சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிய டைனோசர் இனத்தின் எலும்புக்கூடு பாரிஸ் நகரில் ஏலம் விடப்படவுள்ளது. இந்த டைனோசர் இனம் இகுவானோடோன்டிடேயின் என்ற டைனோசர் வகையில் துணைக் குடும்பமான கேம்ப்டோசௌரிடேவைச் சேர்ந்ததாகும்.
இந்த அரியவகை டைனோசர் இனத்திற்கு 'பேரி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 8 லட்சம் முதல் 12 லட்சம் யூரோக்கள். இதை வாங்குவதற்கான ஏலம் பாரிசில் அமைந்துள்ள ட்ரூட் ஹோட்டலில் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2000வது ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்காவில் இந்த டைனோசரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரி டைனோசரின் பாகங்களை ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மற்றும் வானியற்பியல் நிபுணரிடம் ஆய்வுக்காக சென்றது. இதை அவர் தனது கொலராடோ அருங்காட்சியகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப்படுத்திய நிலையில், கடந்த 2022-ல் இத்தாலியைச் சேர்ந்த Zoic என்ற நிறுவனம் பேரி டைனோசரை மறு ஆய்வு செய்ய வாங்கியது.
அடுத்ததாக பொலோக்னா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த டைனோசர் மாதிரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்ததால் இந்த எலும்புக்கூட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். டைனோசர்களின் எலும்புக்கூடுகளை ஏலம் விடுவது இது முதல்முறை அல்ல.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த ஒரு ஏலத்தில் டைனோசரஸ் ரெக்சின் எலும்புக்கூடு சுமார் 5.5 மில்லியன் ஸ்விஸ் பணத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த டைனோசரின் எலும்புக்கூடுகள் சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.இதன் வரிசையில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான பேரி டைனோசரின் மதிப்பு பல மடங்கு அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.