
பெண்கள் இளம்பருவத்தில் தங்கள் அழகிற்கு காட்டும் அக்கறையை திருமணம் முடிந்தவுடன் காட்டுவதில் தவறிவிடுகிறார்கள். இதனால் உடற்கட்டு தாறுமாறாகி விடுகிறது. இவ்வாறு நூற்றுக்கு எழுபது சதவீதம் பேர் செய்வதுண்டு. இதற்கு காரணம் பெண்களின் அலட்சியப்போக்குதான்.
உடற்பயிற்சி செய்தால் உடலைக்குறைத்து அழகிய கட்டுக்கோப்பான உடலைப் பெறலாம் என்று சொன்னால் எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது என்று சிலர் சொல்வார்கள்.
அநேக பெண்கள் தாங்கள் பருத்த உடலைப் பெற்றிருப்பது தெரிந்தும் உடலைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். என் உடல் இப்படித்தான் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள்.
பொதுவாக பெண்கள் குண்டாவது பிரசவத்திற்கு பிறகுதான். பிரசவம் ஆனதும் பெண்களுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளையும், மருந்துகளையும் கொடுக்கிறார்கள். கூடவே ஓய்வு என்ற பெயரில் நிறைய நேரத்தை தூங்கியேச் செலவிடுகிறார்கள். உடலில் தாய்க்கு சேரும் கொழுப்பை குறைக்க அவளது குழந்தை தயாராக இருக்கிறது. இதற்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.
தாய் குழந்தைக்கு ஒன்றரை வயதுவரை தாய்ப்பால் கொடுத்தால், தாயின் கொழுப்பில் பெரும் பகுதிகுறைந்துவிடும். வேலைக்குச்செல்லும் பெண்கள் பெரும்பாலோருக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.
முன்காலத்தில் மூன்று முறை சாப்பிடும் பெண்கள் அம்மியில் மசால் அரைத்தார்கள். ஆட்டு உரலில் மாவு ஆட்டினார்கள். தினமும் துணி துவைத்தார்கள். ஆனால் இப்போது மசால் அரைக்க மிக்ஸி, மாவு அரைக்க கிரைண்டர், துணி துவைக்க வாஷிங் மிஷின் இப்படி எல்லா வேலைகளையும் இயந்திரத்தின் தலையில் கட்டிவிட்டு பெண்கள் மூன்று முறை சாப்பிடுவது தேவையா? சிந்தியுங்கள்.
தற்போது சில பெண்கள் மூன்று நேரம் மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டு இடையிடையே நொறுக்குத் தீனியையும் ஒரு கை பார்த்து விடுகின்றனர். பெண்கள் தங்கள் உடல் உழைப்பு குறையும்போது அதற்கு தக்கபடி உணவையும் குறைக்க வேண்டும்.
நன்கு எட்டு வைத்து நடப்பதையே பலர் பெரிய விஷயமாக நினைத்து விடுகிறார்கள். நம்மால் நடக்க முடியாது. ஆட்டோவைக் கூப்பிடு என்கிறார்கள். சாப்பிடுவதற்கு கேன்டீனுக்குப் போக வேண்டாம். இங்கே மேஜைக்கே டீயையும், வடையையும் கொண்டு வந்துவிடு என்கிறார்கள்.
கடினமான வேலை பார்க்கும் ஒரு பெண் உட்கார்ந்து வேலை பார்க்கும் பெண்ணின் சாப்பாட்டு அளவுபோல் மூன்று மடங்கு சாப்பிட்டாலும் அவளது உடல் குண்டாகாது. அதே நேரத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் இடைவேளையில் கடலை தின்றால் கூட எடை கூடி விடும். தினமும் ஒரு பிளேட் உருளைக்கிழங்கு சிப்ஸை தொடர்ந்து 2 மாதம் சாப்பிட்டால் உடலில் இரண்டு கிலோ எடை கூடிவிடும்.
ஒரு பெண்ணுக்கு எவ்வளவு எடை தேவையோ அந்த எடை அவளது 30 வயதில் கிடைத்து விடுகிறது. 30 வயதுக்கு பிறகு அதே எடையைப் பராமரிக்கின்ற அளவுக்கு மட்டும் சாப்பிட்டால் போதும். அதே பெண்ணுக்கு 40 வயது ஆகும்போது அவள் உடலுக்கு சக்தி குறைவாக தேவைப்படுகிறது. அதனால் சாப்பிடும் உணவின் அளவைக் குறைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் உடல் குண்டாகும்.
உடல் குண்டானால் என்ன? எடை கூடும். நடக்க சிரமமாக இருக்கும். அவ்வளவுதானே? என்று நினைத்து தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. உடல் சோர்வு, சுவாச சிக்கல், இதய நோய்கள், மலச்சிக்கல் போன்றவை எல்லாம் தோன்றும். முக்கியமாக அதிக சதையின் காரணமாக உடல் அழகு கெட்டு விடும். இந்த உடல் கோளாறுகள் எல்லாம் தோன்றாமல் இருக்க செய்யும் வேலைக்குத் தகுந்தபடி உணவு உண்ணவேண்டும்.