கத்தரிக்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காத காய்கறியாக இருக்கலாம். ஆனால், அதை நெருப்பில் சுட்டு செய்யப்படும் பாரம்பரியமான உணவான கத்தரிக்காய் பச்சடி சுவைத்தால், கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். முற்காலத்தில் விறகு அடுப்பில் சுட்டு செய்யும் இந்த சுவையான ரெசிபியை, இன்று நம் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பிலேயே மிக எளிதாகச் செய்ய முடியும்.
நெருப்பில் சுடுவதால் கிடைக்கும் அந்த தனித்துவமான ஸ்மோக்கி வாசனையும், தயிரின் லேசான புளிப்பும் சேர்ந்து அட்டகாசமான சுவையைத் தரும். பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளுக்கு மட்டுமின்றி, சுடச்சுட சாதம் மற்றும் சப்பாத்திக்கும் இது ஒரு அற்புதமான சைட் டிஷ். இந்த ஆரோக்கியமான ரெசிபியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 1
கெட்டித் தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை!
முதலில் ஒரு பெரிய அளவிலான கத்தரிக்காயை எடுத்து, அதை நன்றாகக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல்புறத்தில் நல்லெண்ணெயை லேசாகத் தடவி, கத்தியால் ஆங்காங்கே சிறு துளைகள் இட்டுக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் கத்தரிக்காய் வெடிக்கும் அபாயம் இருக்காது, அதேசமயம் உள்ளேயும் நன்றாக வேகும். இப்போது அதை நேரடியாக அடுப்பு நெருப்பில் வைத்து, எல்லா பக்கங்களும் தோல் கருகி சுருங்கும் வரை சுழற்றிச் சுட வேண்டும்.
உள்ளே இருக்கும் சதைப்பகுதி நன்கு வெந்து மென்மையாக மாறியதும், அடுப்பை அணைத்துவிட்டு அதை முழுமையாக ஆறவிடவும். ஆறியதும், மேலே உள்ள கருகிய தோலை மெதுவாக உரித்து எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து, கரண்டியால் அல்லது கைகளால் கட்டியில்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
மசித்து வைத்துள்ள கத்தரிக்காயுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். காரம் சற்று தூக்கலாக வேண்டும் என நினைப்பவர்கள், பச்சை மிளகாயை சுடும்போதே கத்தரிக்காயின் உள்ளே வைத்துச் சுட்டும் பயன்படுத்தலாம்.
பின்னர் புளிக்காத கெட்டித் தயிரை இந்த கலவையுடன் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இறுதியாக, ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, தயார் செய்துள்ள கலவையில் கொட்டிக் கிளறவும்.
கடைசியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவிப் பரிமாறினால், நாக்கில் நீர் ஊறவைக்கும் சுவையான கத்தரிக்காய் பச்சடி தயார். எண்ணெய் அதிகம் சேர்க்காமல், நெருப்பில் சுட்டுச் செய்வதால் இதில் கலோரிகள் மிகவும் குறைவு; அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த ரெசிபியாகும்.
ஹோட்டல் சுவையை மிஞ்சும் இந்த சுவையான கத்தரிக்காய் பச்சடி ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.