Eyes 
ஆரோக்கியம்

கண்கள் பேசுமாமே, தெரியுமா?

முனைவர் என். பத்ரி

கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லை:

அழகான கண்கள் ஒரு நபருக்கு அழகிய தோற்றத்தையும், முகப்பொலிவையும்  தருகின்றன. நமது ஐம்பொறிகளில் கண் முக்கிய இடம் வகிக்கிறது. ஏனைய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை மட்டுமே அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால், கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளையும் சென்றறிந்து, சில சமயங்களில் பழைய நினைவுகளையும் மீட்டறிந்து, அதனை மூளைக்கு உணர்த்தும் திறனைக் கொண்டது.

கண்ணைத் தவிர மற்றைய பொறிகள் நின்று பற்றுவன. கண் மட்டுமே சென்று பற்றும் சிறப்பினைக் கொண்டது. கண்ணின் இச்சிறப்புக் கருதியே 'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை’ எனக் கூறப்படுகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருப்பதுவும் இதுவே.

அடேங்கப்பா, அனைத்தையும் உணர்த்தும் நம் கண்கள்:

நமது உடலுறுப்புக்களில் நன்றோ, தீதோ ஏதேனும் நிகழுமாயின், அதனை உலகுக்கு கண்ணே, கண்ணீர் வழியே தெரியப்படுத்துகிறது. ஒரு செயலுக்கு இசைவை தருவதும், மறுப்பை தெரிவிப்பதுவும் கண்களே.

சிலரின் கண்களை ஊடுருவியே, அவர்களின் உண்மையான மன ஓட்டத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.                 

கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. மேலே  பார்த்தால் ஆளுமை செய்கிறது. கீழே பார்த்தால் அடிபணிகிறது. விரிந்தால் வியக்கிறது,ஆசைப்படுகிறது. சுருங்கினால் சந்தேகப்படுகிறது. கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

வலமும், இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. படபடத்தால் விரும்புகிறது,வெட்கப்படுகிறது. மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது. எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது. கண்ணுக்குள் பார்த்தால் காதல் வசப்படுகிறது. இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது. இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது. வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது. வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது. மூடித்திறந்தால் உள்ளுக்குள் எதையோ தேடுகிறது. கைகளால் மறைத்தால் எதையோ மறைக்கிறது. கைகளால் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது. மூடித்திறந்தால் வெறுக்கிறது. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது. புருவங்கள் சுருங்கினால் பேச மறுக்கிறது. கண்களும், புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபப்படுகிறது. 

கண் பாதுகாப்பு...

நமது உடலின் மிக முக்கிய உறுப்பான கண்களை முறையாக பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் முதற்கடமையாகும். கண்களை பாதுகாக்க இறைவனே கண்களுக்கு இமைகளை கொடுத்திருக்கிறான். நல்ல கண் பார்வைக்கு கீரை வகைகளையும், பச்சை காய்கறிகளையும் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

கோபப்படுவதாலும், திரைப்படம், தொலைக்காட்சி, கணினிகள் ஆகியவற்றை தொடர்ந்து  பார்ப்பதனாலும் கண் கெடும் வாய்ப்புண்டு.

கணினியில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறான நேரங்களில் கண் இமைகள் இமைப்பதற்கு மறப்பதால், இமைக்கும் அளவு குறைந்து விடுகிறது. இதனால் கண்கள் வறண்டு போகின்றன. இதனை தவிர்க்க மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

கண்களின் அடிப்பாகத்தை அவ்வப்போது உள்ளங்கையால் லேசாக அழுத்திவிடவேண்டும்.

பச்சை அல்லது நீல நிறமான பொருட்களை அவ்வப்போது பார்க்க வேண்டும். இந்த இரு நிறங்கள் கண்களுக்கு இதமானவை.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கண்களை சுழல விட வேண்டும்.

அவ்வப்போது கண்கள் இமைப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

மேலும் நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்து பணி செய்வதை தவிர்ப்பது நல்லது.

தினமும் காலையில் எழுந்ததும் படுக்கை அறை சுவரில் இருக்கும் ஏதாவது ஒரு படத்தைக் குறிப்பிட்ட தொலைவில் இருந்து ஒவ்வொரு கண் வழியாக தனித்தனியாக பார்க்கவேண்டும். இரண்டு கண்களிலும் பார்வை ஒரே மாதிரியாகத் தெரிந்தால் பிரச்சினை எதுவும் இல்லை. என்றாவது ஒரு நாள் ஒரு கண்ணில் பார்வை நன்றாகத் தெரிந்து, இன்னொரு கண்ணில் சற்றுத் தெளிவில்லாமல் தெரிந்தால், கண் மருத்துவரிடம் உடனே ஆய்வுக்கு செல்ல வேண்டும். இதன்மூலம் கண்பிரச்சினையை தொடக்க நிலையிலேயே சரி செய்ய முடியும்.

ஒருவர்  நாற்பது வயதை நெருங்கும்போது தமது இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.

வெள்ளெழுத்துப் பிரச்சினை இருந்தால் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்ணில் நீர் அழுத்தத்துக்கு தீர்வு காண உரிய ஆய்வு முக்கியம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன்மூலம் விழித்திரை பாதிப்பிலிருந்து தப்பலாம்.

கண் தானம்:

இறந்த பிறகு கண் தானம் செய்வதன் மூலம் இருவர் பார்வை பெற நம்மால் உதவமுடியும். ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய வேண்டும். இறந்தவரின் இமைகளை ஈரமான பஞ்சினால் மூடி வைக்கவேண்டும். அந்த அறையில் மின்விசிறியை அணைத்து விடவேண்டும். கண் தானம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. நீரிழிவு நோயுள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் கண் தானம் செய்யலாம். புற்று நோய், மஞ்சள்காமாலை, நச்சுக்கிருமித் தொற்று பாதிப்புள்ளோர் கண் தானம் செய்ய முடியாது.

இது சார்ந்த மேலும் விவரங்களை பெற தமிழக அரசின் இலவச தொலைபேசி எண் 104ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாலையில் நடக்கும்போது, ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு நடந்து பார்த்தால் கண்களும், பார்வையும் நமக்கு கடவுள் கொடுத்த எப்படிப்பட்ட அருட்கொடை என்பது நமக்கு தெளிவாக புரியும்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT