late night food 
ஆரோக்கியம்

கல்லீரல் பாதிப்புக்குக் காரணமாகும் இரவு நேர முறையற்ற உணவுப் பழக்கம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

டலில் ஏற்படும் கல்லீரல் பாதிப்புக்கும் இரவு நேர உணவுக்கும் அதிக தொடர்பு உள்ளது. தாமத இரவு உணவு கலாசாரம் பெருகப் பெருக கல்லீரல் மருத்துவமனைகளும் பெருகி வருகின்றன என்பதுதான் உண்மை. உடலில் உள்ள பெரிய உள் உறுப்பான கல்லீரல் பெரும்பாலும் பாதிக்கப்படுவது நம்முடைய உணவுப் பழக்கத்தாலும், வாழ்வியல் பழக்கத்தாலும்தான்.

பகல் நேரத்தில் நாம் எதை சாப்பிட்டாலும் செய்யும் வேலைக்கு அவை எளிதில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிக்க கூடியதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இரவு ஏழு மணிக்குள் லேசான உணவான ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை சாப்பிடலாம். எண்ணெய் அதிகம் சேர்க்காத தோசை, ஆப்பம், சப்பாத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் 2 எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாம். ஓட்ஸ் கஞ்சி, காய்கறி கலவைகள் (அவியல், சாலட்) அல்லது பழக்கலவைகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் பாலோ, கிரீம்களையோ சேர்க்கக்கூடாது.

இரவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவை இரவில் சாப்பிட ஏற்றவை. இவை செரிமான அமைப்பை மிகவும் இலகுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இரவு உணவில் பழங்களை தேர்ந்தெடுப்பதற்கு பதில் காய்கறி சாலட்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். அதிகமான பசி இருந்தால் சூப் போன்ற சக்தி நிறைந்த திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு நேரங்களில் குறைந்த கார்ப்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.  ஜீரணிக்கக் கடினமான உணவுகளான பிரியாணி, பாஸ்ஃபுட், பரோட்டா, அசைவ உணவுகள், மசாலாக்கள் நிறைந்த உணவுகளை வயிறு முட்ட எடுத்துக் கொண்டால் தூக்கம் சரியாக வராது. எளிதாக ஜீரணிக்கும் உணவுகள் நம்மை லேசாக உணர வைப்பதுடன் நல்ல உறக்கமும் ஏற்படும்.

இரவு 9 மணிக்கு மேல் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. இரவில் பெரும்பாலும் எடுப்பது ‘பொய் பசி’தான். இதற்கு சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் அல்லது ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். மது குடித்து கெட்டுப் போகும் கல்லீரலும் இரவில் ஹெவியான உணவை எடுத்துக்கொள்ளும் கல்லீரலும் இணையான பாதிப்பை சந்திக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதை சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும்.இரவு எட்டு மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது நல்லது. உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை விநியோகிக்கும் புரோபயாடிக்குகளை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு நன்மை தருவதாகும். இரவில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைந்த கொழுப்புள்ள பாலை அருந்துங்கள். ‘பசித்துப் புசி’ என்ற தாரக மந்திரத்தை கடைபிடிக்க நோயின்றி வாழலாம்.

சமைக்க வேண்டாம் மென்று தின்றாலே பலன் தரும் மூன்று இலைகள்...!

Biggboss 8: யார் கெத்து டாஸ்கில் கோட்டைவிட்ட ஆண்கள் அணி!

வைணவத்தைக் காக்க கண்களை இழந்த கூரத்தாழ்வான்!

உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம், தேங்காய்ப் பால் முறுக்கு!

SCROLL FOR NEXT