

Bitter Gourd Pickle: பாகற்காயின் கசப்பு சுவை காரணமாகவே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் இதை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதிலும், வயிற்றுப் பூச்சிகளை அழிப்பதிலும் பாகற்காய்க்கு நிகரான காய்கறி வேறில்லை.
அப்படிப்பட்ட அருமையான காய்கறியை, அதன் கசப்புத் தன்மை அறவே தெரியாத அளவுக்குப் புளிப்பும், காரமும், லேசான இனிப்பும் சேர்த்து ஒரு அட்டகாசமான ஊறுகாயாகச் செய்தால் எப்படி இருக்கும்? தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் சூடான இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள மிகச் சிறந்த காம்பினேஷனான இந்த 'பாகற்காய் ஊறுகாய்' எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
பாகற்காய் ஊறுகாய் செய்வதற்கு முன், அதன் கசப்பைச் சற்று குறைப்பது மிக முக்கியம். நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகப் பிசறி, ஒரு 15 நிமிடம் அப்படியே மூடி வையுங்கள்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் பாகற்காய் தண்ணீர் விட்டிருக்கும். இப்போது அந்தத் தண்ணீரை கைகளால் நன்றாகப் பிழிந்து எடுத்துவிட்டு, பாகற்காய் துண்டுகளை மட்டும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்வதால் கசப்பு பெருமளவு குறைந்துவிடும். அதே நேரத்தில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்துக் கெட்டியாகக் கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வெறும் கடாயில் கடுகு மற்றும் வெந்தயத்தை லேசாக வறுத்து, ஆறியதும் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு அடிகனமான கடாய் அல்லது மண்சட்டியை அடுப்பில் வைத்து, தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றுங்கள். ஊறுகாய்க்கு நல்லெண்ணெய் சேர்த்தால்தான் அதன் அசல் சுவை கிடைக்கும். எண்ணெய் சூடானதும் தாளிப்பதற்கான கடுகைச் சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், தண்ணீர் பிழிந்து வைத்துள்ள பாகற்காய் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும். எண்ணெயிலேயே பாகற்காய் நன்றாகச் சுருண்டு, அதன் நிறம் மாறி லேசான பொன்னிறத்திற்கு வரும் வரை வதக்குவது மிகவும் அவசியம்.
பாகற்காய் நன்றாக வதங்கிய பிறகு, அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் ஊறுகாய்க்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள். மசாலாவின் பச்சை வாசனை போனதும், கரைத்து வைத்துள்ள கெட்டியான புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விட வேண்டும்.
புளித்தண்ணீர் சுண்டி, எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரும்போது, அடுப்பைச் சிம்மில் வைத்துவிட்டு, அரைத்து வைத்துள்ள கடுகு-வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள் மற்றும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள்.
வெல்லம் சேர்ப்பதால் கசப்பு, புளிப்பு மற்றும் காரம் அனைத்தும் சமன் செய்யப்பட்டுச் சுவை பிரமாதமாக இருக்கும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறிய பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால், மாதக்கணக்கில் கெட்டுப்போகாத நாவில் நீர் ஊறவைக்கும் சுவையான 'பாகற்காய் ஊறுகாய்' தயார்.