட்டியும் நிலைமை சரியடையவில்லை. மோதிரம் விற்ற காசு கையில் இருந்ததால் அடுத்த சில மாதங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அதற்குப் பிறகு தொல்லைகள் ஆரம் பித்துவிட்டன. கடன்காரர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித் தார்கள். 

நாள்கள் செல்லச் செல்ல அவர்கள் இருவருக்கும் போதுமான சாப்பாடே கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் உள்ள நாய்க்கும் பூனைக்கும் என்ன தரமுடியும்?

இரவு ஆனதும் தோட்டத்தில் நாயும் பூனையும் சந்தித்துப் பேசிக்கொண்டன.

“நம் எஜமானர்கள் எவ்வளவு துயரப்படுகிறார்கள் பார்த்தாயா?” என்றது நாய்.

“ஆமாம், அவர்களுக்கே உணவு இல்லை. இதில் நமக்கு எங்கே பாலும் இறைச்சியும் கிடைக்கப் போகிறது?” என்று வருத்தப்பட்டது பூனை.

“நம்மால் எதுவும் செய்ய முடியாதா?”

“நாம் என்ன செய்ய முடியும்? நம் எஜமானர் செய்த தவறால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.”

நாய் நிமிர்ந்து பார்த்தது. “என்ன சொல்கிறாய்? அவர் என்ன தவறு செய்தார்?”

“உனக்குப் புரியவில்லையா? அவர் அந்த மோதிரத்தை விற்றதில் இருந்துதான் இந்த வீட்டில் பிரச்னைகள் ஆரம்பித்திருக்கின்றன.”

இது உண்மையாக இருக்குமோ என்று யோசித்தது நாய். தன்னைவிட பூனை கொஞ்சம் புத்திசாலிதான் என்று அதுக்குத் தெரியும். அதனாலேயே எஜமானரும் அவர் மனைவியும் அந்தப் பூனைமீது அதிகப் பாசம் வைத்திருந்ததும் அதுக்குத் தெரியும். அந்த விஷயத்தில் பூனைமீது கொஞ்சம் பொறாமையும் இருந்தது.

பூனையை நெருங்கியது நாய். மெல்லிதாக அதன் முதுகைத் தட்டிக் கொடுக்கவும் செய்தது. “நீ சொன்னது சரிதான். நாம் நன்றாகச் சாப்பிட்டு பல நாள்கள் ஆகின் றன. எஜமானர் படுத்த படுக்கையாக இருக்கிறார்.”

அன்று இரவு திட்டம் ஒன்று தயாரானது. எப்படியாவது அந்த மோதிரத்தை மீண்டும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தன. தற்போது மோதிரம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க பூனைக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்தச் சீன கிராமத்தில் ஒரே ஒரு செல்வந்தர்தான் இருந்தார். எதை விற்க வேண்டுமானாலும் அவரிடம்தான் சென்றாக வேண் டும். மேலும் அந்த வீட்டுக்கு ஒருமுறை பூனை ரகசிய மாகச் சென்றிருக்கிறது. தன் திட்டத்தை அது நாயிடம் பகிர்ந்துகொண்டது.

“கடினமான ஒரு மரப்பெட்டியில்தான் அவர் நகையையும் பணத்தையும் சேர்த்து வைப்பார். அந்தப் பெட்டி எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் என்னால் ஆற்றைக் கடக்க முடியாது. சென்ற முறை எஜமானருடன் ஒட்டிக்கொண்டு போனேன்.”

“நீ என் முதுகில் அமர்ந்துகொள். நான் நீந்தி உன்னைக் கரை சேர்க்கிறேன்” என்றது நாய்.

“சரி, மரப்பெட்டியை நீயும் நானும் சேர்ந்து திறக்கமுடியாதே!” என்றது பூனை.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு இன்னொரு கூட்டாளியையும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தன. வீட்டுத் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த எலியை அழைத்து வந்தது நாய். எலி எக்கச்சக்கமாக முரண்டு பிடித்தது. நாயும் பூனையும் மாறி மாறிப் பேசித்தான் எலியின் மனத்தை மாற்றின. அதற்குள் விடிந்தே விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

ஆளுக்கு ஒரு வேலை என்று பிரித்துக்கொண்டன. பூனை வீட்டையும் பெட்டியையும் அடையாளம் காட்டும். நாய் பூனையைச் சுமந்து செல்லும். பூனை எலியைச் சுமந்துசெல்லும். எலி, பெட்டியைக் குடைந்து மோதி ரத்தை வெளியில் எடுக்க வேண்டும்.

மறுநாள் நள்ளிரவு மூன் றும் கிளம்பின. எலியை வாயில் கவ்வியபடி பூனை நாயின் முதுகில் தாவி ஏறியது. நாய் ஆற்றில் இறங்கியது. அழகாக நீந்தவும் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீந்திய பிறகு அவை கரையை அடைந்தன. ‘அப்பா, என்னை இப்படியா கடித்து வைப்பாய்?’ என்று சிணுங் கியபடியே பூனையின் வாயில் இருந்து பொளக்கென்று வெளியில் வந்து விழுந்தது சுண்டெலி.

