
நமது அன்றாட உணவுப் பொருளாகிவிட்ட உருளைக்கிழங்கு வரலாறு வியப்பானதாகும்.
முதலில் உருளைக்கிழங்கை தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி நாட்டில் தான் கண்டுபிடித்தார்கள். 1537 இல் தங்க வேட்டைக்காக தென் அமெரிக்காவுக்கு சென்ற ஸ்பெயின் நாட்டு வீரர்கள் ஆண்டிஸ் மலைப்பிரதேசத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தபோது அங்கு வாழ்ந்த இங்கர் இன மக்கள் வீரர்களின் பசியைத் தணிக்க வேகவைத்த ருசிமிக்க கிழங்கை கொடுத்தனர். அதுவே உருளைக்கிழங்கு. அதன் பிறகு சிலி நாட்டில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிவப்பிந்தியர்கள் உண்பதை 1555இல் பிரான்சிஸ் டிரேக் என்பவர் கண்டார்.
உருளைக்கிழங்கு செடியின் பூவை பெண்கள் தலையில் சூடவும், ஆண்கள் தங்கள் கோட்டுகளில் செருகி கொள்ளவுமே முதன் முதலில் பயன்படுத்தினார்கள். கிழங்கை உண்ணும் பழக்கம் பிற்பாடு தான் ஏற்பட்டது. தங்கத்தை தேடிச் சென்ற ஸ்பெயின் நாட்டு வீரர்களுக்கு தங்கம் கிடைத்ததோ இல்லையோ ருசிமிக்க கிழங்கான உருளைக்கிழங்கு கிடைத்தது. அவர்கள் மூலம் அது ஸ்பெயின் நாட்டில் பரவியது.
பின்னர் 1580 இல் அந்த கிழங்கு இத்தாலிக்கு கொண்டு போகப்பட்டு பயிரிடப்பட்டது. பிறகு அங்கிருந்து மற்ற மேலை நாடுகளுக்கு அறிமுகம் ஆயிற்று. ஆஸ்திரியா ஜெர்மனி ஆகிய நாடுகளில் உருளைக்கிழங்கு செடி பெரும் அளவில் பயிரிடப்பட்டது.
சர் வால்டர் ரேலே என்பவர் 1588-ல் அயர்லாந்தில் தமது தோட்டத்தில் அதை பயிரிட்டார். 1590இல் அது இங்கிலாந்துக்கும் பரவியது. 1612இல் இங்கிலாந்துக்கு பெர்முடா நாட்டுக்கும் 1613-இல் அங்கேயிருந்து வெர்ஜீனியாவுக்கு பரவியது. இவ்வாறு காட்டு கிழங்காக இருந்த உருளைக்கிழங்கு நாட்டு மக்கள் உண்ணும் உணவு பொருளாகியது. ஆனால் ஆரம்பத்தில் பொதுமக்களிடையே இந்த கிழங்கு பிரபலமாகவில்லை. இந்த கிழங்கு புதுமையாக இருந்ததால் சீமான்கள் மட்டுமே இதை உணவில் சேர்த்துக் கொண்டனர்.
ஸ்காட்லாந்தில் பாதிரிமார்களும் சமய துறையினரும் உருளைக்கிழங்கை உண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வரவர அயர்லாந்தில் இக்கிழங்கு பொதுமக்களின் உணவாக மாறியது அந்த நாட்டு மன்னன் அனைவரும் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டதோடு குடியானவர்கள் உருளைக்கிழங்கை கட்டாயமாக பயிரிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார். அத்துடன் அவர் தனது அரண்மனை தோட்டத்திலேயே அதை பயிரிட்டார்.
ஃபிரெடரிக் மன்னரிடம் போர் கைதியாக இருந்த ஆந்த்வா ஆகுஸ்தை பரமேந்த்வார் என்னும் விஞ்ஞானி உருளைக்கிழங்கின் ருசியையும் மகத்துவத்தையும் கண்டறிந்து அவர் விடுதலையானதும் தனது நாடான பிரான்ஸில் அதை எடுத்துச் சென்று பயிரிட ஆவன செய்தார்.
அப்போது பிரான்ஸ் நாட்டு மன்னனாக இருந்த பதினான்காம் லூயி அதற்கு ஆதரவு தந்து பிரான்சில் அதை பெருவாரியாக பயிரிட கட்டளையிட்டார். அதற்கென உருளைக்கிழங்கை பற்றிய புத்தகங்களும் சுற்றறிக்கைகளும் விளம்பர நோட்டீஸ்களும் தயாரித்தும் உருளைக்கிழங்கை பயிரிடும் விதத்தை விளக்கியும் நாடெங்கும் பரப்பினார்.
அத்துடன் லூயி மன்னன் உருளைக்கிழங்கு செடியின் பூவை தனது சட்டை பொத்தான் துளையில் பொருத்திக்கொண்டு தர்பாருக்கு போனார். ராணிமேரிஅண்டாய்னெட் அந்த பூக்களை கொண்டு கூந்தல் அலங்காரம் செய்து கொண்டாளாம். போர்ச்சுகீசியர் மூலமாக தான் உருளைக்கிழங்கு இந்தியாவுக்கு வந்தது. ஆனால் நம் நாட்டு மக்களால் அப்போது அது விரும்பிய உணவு பொருளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வந்த பிறகு அவர்கள் மூலம் கிழங்கின் மகிமையை நம் நாட்டு மன்னர்கள் அறிந்து உணவில் சேர்த்துக் கொண்டனர். மெல்ல மெல்ல அதை மற்றவர்களும் உண்ண தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் அதை பயிரிட தொடங்கினர். சிவப்பிந்தியர்கள் உருளைக்கிழங்கை பாபா என்கிறார்கள். ஹெயிட்டித் தீவில் இதற்கு பட்டாட்டா என்று பெயர்தான். ஆங்கிலேயர்கள் இதை பொட்டேட்டோ என்று பெயரிட்டனர்.
இப்போது உலகெங்கும் பரவியது உணவு பொருளாக ஆகியிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமாக விளைவிக்கப்படுகின்ற பொருட்களில் ஐந்தாம் இடத்தை பிடித்திருப்பது உருளைக்கிழங்கு. உலக அளவில் வருடம் தோறும் 30 கோடி டன்னுக்கும் அதிகமாக உருளைக்கிழங்கு விளைவிக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கை நினைத்துப் பார்க்கும்போதே மக்களின் மனதில் தோன்றுபவர் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் நீடர் கோசர். இவர் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க முப்பது வகை உருளைக்கிழங்கை உருவாக்கினார். இவரை மிஸ்டர் பொட்டேட்டோ என்று அழைக்கிறார்கள்.
அரிசி கோதுமை தட்டுப்பாடாக இருக்கும் பல்வேறு ஏழை நாடுகளில் பசியை போக்கும் விதத்தில் உருளைக்கிழங்கின் பயன்பாடு இருக்கிறது. நன்கு சாப்பிட்ட திருப்தியை தரும் உணவு உருளைக்கிழங்கு. எந்த உணவையும் விட ஏழு மடங்கு சாப்பிட்ட உணர்வை தருவது உருளைக்கிழங்கு தான் என்று சிட்னி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆதாரம்: பொது அறிவு துணுக்குகள் என்ற நூலில் இருந்து