Endometriosis 
மங்கையர் மலர்

எண்டோமெட்ரியோசிஸ் வந்தால் செயற்கை கருத்தரிப்பு தான் தீர்வா..? - மருத்துவர் விளக்கம்!

கல்கி டெஸ்க்

பெண்களை பாதிக்கும் நோய்களில் மோசமான அல்லது கடுமையான நோய்களில் ஒன்றாக இந்த (Endometriosis) எண்டோமெட்ரியோசிஸ் பார்க்கப்படுகிறது. இது அன்றாட வாழ்க்கையை பாதிக்ககூடிய வலிமிகுந்த நிலை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கடுமையான மாதவிடாய் ஏற்படுவதோடு இது கருவுறுதலிலும் பிரச்சனைகளை உண்டு செய்யும். இந்த எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன, இது யாருக்கு பாதிப்பு உண்டு செய்கிறது, இதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் கடந்த 25 வருடங்களாக லேப்ராஸ்கோபி சிகிச்சையை வெற்றிகரமாக செய்து வரும் Dr. MALA RAJ, FIRM HOSPITALS, Chennai.

Dr.Mala Raj, Firm Hospitals

எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?

எண்டோமெட்ரியோசிஸ் என்பது எண்டோமெட்ரியம். அதாவது கருப்பையின் உள் இருக்கும் திசுக்கள் அதாவது சவ்வு பகுதியே எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சவ்வு மாதவிடாய் நேரத்தில் எல்லோருக்கும் வெளிவரும். ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும் நிலையில், கருப்பையின் உள்ளே இருக்கும் இந்த சவ்வு எதிர்புறமாக உள் நோக்கி திரும்பி குழாய் வழியாக கசிந்து கொட்டும். அதாவது, மாதவிடாய் நேரத்தில் சவ்வு வெளியே வந்து கொட்டுவது போன்று, உள்புறமாக திரும்பி அங்கும் சவ்வு உதிரத்தொடங்கும். இதனால் கர்ப்பப்பைக்கு அருகில் இருக்கும் குடல், சிறுநீர்ப்பை என பெரிய உறுப்புகளில் உள்ள திசுக்களில் சென்று ஒட்டிக்கொள்ளும். அதனால் அழற்சி ஏற்பட்டு தீவிர வலியை உண்டு செய்யும். அதனால் தான் எண்டோமெட்ரியோசிஸ் தாங்க முடியாத வலியையும் அதிக உதிரப்போக்கையும் உண்டு செய்கிறது.

எண்டோமெட்ரியோசிஸ் யாருக்கு வரும்?

எண்டோமெட்ரியோசிஸ் என்பது வளர்ந்த பிறகு தான் வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது சிறு வயது முதலே வரும். பருவமடையும் போதே இந்த எண்டோமெட்ரியோசிஸ் தொடங்க கூடும். சமீபத்திய தரவுகள், குழந்தை கருவில் இருக்கும் போதே எண்டோமெட்ரியோசிஸ் வரக்கூடிய அறிகுறிகள் தென்படும் என்று சொல்கிறது. அதற்கேற்ப பெண் குழந்தைகள் சிலவற்றுக்கு பிறந்த உடன் இலேசான உதிரம் பார்க்கலாம். ஆனால் இதற்காக பயப்பட வேண்டாம்.

குழந்தை வளர்ந்து பருவமடையும் போது மருத்துவரிடம் ஓர் பரிசோதனைக்கு அழைத்து செல்வதன் மூலம் எண்டோமெட்ரியோசிஸ் நிலை கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

  • கடுமையான வலி

  • அன்றாட வேலையை செய்ய முடியாத அளவு வலி

  • அதிக உதிரப்போக்கு

  • உடலுறவு கொள்வது சிரமமாக இருக்கும்

  • உடலுறவின் போது வலி இருக்கும்

  • கர்ப்பப்பை அருகில் இருக்கும் உறுப்புகளுக்கு பரவும் போது உதாரணமாக குடலை தாக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை வரலாம். சிறுநீர்ப்பையை பாதிக்கும் போது சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வரலாம்.

பருவமடைந்த குழந்தைகளுக்கு வயிறு வலி இருந்தால் அது எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனையா?

பருவமடைந்த பெண் குழந்தைகள், பதின்ம வயது மற்றும் டீன் ஏஜ் வயது பெண்கள் மாதவிடாய் நேரத்தில் அதிக வயிறுவலியால் துடித்தால் அலட்சியம் வேண்டாம். சில குழந்தைகள் வயிறு வலி என்று அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கிவிடுவதுமுண்டு. சில நேரங்களில் வலிக்கு மாத்திரைகள் எடுக்கும் போது வலி சரியாகிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் மருந்துகள் எடுத்த பிறகும் வலி குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி எண்டோமெட்ரியோசிஸ் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் வலிக்கு சிகிச்சை என்று மாறி மாறி எடுத்து எண்டோமெட்ரியோசிஸ் தான் காரணம் என்பதை அறியவே 7-8 வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. அதனால் சிறுவயதில் ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

சாக்லேட் சிஸ்ட் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

சாக்லேட் நீர்க்கட்டி (Chocolate cyst) என்பது எண்டோமெட்ரியோசிஸ் முட்டைப்பையில் வருவதை குறிக்கும் நிலை. இந்நிலையில் சிறு வயதினராக இருந்தால் அறுவை சிகிச்சை செய்வதை இயன்றவரை தவிர்ப்போம். ஆனால் இந்த சாக்லேட் நீர்க்கட்டி பெரிதாக இருந்தால் அது முட்டைப்பைகளை சேதப்படுத்திவிடும். அதனால் லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் இந்த சாக்லேட் சிஸ்ட் அப்புறப்படுத்திவிடுவோம். இந்த சிகிச்சையை திருமணத்துக்கு முன்பு செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் அந்த பெண்கள் திருமணம் ஆகும் வரை குறிப்பிட்ட மருந்து ஒன்றை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு எண்டோமெட்ரியோசிஸ் வருமா?

திருமணத்துக்கு பிறகும் சிலருக்கு எண்டோமெட்ரியோசிஸ் அல்லது சாக்லேட் சிஸ்ட் என்னும் எண்டோமெட்ரியோமா வரலாம். அப்படி இருந்தால் குழந்தை உள்ளதா என்பதை கவனிப்போம். குழந்தை இல்லை என்னும் போது இந்த எண்டோமெட்ரியோசிஸ் கட்டியை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது விந்தணுக்களை முட்டைப்பைக்குள் நுழைய விடாமல் தடுக்கும். இதனால் கருத்தரிப்பு தாமதமாகலாம். அல்லது பிரச்சனைக்கு உள்ளாக்கலாம். இவர்களுக்கு லேப்ராஸ்கோபி செய்து சாக்லேட் சிஸ்ட் அகற்றுவதன் மூலமும், எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனையால் கருப்பை அருகில் உள்ள உறுப்பில் ஒட்டியிருக்கும் உதிரத்தை வெளியேற்றுவதன் மூலம் கருத்தரித்தல் தடங்கலில்லாமல் நடக்க செய்யும்.

எண்டோமெட்ரியோசிஸ் வந்தால் செயற்கை கருத்தரிப்பு தான் சிறந்ததா?

பலரும் எண்டோமெட்ரியோசிஸ் என்பதை அறிந்தாலே கருத்தரித்தல் தாமதிக்கும் போது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கு சென்று விடுகிறார்கள். ஆனால் லேப்ரஸ்கோபி மூலம் எண்டோமெட்ரியோசிஸ் சரிசெய்தாலே செயற்கை கருத்தரிப்பு இல்லாமல் இயற்கையான முறையில் பிரசவிக்க முடியும். அதோடு எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை இருந்தால் கணவன் மனைவி உடலுறவிலும் பிரச்சனை இருக்கும். வலியால் பெண்கள் உடலுறவை தவிர்க்க செய்வார்கள். அவையும் இந்த சிகிச்சை மூலம் சரியாகிவிடும் என்பதால் இயற்கையான கருத்தரிப்பு சாத்தியமானதே.

சாக்லேட் சிஸ்ட் இருந்தாலும் கருத்தரித்தல் பிரச்சனையா?

எண்டோமெட்ரியோசிஸ் போன்று முட்டைப்பையில் அதாவது சினைப்பையில் வரும் சாக்லேட் சிஸ்ட் எண்டோமெட்ரியோமா என்று அழைக்கப்படும். இந்த இடத்தில் இருந்தாலும் இவை சினைப்பையில் இருக்கும் முட்டைகளை சேதப்படுத்தும். அல்லது குறைக்க செய்யும் இது ovarian reserve என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு லேப்ராஸ்கோபி மூலம் எண்டோமெட்ரியோமாவை அப்புறப்படுத்துவதன் மூலம் கருத்தரிப்பு இயற்கையாகவே நடைபெறும்.

பெண்களுக்கு நடுத்தர வயதில் எண்டோமெட்ரியோசிஸ் வருமா?

எண்டோமெட்ரியோசிஸ் பெண்களின் நடுத்தர வயதிலும் வரலாம். வயதுக்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை மாறுபடலாம். ஏனெனில் குழந்தைகள் பிறந்த நிலையில் 45 வயதுக்கு மேல் இருந்தால் கர்ப்பப்பை அகற்றலாம். எண்டோமெட்ரியோசிஸ் என்பது எவ்வளவு நாள் முட்டைப்பை சுறுசுறுப்பாக செயல்படுகிறதோ அவ்வளவு காலம் வரை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு மெனோபாஸ் காலத்தில் கூட வருவதை பார்க்க முடிகிறது.

எண்டோமெட்ரியோசிஸ் குணமாக சிகிச்சை செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் சாக்லேட் சிஸ்ட் என்னும் எண்டோமெட்ரியோமா என்னும் பிரச்சனைக்கு அனுபவம் வாய்ந்த நிபுணரால் மட்டுமே சரியான தீர்வை வழங்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இது சரியாக அப்புறப்படுத்தாத போது அது முட்டைப்பையை சேதப்படுத்திவிடலாம். இதனால் குழந்தைப்பேறு பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கிவிடலாம்.

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? - ஒரு விரிவான ஆய்வு! 

வித்தியாசமான நான்கு சூப் வகைகள்!

நினைவுத்திறனை கூர்மையாக்கும் 7 பயிற்சிகள்!

சப்புக் கொட்ட வைக்கும் பாப்டி சாட்டும், பாலக் சென்னா சூப்பும்!

பெண்கள் தன்னம்பிக்கை பெற சில டிப்ஸ்!!!

SCROLL FOR NEXT