

சதுரம், நீள் சதுரம், வட்டம், நெல்லிக்காய், வேப்பம்பழம் போன்ற பல வடிவங்களில் செம்பு, ஈயம், வெள்ளி, பொன் உலோகங்களால் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. யானை, புலி, மீன், வில், அம்பு, சிங்கம், காளை போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டு, அரசின் மேன்மை, செல்வ செழிப்பு, கடல் கடந்து பரந்த ஆட்சி ஆகியவற்றை வெளிப்படுத்தின. தம்பிடி, அரையணா, காலணா போன்ற பழைய நாணய சொற்கள் இன்றைய தலைமுறைக்கு புதிதாக உள்ளன.
அக்கசாலை என்பது அரசு அனுமதி பெற்று வெளியிடும் பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன நாணயங்களைச் செய்யும் நாணயசாலை மற்றும் பொன் நகைகள் செய்யும் உலோக பட்டறை ஆகும். அதன் வடிவம், தரம், எடை, அளவு போன்றவைக் குறையாமல் அமைத்து அரச இலட்சினை ஒருபுறமும் நாணய மதிப்புக்குறி மறுபுறமும் அமையுமாறு முத்திரையிடும் தொழிற்சாலைக்கு அக்கசாலை என்று பெயர்.
பாண்டியர்களின் புகழ்பெற்ற துறைமுக நகரமான கொற்கை போன்ற பண்டைய தலைநகரங்களில் நாணயங்கள் தயாரிக்கும் அக்கசாலைகள் இருந்ததற்கான வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன.
அக்கசாலை:
காசுகள் கால மாற்றத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் பலவிதமாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. கிமு 680ல் கிரேக்க நாட்டில் லிடியா நகரில் வாழ்ந்த வணிகர் ஒருவரின் முத்திரை பதித்த காசு தான் உலகின் முதல் காசு என்று கருதப்படுகிறது. இக்காசு பொன், வெள்ளி கலந்து கலப்பு உலோகத்தால் உருவாக்கப்பட்டது.
காசுகளை அச்சடிக்கும் இடத்தை அதாவது நாணயங்களை அச்சடிக்கும் இடத்தை அக்கசாலை என சிலப்பதிகார உரையில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆற்காடு, திருவரங்கம், பழவேற்காடு, நாகை, தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, கொற்கை, சத்தியமங்கலம் போன்ற இடங்களில் முன்னர் நாணய சாலைகள் இருந்துள்ளன.
நாணயங்களின் உலோகம் மற்றும் வடிவமைப்பு:
நாணயங்கள் செம்பு, ஈயம், வெள்ளி, பொன் போன்ற உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டன. இந்த காசுகளின் அதாவது நாணயங்களின் வடிவமைப்பு என்று பார்த்தால் சதுரம், நீண்ட சதுரம் மற்றும் ஒரு சில சோழர் மற்றும் சேரர் காசுகள் வட்ட வடிவத்திலும் காணப்பட்டன.
நெல்லிக்காய் வடிவிலும், வேப்பம்பழம் வடிவிலும் கூட சில பொற்காசுகளை நாணயம் சேகரிப்பாளர்கள் சேகரித்துள்ளனர். நாணயங்களில் பலவிதமான சின்னங்களும் பொறிக்கப்பட்டு காணப்படுகின்றன. யானை, புலி, மீன், அம்பு போன்ற சின்னங்களும் பொறிக்கப்பட்டு காணப்படுகின்றன.
நாணயங்களில் உள்ள சின்னங்கள்:
சேரர் சோழர் பாண்டியர் காலச் செப்பு காசுகளில் யானை சின்னம் காசு முகப்பில் அமைந்துள்ளது. யானை உருவத்திற்கு மேல் மங்கள சின்னங்களான ஸ்வஸ்திக், கும்பம், மத்தளம் போன்ற உருவங்களும் சிறு உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சங்க கால காசுகளில் யானை சின்னம் பொறிக்கப்பட்டதற்கான நோக்கம் அது அரசர்களின் வலிமையையும் மேன்மையும் காட்டுவதற்காக இருக்கும்.
