செய்திகள்

பயங்கரவாதிகளின் சதித் தாக்குதலில் ராணுவ வாகனம் எரிப்பு; ஐந்து ராணுவ வீரர்கள் பலி!

கல்கி டெஸ்க்

ம்மு காஷ்மீர், மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து உள்ளார். இது எதேச்சையான விபத்தாக இருக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இந்த விபத்துக்குக் காரணம் என்று ராணுவம் தெரிவித்து இருக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை சுமார் 3.15 மணியளவில் நடந்துள்ளது. விபத்துக்குள்ளான ராணுவ வாகனம் பிம்பர் காலியிலிருந்து பூஞ்ச் பகுதியிலுள்ள சங்கியோடிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராணுவ வாகனம் தீ பிடித்து எரிந்ததற்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள்தான் காரணம். கையெறி குண்டுகளை வீசி அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம். இந்த தாக்குதலில் துரதிருஷ்டவசமாக ராஷ்ட்ரிய ரைபில் பிரிவைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த ஒரு வீரர் ரஜோரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்து குறித்து தகவல் அறிந்துததும் பூஞ்சிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள அந்தப் பகுதிக்கு 13 பிரிவு ராஷ்ட்ரிய ரைபில் படையின் தலைவர் விரைந்து சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்ற ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் நான்கு பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு உள்ளூர் தீவிரவாத குழுவான ஜம்மு காஷ்மீர் விடுதலை வீரர்கள் என்ற அமைப்பு பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த அமைப்பு அதன் சிறப்புப் படை ஒன்று சக்தி வாய்ந்த எல்இடி வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகத் தெரிவித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT