Eid-ul-Adha 2024 
ஸ்பெஷல்

Eid-ul-Adha 2024: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளின் சிறப்புகள்!

தேனி மு.சுப்பிரமணி

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாவாக தியாகத் திருநாள் இருக்கிறது. இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான “ஈத் அல்-அழ்ஹா” (Eid al-Adha) என்று அழைக்கப்பட்டாலும், இந்திய நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் (பக்ரா+ஈத்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள், 'ஹஜ்' செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது, புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும் இந்தப் பெருநாளில், தொழுகை நடைபெற்ற பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுத் தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்து வந்த அவருக்கு, இறுதியில் அவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் மகன் பிறந்தான். இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயில், குழந்தைப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார்.

அதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்த பொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கி வைத்த இறைவன், இஸ்மாயிலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்குக் கட்டளையிட்டார்.

மேற்கூறிய இந்த நிகழ்வின் அடிப்படையிலேயேத் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு, ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது முழுமையடைந்ததாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றது.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள், இந்த நாளில் புத்தாடை அணிந்து, தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்தத் தொழுகை, 'திடல்' போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன.

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

SCROLL FOR NEXT