

தினமும் சப்பாத்தி, குருமா என்று சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? ஒரு கப் தயிர் இருந்தால் போதும். டயட்டில் இருப்பவர்களுக்கும், ஃபிட்னெஸ் பிரியர் களுக்கும் ஏற்ற ஒரு சப்பாத்தி செய்யலாம். இந்த பதிவில் சாஃப்ட்டாக ஸ்டஃப்டு சப்பாத்தி எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - மாவு பிசையத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - 1 டீஸ்பூன்.
கேரட், பீன்ஸ், குடைமிளகாய் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
துருவிய பன்னீர் - ½ கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
மாங்காய் தூள் - ½ டீஸ்பூன்
சீரகத்தூள் - ¼ டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை!
முதலில் சப்பாத்தி மாவை ரெடி செய்ய கோதுமை மாவில் உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து வழக்கம் போல சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
மாவு ரொம்பவும் கெட்டியாக இருக்கக் கூடாது, கொஞ்சம் சாஃப்ட்டாக இருந்தால்தான் உள்ளே மசாலா வைத்துத் திரட்ட வசதியாக இருக்கும். பிசைந்த மாவை ஒரு ஈரத் துணியால் மூடி குறைந்தது 20 நிமிடம் ஊறவிடவும்.
மாவு ஊறும் நேரத்தில் உள்ளே வைக்கும் மசாலாவை ரெடி பண்ணலாம். ஒரு கடாயில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கியதும், துருவிய காய்கறிகளைச் சேர்க்கவும்.
காய்கறிகளில் தண்ணீர் விடக்கூடாது, அதனால் மிதமான தீயில் வைத்து வதக்கவும். காய் ஓரளவு வெந்ததும், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் துருவிய பன்னீரைச் சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் எல்லா மசாலாப் பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். மசாலாவில் கொஞ்சம்கூட ஈரம் இருக்கக்கூடாது, கெட்டியாக இருக்க வேண்டும். கடைசியாகக் கொத்தமல்லி தூவி ஆறவிடவும்.
இப்போது ஊறிய மாவில் இருந்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை எடுக்கவும். அதைச் சிறிதாகப் பூரி அளவுக்கு விரித்து, அதன் நடுவில் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலாவில் ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். இப்போது மாவின் ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து, ஒரு மோதகம் அல்லது கொழுக்கட்டை போல மூடி, மீண்டும் உருண்டையாக்கவும்.
மேடை மேல் கொஞ்சம் கோதுமை மாவைத் தூவி, இந்த உருண்டையை வைத்து மிக மெதுவாகத் திரட்ட வேண்டும். அழுத்தித் திரட்டினால் மசாலா வெளியே வந்துவிடும். ஓரங்களில் லேசாக அழுத்தித் தேய்த்தால், மசாலா எல்லா இடங்களுக்கும் பரவும்.
தோசைக்கல்லைச் சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறப் புள்ளிகள் வரும் வரை சுட்டு எடுத்தால் ஆவி பறக்க, மசாலா நிறைந்த சாஃப்ட்டான "வெஜ் ஸ்டஃப்டு சப்பாத்தி" தயார்.