

நான் கொசுதான்; என்னை பார்ப்பதற்கு உங்களுக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் நான் சொல்வதை கொஞ்சம் செவிமடுத்து கேளுங்கள்.
நாங்களும் உங்களைப் போன்ற இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டு இருக்கிறோம். எங்களுக்கும் இந்த உலகத்தில் வாழ உரிமை இருக்கிறது. இப்படி உரிமைகள் இல்லாவிடில் நாங்கள் எப்படி இந்த உலகத்தில் இவ்வளவு நூற்றாண்டுகளாக வாழ்ந்து இருக்க வாய்ப்பு இல்லை தானே?
ஆனால் எங்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கொஞ்சம் உற்று கவனியுங்கள். உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன்.
எங்கள் பிறப்பால் இந்த உலகத்தில் பல ஜீவராசிகள் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உதாரணமாக நாங்கள் வாழும் குட்டைகள், சாக்கடைகள், தேங்கி நிற்கும் நீர்நிலைகள் ஆகியவற்றில் உள்ள எங்கள் முட்டைகளை உணவாக கொண்டு நீந்துவன (மீன்கள்) பறப்பன (பறவைகள்) ஊர்வன (மண் புழுக்கள்) என பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் நீங்கள் உணவாக்கிக் கொண்டு எங்களை மட்டும் ஒழித்துக்கட்ட நினைப்பதில் என்ன நியாயத்தை கடைப்பிடிக்கிறீர்கள்!
நாங்கள் என்ன 'வேண்டும் என்றா உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை கடித்து குதறவேண்டும் என்று நினைக்கிறோம்?'.
ஏதோ தெரியாமல் உங்கள் உடலில் வந்து உட்காருகிறோம்.
எங்கள் வாழ்க்கை மிகவும் சொற்பமானது.
அந்த சிறு நொடிகளில் வாழ உங்கள் உதிரத்தை சிறிது உறிஞ்சுகிறோம்.
அதற்காக இப்படி "டமில்" என்று அடிப்பதும், கூக்குரல் இடுவதும் உங்களுக்கு அழகு அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எங்களைப் படைத்த இறைவன்தான் உங்களையும் படைத்திருக்கிறான்.
நாங்கள் இந்த உணவு சங்கிலியில் கடை கோடியில் இருக்கிறோம். அதனால்தான் உங்களுக்கு எங்களைப் பார்த்தால் அலட்சியமாக இருக்கிறது போலும்.
இயற்கையின் விதி படி பார்த்தால் நாங்கள்தான் நொடிக்கு நொடி இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு இறப்பு பற்றி எந்த பயமும் கிடையாது. அப்படி நீங்கள் எங்களுக்கு செய்யும் அட்டகாசத்தால் நாங்கள் எங்கள் உடம்பில் immune systemஐ ஏற்படுத்திக் கொண்டோம். இப்படியாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
"எங்களுடைய வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு ".
நாங்கள் இந்த உலகப் பற்றை விட்டு விலகி பிரபஞ்சத்தோடு இணையவிடாமல் தடுப்பது உங்களுடைய போக்குதான்.
எங்களுக்கு உங்களைப் போன்று 'நாளை என்ன செய்ய வேண்டும்' என்கிற எண்ணங்கள் கிடையாது.
ஆகவே ஆசைகள் கிடையாது. நாளை பற்றிய பயம் கிடையாது. இன்றைக்கே எல்லாவற்றையும் சேர்த்துவிட வேண்டும் என்கிற "பேராசை" கிடையாது .
"என்ன கொண்டு வந்தோம்; என்ன கொண்டு போக போகிறோம்: எதுவுமே கிடையாது".
எங்களுக்கு அறிவு கிடையாது. ஏன் இதயம் கூட கிடையாது. ஆனால் துளி கூட பயம் கிடையாது.
இரண்டும் இருக்கிற நீங்கள் ஏன் பயந்து பயந்து வாழ்கிறீர்கள்!
தோழர்களே எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்!
எங்களை படைத்தவன் அவனே!
எங்கள் தலை எழுத்தை எழுதியவனும் அவனே!
எங்களை இயக்குபவனும் அவனே!
செயலும் அவனே !
செயல்பாடும் அவனே !
செயல்படுத்துபவனும் அவனே !
அவனிடம் முறையிட்டு ஒரு தீர்ப்புக்கான திராணி இல்லாத நீங்கள் எங்கள் மீது பழியை போட்டு எங்களை அலட்சியமாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
அதற்காகத்தான் சொல்கிறேன் எங்களை சும்மா விட்டு விடுங்கள். நாங்கள் இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறந்து உங்களிடம் அடிபட்டு சாக விரும்பவில்லை.
எங்களுக்கு உங்களைப் போன்று ஆறறிவு கிடையாது. அறிவே கிடையாது என்று வேணாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
அறிவுடைய நீங்கள் என்ன பெரிதாக செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்!
உங்களை நீங்களே அழித்துக் கொண்டு, பிறகு அமைதி அமைதி என்று அளப்பரிக்கிறீர்கள்.
மனித நேயம் பேசும் நீங்கள் மனிதன் மதத்தால், மொழியால், இனத்தால், சாதி வேற்றுமைகளால் சண்டையிட்டு அழிகிறான்.
இது தவிர அரசியல், ஆன்மீகம், அரசியல் என்று பல துறைகளில் உங்கள் வளர்ச்சி இருந்தாலும் உங்களால் அறம் சார்ந்த வாழ்வு வாழ முடியவில்லை.
அதனால்தான் நாங்கள் உங்களுடன் வாழ விரும்புவதில்லை.
உங்களுக்கு முக்தி தேவைப்படுகிறது.
தாங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒரு இயக்கம். இந்த பிரபஞ்சத்தோடு இணைந்து வாழ விரும்புகிறோம்.
உங்களைப் போல நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
எங்களை நீங்கள் "சீண்ட, சீண்ட" நாங்கள் ஒரு அழியாத இனமாக உருவெடுத்து விடுவோம்.
உதாரணம் கரப்பான் பூச்சி.
அணுகுண்டு போட்டாலும் இந்த உலகமே அழியுமே ஒழிய; கரப்பான் பூச்சி அழியாது!
எங்களுக்கு உங்களைப் போன்று மீண்டும் பிறந்து வாழ விரும்பமில்லை.
உங்களால் தான் நாங்கள் திரும்பத் திரும்ப பிறந்து உங்களிடம் மாரடிக்கும் வேலையை செய்ய வேண்டி இருக்கிறது.
எங்களை சாதாரணமாக விட்டிருந்தால் நாங்கள் காட்டிற்குள் ஒரு சிறு பூச்சி இனமாக வாழ்ந்து இயற்கையாக மடிந்து போய் இருப்போம்.
எங்களை நாட்டுக்கு வரவழைத்து சித்திரவதை பண்ணி சின்ன பின்னமாக ஆகிய உங்களை சும்மா விடுவதாக இல்லை.
இப்படிக்கு கொசு....
என் கனவில் கொசு வந்தது. அது என்னை கடித்தது. அப்போதுதான் தெரிந்தது அது ஒரு கனவு என்று.