அடி மேல் அடி எடுத்து வைத்து பங்களாவை நெருங்கின. வாசல் வரை வந்ததும் நாய் நின்று விட்டது. காவல் காக்கவேண்டும் என்பதால். பூனை மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தது. அதோ அந்தப் பெட்டிதான் என்று கைகாட்டியதும் எலி தன் வேலையை ஆரம்பித்தது. கூரான அதன் பற்கள் பதினைந்து நிமிடங்களில் பெட்டியைத் துளைத்து எடுத்துவிட்டன. இதோ இதுதானே என்று மோதிரத்தை எடுத்துக் காட்டிச் சிரித்தது.

மீண்டும் ஆற்றைக் கடந்து மூன்றும் கரையை அடைந்தன. நாய் பூனையை இறக்கிவிட்டது. பூனை எலியை இறக்கிவிட்டது. மோதிரம் பூனையின் வாயில் பத்திரமாக இருந்தது. உதட்டுக்குக் கீழே மெல்லிதாகக் கடித்தபடி மோதிரத்தைப் பத்திரப்படுத்தியிருந்தது பூனை.

நாய் வாள் வாள் என்று கத்தியபடி உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குச் சென்றுவிடுவோம். மோதிரத்தைக் கொடுத்து விடுவோம்.

நாயும் பூனையும் ஓட ஆரம்பித்தன. பூனை ஓடும் போதே ஒரு முடிவுக்கும் வந்திருந்தது. மோதிரம்தான் பிரச்னைக்கான தீர்வு என்று கண்டுபிடித்தது நான். அதைக் கொண்டுவர திட்டமிட்டவன் நான். ஆகவே மோதிரத்தை எஜமானருக்கு  அளிக்கவேண்டியவன் நானே. என்னைச் சுமந்து சென்றதைத் தவிர வேறு எதுவும் நாய் செய்யவில்லை என்னும்போது எதற்காக நான் அதோடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?

நாயைவிட பூனை வேகமாக ஓடியது. ஒரு கட்டத்துக்கு மேல் நாயால் பூனையைப் பார்க்கவே முடியவில்லை. அப்போதுதான்தான் ஏமாற்றப்பட்டோம் என்று அதற்குப் புரிந்தது. எவ்வளவு வஞ்சகமாக அந்தப் பூனை என்னையும் பயன்படுத்திக்கொண்டு, மோதிரத்தையும் கவர்ந்து கொண்டு, ஓடியே போய் விட்டது?

நாய் வீட்டைச் சென்றடைந்தது. திறந்திருந்த கதவு வழியே உள்ளே சென்றது. நம்பவே முடியவில்லை! எஜமானர் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் வீட்டம்மாவின் முகத்திலும் புன்னகை. நாய் உற்றுப் பார்த்தது. எஜமானரின் மடிமீது ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தது பூனை. அதோடு, நாயை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தது பாருங்கள், அதில்தான் நாய் உடைந்தே விட்டது!

அதற்குப் பிறகு நடந்ததை இங்கே விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை. மோதிரம் திரும்பக் கிடைத்த பிறகு படிப்படியாக அந்த வீட்டில் செல்வமும் செழிப்பும் சேரத் தொடங்கியது. 

நாய்க்கும் பூனைக்கும் இறைச்சியும் பாலும் நிறையவே கிடைத்தன. ஆனால், அதற்குப் பிறகு பூனையும் நாயும் பேசிக்கொள்ளவேயில்லை. பார்க்கும் ஒவ்வொரு முறையும் மோதிரம் நினைவுக்கு வர, நாய் உர்ரென்று குரல் கொடுக்கும். பூனையும் தன் மீசை துடிக்க மிய்ய்ய்ய்யாவ் என்று திரும்பக் கத்தும்.

நாளடைவில் இந்தப் பகை மேலும் வளர, நாய் பூனையைத் துரத்த ஆரம்பித்தது. பூனைக்கு நாய் நிரந்தர விரோதியாக மாறிப்போனது.  எஜமானருக்கும் வீட்டம்மாவுக்கும்தான் புரியவில்லை. ஒருகாலத்தில் ஒன்றாகத் தோட்டத்தில் தோள் மேல் தோள் போட்டு கதை பேசிக்கொண்டு திரிந்த இந்த இரண்டுக்கும் என்ன ஆனது?

அன்று தொடங்கி இன்று வரை நாயும் பூனையும் விரோதிகளாக இருப்பதற்கு இதுதான் காரணம். கூடவே, தன்னைப் பல் இடுக்கில் கவ்விக்கொண்டு வந்து, வேலை ஆனதும் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிய பூனையைக் காணும்போதெல்லாம் சுண்டெலி ஏன் ஓடு கிறது என்பதும் உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்!

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT