Stone Quarry 
செய்திகள்

கல்குவாரியில் வெடி விபத்து… பொதுமக்கள் போராட்டம்!

பாரதி

விருதுநகரில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கரமான வெடி விபத்தில் இதுவரை 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள கடம்பன்குளத்தில் சேது, ஸ்ரீராம் ஆகியோருக்கு சொந்தமான குவாரி ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல அங்கு இன்று பணியாளர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஜல்லி போன்ற பொருட்களைப் பாறைகளிலிருந்து உடைப்பதற்காக வெடி மருந்து பயன்படுத்தப்படும். அதற்காக கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களைப் பணியாளர்கள் வேனில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனையடுத்து அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் வெடி மருந்து இருந்த கட்டடம் அருகே இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அந்தப் பகுதியில் இன்னும் வெடி மருந்து இருப்பதால், போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருகே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவு வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆவியூர், உப்பிலிக்குண்டு கிராம மக்கள் அந்த கல் குவாரியை உடனே அகற்றக் கோரி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்பி அந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இதுவரை இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த குடோனில் எவ்வளவு வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது, எவ்வாறு வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT