நன்கு சமச்சீரான சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட, தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருக்கும். தாய்ப்பால் ஊட்ட ஊட்டத்தான் பால் சுரப்பது அதிகரிக்கும். குழந்தை குடிக்கவில்லை என்றோ, பால் சுரப்பு பத்தவில்லை என்றோ நாமே பாலூட்டுவதைத் தவிர்க்கக் கூடாது. சில எளிய வீட்டுப் பொருட்களைக் கொண்டே பால் சுரப்பை அதிகரிக்க முடியும். அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
* முருங்கை கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து பகல் உணவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும்.
* சுரைக்காயை பாசிப்பருப்புடன் சீரகம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
* முற்றிய பப்பாளிக்காயை தனியாகவோ, மற்ற காய்கறிகளுடனோ சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
* வெள்ளை பூண்டை தோல் நீக்கி பல்லு பல்லாக எடுத்து நெய்யில் வதக்கி பாலில் வேக விட்டு, தேவையெனில் சர்க்கரை சேர்த்து அருந்த பால் சுரப்பு அதிகரிக்கும்.
* காலையில் ஒரு டம்ளர் பாலில் இரண்டு பாதாம் பருப்பை பொடியாக்கி போதிய கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட பால் வளம் அதிகரிக்கும்.
* கேழ்வரகை தினசரி உணவுடன் தாராளமாக சேர்த்துக்கொள்ள பால் சுரப்புக்கு உதவும்.
* பச்சைக் கோரைக் கிழங்கை எடுத்து அரைத்து மார்பகங்களில் பற்றிட்டுக்கொள்ள தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
* ஓரிதழ் தாமரையின் இலையை அம்மியில் அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஆழாக்கு பசும் பாலில் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் பருக, பால் நன்கு சுரக்கும்.
* சுறா மீனை குழம்பாகவும் புட்டாகவும் செய்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
* பார்லி கஞ்சி குடிக்கலாம். முட்டை, மீன், பச்சைப்பயறு போன்ற உணவுப் பொருள்களை நாள்தோறும் சேர்த்து வர பால் சுரப்பு அதிகரிக்கும்.
* தரைப் பசலையை உணவில் சேர்த்துக்கொள்ள தாய்ப்பால் அதிகரிக்கும்.
* வேண்டிய அளவு வெற்றிலையை எடுத்து தணலில் வாட்டி , மார்பகங்களின் மீது கட்டிக் கொண்டாலும் தாய்ப்பால் சுரக்கும்.
* கோஷ்டம், அமுக்கிரா கிழங்கு, வசம்பு, யானைத் திப்பிலி ஆகியவற்றை நன்றாக அரைத்து மார்பகத்தில் பற்றாக போட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
* அம்மான் பச்சரிசி கீரையை சேர்த்துக்கொள்ள பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
உணவோடு நல்ல தூக்கம், சந்தோஷமான மனநிலை போன்றவையும் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.