Mary Kom. 
விளையாட்டு

குத்துச்சண்டையிலிருந்து ஓய்வுபெற்றார் மேரி கோம். ஏன் தெரியுமா?

ஜெ.ராகவன்

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 41 வயதான மேரி கோம், வயது வரம்பு காரணமாக தான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் உயர்நிலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வம் குறையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்தான். 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடைபிரிவில் அவர் வெண்கலம் வென்றார். ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், கடைசியாக 2021 இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 7 பதக்கங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 பதக்கங்கள் மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் என அவரது பதக்கப்பட்டியல் நீள்கிறது. எனினும் 2021 இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே இன்கிரிட் வாலென்சியாவிடம் தோற்றுப்போனார்.

குத்துச்சண்டை போட்டியில் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர் மேரி கோம். ஆடவர் ஆனாலும் சரி, மகளிர் ஆனாலும் சரி அதிகபட்சம் 40 வயது வரை மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம் என்ற சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

நான் தளர்ந்துவிடவில்லை. என்னிடம் இன்னும் வலிமையும் துடிப்பும் இருக்கிறது. ஆனால், வயது வரம்பு காரணமாக கட்டாயமாக வெளியேறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஒருவகையில் நான் ஓய்வுபெறுவது சரியானதுதான். ஏனெனில் நான் குத்துச்சண்டையில் நான் அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்றார் மேரி கோம்ஸ்.

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏ.ஐ.பி.ஏ. மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் வடகொரியாவின் ஜாங் சாங் ஏ என்னும் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மேரிகோம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் மேரி கோம்ஸ் தங்கம் வென்றார். அடுத்து 2018 இல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். இப்படி அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று 6 முறை வெற்றிவாகை சூடி குத்துச்சண்டை உலகில் தனி இடத்தை பிடித்தவர் மேரி கோம்.

மேரி கோம்ஸ் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். சிறந்த பெண்மணி விருதை மணிப்பூர் அரசு வழங்கி கெளரவித்துள்ளது. மேலும் 2020 இல் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருங்கால குத்துச்சண்டை வீர்ர்களுக்கு மேரி கோம் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று சொன்னால் மிகையாகாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT