Sticker removing 
செய்திகள்

இனி எந்தத் துறையினர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினாலும் அபராதம்!

பாரதி

பெருநகர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் 500 ரூபாய் அபராதம் என்று தெரிவித்த நிலையில், இன்று அந்த விதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து, இன்று போக்குவரத்து காவல் துறையினர் முழு மூச்சாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், அவர்கள் வேலைப் பார்க்கும் துறையை நம்பர் ப்ளேட்டிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். குறிப்பாக, நம்பர் ப்ளேட் மேல் ஒட்டுவது விதி மீறலாகும். எனவே, வாகனங்களின் முன்பகுதி மற்றும் நம்பர் ப்ளேட்களில் இத்தகைய ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அதற்கான அவகாசம் மே 1ம் தேதி வரை என்றும் போக்குவரத்து போலீஸார் தெரிவித்தது. அந்த தேதிக்கு மேலும் ஸ்டிக்கரை நீக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்றும், இரண்டாவது முறையும் ஸ்டிக்கரை அகற்றவில்லை என்றால், 1500 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று முதல் இது அதிரடியாக அமலுக்கு வந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக செல்லக்கூடிய வாகனங்களில், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்களா? என போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக, இன்று போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையினர் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அந்த கண்காணிப்பில் சிக்கியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு பேசியதாவது, “கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும், வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டில் ஒட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அரை மணி நேரமாக இங்கு நிற்கின்றோம்.

இரண்டு வாகனங்களில் மட்டும்தான் காவலர் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தன. மேலும், ஒரு சில நபர்களுக்கு வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் விவகாரம் தெரியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கி, ஸ்டிக்கரை அவர்களே எடுக்குமாறு கூறினோம்.  குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் கூட அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாகனத்தில் செல்கின்றனர். காவல்துறையிடம் இருந்துத் தற்காத்துக் கொள்ள அவர்கள் இப்படி செய்கின்றனர்” என்று பேசினார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT