Artificial brain created in 3D printing 
அறிவியல் / தொழில்நுட்பம்

3D பிரிண்டிங்கில் உருவாக்கப்பட்ட செயற்கை மூளை! எப்படி சாத்தியம்?

கிரி கணபதி

இன்றைய காலத்தில் தொழில்நுட்பமானது பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், உலகிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மூளையை, நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 

இந்த அற்புதமான கண்டுபிடிப்பு நரம்பியல் துறையில் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் என்பது, பொருட்களை முப்பரிமாணத்தில் உருவாக்கும் நவீன தொழில்நுட்பமாகும். இதைப் பயன்படுத்தி மிகவும் சிக்கலான வடிவங்களைக் கூட எளிதாக உருவாக்கலாம். இது கொஞ்சம் கொஞ்சமாக எல்லா துறைகளிலும் கால் பதிக்கத் தொடங்கிவிட்டது. 

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் குழுதான், 3டி பிரிண்டிங் முறையில் மூளையை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது மனித மூளை போலவே செயல்படும் என அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இந்த அற்புதமான கண்டுபிடிப்பு நரம்பியல் வளர்ச்சியில் பிரச்சனை இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே 3D பிரிண்டிங் Vertical Layering முறையிலேயே செயல்படும். ஆனால் இந்த செயற்கை மூளையை உருவாக்க Horizontal Layering முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மனித மூளையை உருவாக்கும் செயல்முறை துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையை பின்பற்றியுள்ளனர். 

இதுகுறித்து பேசிய அந்த பேராசிரியர் ஜாங் “இந்த செயற்கை மூளையைப் பயன்படுத்தி மூளை செல்கள் பற்றியும் மூளையின் பாகங்கள் எப்படி தொடர்பு கொள்கிறது என்பது பற்றியும் ஆய்வு செய்ய முடியும்” எனக் கூறினார். மற்றொரு ஆய்வாளர் “இந்த மூளை மெல்லிய திசுக்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நியூரான்கள் வளர்வதற்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் இதற்கு சீராகக் கிடைக்கும்” எனக் கூறினார்.

என்னதான் இந்த செயற்கை மூளையின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தும் நன்றாக தொடர்பு கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. மனித மூளை போலவே இதில் நியூரோ டிரான்ஸ்மிட்டர், மிரரிங் இன்ட்ராக்ஷன் மூலமாக தகவலைப் பகிர்ந்துகொள்கின்றன. எனவே இதன் மூலமாக மனிதர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

டவுன் சின்ரோம், அல்சைமர் போன்ற பாதிப்பு இருப்பவர்களின் மூளை செல்களுக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம், மூளை செல்களின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் சார்ந்த பல விஷயங்களை இந்த செயற்கை மூளையின் உதவியால் தெரிந்து கொண்டு குணப்படுத்த முடியும் என்பதால், மூளை நோய்கள், பார்க்கின்சன், அல்சைமர் நோயாளிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வரமாக அமையும் என நம்பப்படுகிறது. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT