
தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர், 2009ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு பட உலகில் டாப் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் வெளியான ‘தாண்டேல்‘ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் Raw Talks with VK Podcast என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் நாக சைதன்யா, சமந்தாவுடனான விவாகரத்து குறித்து பேசியபோது, தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்து செல்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது பரஸ்பர முடிவு என்றும் கூறினார். தானும் சமந்தாவும் திருமணம் செய்வதற்கு முன் பின்விளைவுகளை கவனமாக பரிசீலித்ததாக வெளிப்படுத்தினார். இது தனக்கு ஒரே இரவில் நடக்கவில்லை என்றாலும் எல்லாமே ஒரு காரணத்திற்காக நடந்தாகவும், அதற்காக தான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.
மேலும், இருவரும் விவாகரத்தை தாண்டி, தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தான் 'உடைந்த குடும்பத்தில்' இருந்து வந்தவன் என்றும், அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று தெரியும் என்பதால் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன், கவனமாக சிந்திப்பதாகவும் நாக சைதன்யா குறிப்பிட்டார்.
"நாங்கள் சொந்த காரணங்களுக்காக, எங்கள் வழியில் செல்ல விரும்பியதால் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அவரவர் சொந்த வழியில் செல்கிறோம் இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை" என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தனக்கு மீண்டும் கிடைத்த காதலால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவுடனான தனது உறவை மக்கள் மரியாதையுடன் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், "விவாகரத்து என்பது அனைவரது வாழ்க்கையில் பொதுவானதும் எனும் போது நான் மட்டும் ஏன் குற்றவாளியாக நடத்தப்படுகிறேன்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். ஊடகங்கள், ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை மதிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமி டகுபதிக்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை அமலாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார். லட்சுமி டகுபதி வேறு ஒருவரை மறுமணம் செய்துகொண்டார்.
நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார். இவர்கள் இருவரும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். வேக வேகமாக நடந்த இவர்களது திருமணம் அதேபோல் வேகமாகவே 2021-ல் விவாகரத்தில் முடிந்தது. சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கடந்த டிசம்பர் மாதம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.