என்ன, பனிப்பாறைக்கு ஈமச் சடங்கா (GLACIER FUNERAL) என்று உலகமே அதிசயித்தது. விவரத்தை முழுவதுமாகக் கேட்ட பின்னர் நல்ல உள்ளங்கள் சொல்லமுடியா சோகத்தை அடைந்தது.
விவரம் இது தான்:
உலகின் அடர்ந்த பனிப் பிரதேசமான ஐஸ்லாந்தில் உள்ள ஒக்ஜோகுல் பனிப்பாறை (OKJOKULL GLACIER) மிகவும் புகழ் பெற்ற ஒன்று.
ஆறு சதுர மைல் பரப்பளவைக் கொண்டிருந்த இது படிப்படியாகக் குறைந்து 2019ல் 0.3 சதுர மைலாகக் குறைந்தது.
இப்படிப் பனிப்பாறைகள் சுற்றுப்புறச் சூழலாலும், புவி வெப்பமயமாதலாலும் உருகி, உலகில் தூய நீருக்கான பஞ்சத்தை உருவாக்கும்; பல உயிரினங்களை முற்றுமாக அழித்து விடும்; மக்களை கூட்டம் கூட்டமாக இடம் பெயரச் செய்யும். மழை வருவதைத் தடுக்கும்!
இதனால் வருத்தமுற்ற நூற்றுக்கும் மேலான தன்னார்வத் தொண்டர்கள் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் கஷ்டப்பட்டு எரிமலைப் பகுதியில் ஏறலாயினர். குழந்தைகள் கையில் ஒரு போர்டை ஏந்திக் கொண்டு சென்றனர். அது பனிப்பாறைக்கு புகழ் சூட்டும் ஒரு போர்டாக மட்டும் அமையவில்லை; ஆங்கிலத்தில் ‘எதிர்காலத்திற்கு ஒரு கடிதம்’ (A LETTER TO THE FUTURE) என்ற ஒரு கடிதமும் அதில் அடங்கி இருந்தது.
மனிதர்களே! இப்படி நீங்கள் அலட்சியமாக இருந்தால் ஒருநாள் மனித குலமே அழிந்து விடாதா என்று அந்தக் குழந்தைகள் வருத்தத்துடன் கேட்டது போல அந்த நிகழ்ச்சி அமைந்தது.
அடுத்து நேபாளத்தில் ஒரு ஈமச் சடங்கு. 2025ம் ஆண்டு மே மாதம் இது நடந்தது.
இது உலகப் பிரசித்தி பெற்ற யாலா பனிபாறைக்கு (YALA GLACIER) நடந்த ஈமச் சடங்கு.
இமயத்தின் ஹிந்துகுஷ் தொடரில் யாலா பனிப்பாறை உலகின் கவனத்தை மிக அதிகமாக ஈர்த்த ஒன்றாகும். யாலா என்றால் இமயமலைப் பள்ளத்தாக்கில் வசிப்போரின் மொழியில் உயர்ந்த சிகரம் என்று பொருள்!
ஐஸ் நதி என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்த யாலா நதி புவி வெப்பமயமாதலாலும் சூழல் மாசினாலும் சிறுகச் சிறுகச் சுருங்கி முதலில் இருந்ததில் 66 சதவிகிதம் சுருங்கி மிகச் சிறியதாக ஆகி விட்டது.
புத்தமத குருமார்களும் விஞ்ஞானிகளும் சாமான்ய பொதுமக்களும் அடைந்த வருத்ததிற்கு ஒரு எல்லையே இல்லை. யாலா பனிப்பாறைக்கு தக்க மரியாதையுடன் ஒரு ஈமச் சடங்கை நடத்தத் தீர்மானித்தனர். தங்கள் துக்கத்தைத் தெரிவிப்பதோடு உலகிற்கான எச்சரிக்கையாகவும் இந்த சடங்கு அமைய வேண்டும் என்று அவர்க்ள் எண்ணினர். அவர்கள் கையில் ஏந்திய போர்டு ஒன்றில், “நாங்கள் செய்திருந்தால் அது உனக்கு மட்டுமே தெரியும்" (Only You Know If We Did It) என்று எழுதப்பட்டிருந்தது.
இமயமலையில் 3500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்திருக்கும் ஏழு பனிப்பாறைகளில் முக்கியமான யாலா பனிப்பாறைக்கான இந்த ஈமச் சடங்கில் 2025 மே 15ம் நாள் கலந்து கொண்ட புத்தமத குருமார்கள் தங்கள் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு திரும்பலாயினர்.
ஹிந்து குஷ் மலைத்தொடரில் உள்ள 54000 பனிப்பாறைகளில் முதல் பனிப்பாறைக்கு ஈமச் சடங்கு முடிந்து விட்டது!
இந்த ஈமச்சடங்கானது சொலாஸ்டால்ஜியாவின் (solastalgia) வெளிப்பாடு என்கிறார் ஆஸ்திரேலிய தத்துவஞானியான க்ளென் ஆல்ப்ரெட் (Glenn Albrecht). அவர் உருவாக்கிய வார்த்தையான இந்த சொலஸ்டால்ஜியா என்றால் சுற்றுப்புறச்சூழல் நசிவதால் ஏற்படும் துக்கம் என்று பொருள்.
இன்னொரு ஈமச்சடங்கு நடக்கவே கூடாது என்பது யார் கையில் இருக்கிறது?
மக்களாகிய நம் கையில் தான்!