வில், அம்பு, புலி, மீன், காலை சிங்கம் ஆமை போன்ற சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. செல்வத்தை குறிப்பிட மாடு சின்னமும், வலிமையைக் காட்டும் சின்னமாக காளை சின்னமும், வளமான வாழ்வையும், செல்வ செழிப்பையும், கடல் கடந்து தன்னுடைய ஆட்சி பரந்து விரிந்துள்ளதையும் காட்டுவதற்கு மீன் சின்னமும் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன. காட்டு ராஜாவாக விளங்கும் சிங்கம் போல் மண்ணை ஆளும் மன்னர்கள் சிங்க சின்னத்தை பொறித்துள்ளனர்.
சங்க கால சேரர்களின் காசுகளில் முன் பக்கத்தில் யானை, குதிரை, சிங்கம் இவைகளோடு மங்கல சின்னங்களும் பிற உருவங்களும் பதிக்க பெற்று உள்ளன. பின்பக்கத்தில் வில், அம்பு, அங்குசம் போன்றவற்றையும் காணப்படுகின்றன.
சங்ககால சோழர் காசுகளின் முன்பக்கத்தில் பொதுவாக யானை உருவமும், பின் பக்கத்தில் புலி, மரம், குடை, வேல் போன்ற சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். காசுகள் சதுரம், நீள் சதுரம், வட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. சங்ககால பாண்டியர் காசுகளின் முன்பக்கத்தில் வலது அல்லது இடது பக்கம் நோக்கி நிற்கும் யானையும் சிங்கமும், அதனுடன் மீன் அல்லது வேல், சூலம், தொட்டிக்குள் இரண்டு அல்லது நான்கு ஆமைகள், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் என இவற்றில் ஏதாவது ஒன்றும், பின்பக்கத்தில் பெரும்பாலும் மீன் குறியீட்டு சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பாண்டியர்கள் வெள்ளி, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களால் காசுகளை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் செம்பு காசுகளே அதிக அளவில் கிடைக்கின்றன. இவை சதுரம் நீள் சதுரம் வடிவங்களில் காணப்படுகின்றன.
இன்றைய தலைமுறைகள் கேட்டிறாத வார்த்தைகள்:
தம்பிடி, அரையணா, காலணா, ஓர் அணா, நாலணா, எட்டணா, பத்தணா, முக்கா ரூபாய் போன்ற வார்த்தை பிரயோகங்கள் இன்னும் சென்னையில் புழக்கத்தில் உள்ளன. தொண்டி காலணா எனும் பெயரில் நாணயத்தின் நடுவே ஓட்டை காணப்படும்.
இதை பலர் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் கோர்த்து கட்டி இருப்பதையும் முற்காலத்தில் கண்டிருக்கலாம்.ஒரு காலத்தில் சென்னையில் அதுவும் மின்ட் பகுதியில் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு வந்துள்ளன.
பிறகுதான் வேறு இடத்துக்கு பெயர்ந்து போனது. நாணயங்கள் தங்கத்திலிருந்து வெள்ளி, வெண்கலம், பித்தளை, செம்பு, அலுமினியம், நிக்கல் என்று பல உலோகங்களில் அச்சிடப்பட்டுள்ளது. நம் அடுத்த தலைமுறை இந்த நாணயங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. நாமே நம் கொள்ளு தாத்தா சேர்த்து வைத்திருந்த நாணயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறோம்.
நம் காலத்தில் நாம் சிறுவர்களாக இருந்தபோது ஒரு பைசா, ரெண்டு பைசா, ஐந்து பைசா போன்ற அலுமினியத்தால் ஆன காசுகளைக் கண்டிருக்கிறோம் ஆனால் அவை எல்லாம் இப்பொழுது வழக்கொழிந்து விட்டது.