

கண்ணாடி முன்பு நின்று பார்க்கும்போது முகத்தில் விழும் சிறிய சுருக்கங்களைக் கண்டு பலரும் கவலைப்படுவது உண்டு. நம் சருமம் இளமையாகவும், இறுக்கமாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் 'கொலாஜன்' எனப்படும் ஒரு விதமான புரதம் ஆகும். வயது ஆக ஆக நம் உடலில் இந்த கொலாஜன் உற்பத்தி இயற்கையாகவே குறைந்துவிடுகிறது. இதற்காக மக்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து க்ரீம்களையும், சீரம்களையும், மாத்திரைகளையும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், நாம் தேடும் இந்த இளமை ரகசியம் மருந்துக் கடைகளில் இல்லை, அது நம் வீட்டுச் சமையலறையிலும், பழக்கடைகளிலும்தான் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இயற்கையான முறையில், பக்கவிளைவுகள் இல்லாமல் நம் சருமத்தைப் பளபளப்பாக்க உதவும் சில பழங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆரஞ்சு!
சருமப் பராமரிப்பு என்று வரும்போது ஆரஞ்சு பழத்தைத் தவிர்க்கவே முடியாது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்துதான் கொலாஜன் உற்பத்திக்குத் தூண்டுகோலாக அமைகிறது. நாம் எவ்வளவு விலை உயர்ந்த க்ரீம்களைப் பூசினாலும், உடலுக்குள் வைட்டமின் சி இல்லையென்றால் பலன் கிடைக்காது. தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தைச் சாப்பிடுவது அல்லது ஜூஸ் குடிப்பது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். இது சருமத்தில் உள்ள செல்களைச் சேதமடையாமல் பாதுகாத்து, முகத்திற்கு ஒரு இயற்கையான ஒளியைத் தருகிறது.
பப்பாளி!
பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு பழம் என்றால் அது பப்பாளி தான். ஆனால் சருமத்திற்கு இது செய்யும் நன்மைகள் ஏராளம். இதில் 'பப்பலைன்' என்ற ஒரு விதமான என்சைம் உள்ளது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கிறது. இதனால் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் மாறும். வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் மாசுக்களால் தோலில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய பப்பாளி மிகச் சிறந்த தேர்வாகும்.
ஸ்ட்ராபெர்ரி!
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சுவைக்காக மட்டுமல்ல, வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வெயில் மற்றும் சுற்றுப்புற மாசுக்களால் கொலாஜன் சிதைவடைவதைத் தடுக்கின்றன. முகப்பரு, வீக்கம் மற்றும் சிவந்து போதல் போன்ற பிரச்னைகளைக் குறைத்து, கண் மற்றும் வாயைச் சுற்றி வரும் சுருக்கங்களைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிறிய பழம் பெரிய பலன்!
கிவி பழம் பார்ப்பதற்குச் சிறியதாக இருந்தாலும், அதில் ஆரஞ்சு பழத்தைவிட அதிக வைட்டமின் சி உள்ளது என்று சொன்னால் நம்புவது கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை. இது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வறட்சியைப் போக்குகிறது. தொடர்ந்து கிவி பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு முகம் வாடிப் போகாமல், எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேக்கப் போடாமலேயே முகம் பிரகாசமாகத் தெரிய இது உதவும்.
மாதுளை!
சரும பராமரிப்பில் 'ஹீரோ' என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது மாதுளம்பழம்தான். இது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. இதனால் முகம் இயற்கையாகவே ரோஜாப்பூ நிறத்தில் மாறும். சருமம் தடிமனாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க மாதுளை உதவுகிறது.
நாம் மேலே பூசும் க்ரீம்கள் தற்காலிகமான மாற்றத்தை மட்டுமே தரும். ஆனால் நாம் உண்ணும் உணவுதான் நிரந்தரமான அழகைத்தரும். இந்த பழங்களை எப்போதோ ஒருமுறை சாப்பிடுவதால் பெரிய மாற்றம் வராது. இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். பழங்களுடன் சேர்த்துப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், நல்ல தூக்கமும் அவசியம்.