புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் கைதிகள் இயற்கை முறையில் தோட்டம் உருவாக்கி உணவு தானியங்கள், பழங்களை சாகுபடி செய்து வருகின்றனர். சர்தார் வல்லபாய் படேல் நினைவாக அமைக்கப்பட்ட இத்தோட்டத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அந்தா சிறை வளாகத் தோட்டத்தை ஆளுநர் தமிழிசைக்கு கைதிகள் சுற்றிக் காட்டினர். அதன்பிறகு ஆளுநர் தமிழிசை அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது, திடீரென்று கைதிகள் அவரது காலில் விழுந்து கதறினார்கள். ஆயுள் தண்டனை கைதிகளான 27 பேர் தண்டனைக்காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருப்பதாகவும், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் கூறி கண்ணீர் மல்க கெஞ்சினர்.
"சமுதாயத்தில் நல்லபடியாக வாழ எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. நல்லபடியாக எங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வோம். கடைசி வாய்ப்பு உங்க கையிலதான் இருக்கு." என கைதிகள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், கைதிகளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "இந்த கைதிகள் உருவாக்கிய தோட்டம் அருமையாக உள்ளது. இத்தகைய பசுமையான சூழலில் கைதிகளின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்." எனத் தெரிவித்தார்.