

ராகி இனிப்பு அடை என்பது உடலுக்கு சத்தான மற்றும் சுவையான ஒரு பாரம்பரிய உணவாகும். இதனை காலை உணவாகவோ மாலை சிற்றுண்டியாகவோ செய்து கொடுக்கலாம். அடையை மெல்லியதாகத் தட்டினால் மொறு மொறுப்பாகவும், சற்று கனமாக தட்ட மென்மையாகவும் இருக்கும்.
1. ஹெல்த்தியான ராகி ஸ்வீட் அடை:
ராகி மாவு -1 கப்
வறுத்து பொடித்த உளுத்த மாவு -2 ஸ்பூன்
நாட்டுச்சக்கரை -1/2 கப்
தேங்காய் துருவல் -2 ஸ்பூன்
முந்திரித் துண்டுகள் -10
ஏலக்காய் தூள் -1/2 ஸ்பூன்
இஞ்சி துண்டு -சிறிது
உப்பு -ஒரு சிட்டிகை
செய்முறை: வாணலியில் ஒரு கப் ராகி மாவை சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் வறுத்தெடுக்கவும். சிறிது ஆறியதும் அத்துடன் வறுத்து பொடித்த உளுத்த மாவு, தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய முந்திரி துண்டுகள், பொடித்த நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இஞ்சி தோல் நீக்கி நன்கு நசுக்கி சேர்க்கவும். மாவில் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கரைத்து வைத்துள்ள அடை மாவை விட்டு சிறிது தடிமனாக அடைபோல் வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு நன்கு வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாற சத்தான, ருசியான கேழ்வரகு இனிப்பு அடை தயார்.
குறிப்பு: விருப்பப்பட்டால் மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் சிறிது எண்ணெய் தடவி மெல்லிய அடையாக தட்டியும் செய்யலாம்.
குழந்தைகள் விரும்பும் இதனை மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வந்ததும் சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.
2. ராகி கார அடை:
சுவையான மற்றும் சத்தான ராகி கார அடையை மிகவும் எளியமையாகச் செய்யலாம்.
ராகி மாவு -1 கப்
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
முருங்கை இலை -1/2 கப்
துருவிய தேங்காய் -2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையானது
சூடான தண்ணீர் -மாவு பிசைவதற்கு
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும், முருங்கைக் கீரையையும் சுத்தம் செய்து அதையும் பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கை இலை, தேங்காய், சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது சிறிதாக சூடான தண்ணீரைக் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்கவும்.
வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் தடவி உருண்டையை வைத்து சிறிது கனமான அடையாகத் தட்டவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டிய அடைகளைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக ஆகும் வரை நன்கு வேகவிட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
3. ராகி மிக்ஸட் வெஜிடபிள் தோசை:
முட்டைகோஸ் -1/2 கப்
குடைமிளகாய் -1/2 கப்
கேரட் துருவியது -1/4 கப்
பீன்ஸ் -10
சௌசௌ -1/2 கப்
கொத்தமல்லி -சிறிது
அரிசி மாவு -4 ஸ்பூன்
கேழ்வரகு மாவு -1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
பச்சை மிளகாய் -2(அ)
காரப்பொடி. -1/2 ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை: காய்கறிகளை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, தேவையான உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். கடைசியாக வெங்காயம் பொடியாக நறுக்கியது, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தோசை கல் நன்கு சூடானதும் முதலில் எண்ணெயை தடவி கரைத்து வைத்துள்ள மாவை விட்டு தோசையாக வார்க்கவும். அதில் கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையை 2 ஸ்பூன் அளவு எடுத்து தோசை மேல் மெதுவாகப் பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி நான்கு நிமிடங்கள் நன்கு வேகவிடவும். திருப்பிப் போடவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக திருப்பி தோசையை மடித்து எடுத்துவிடவும். மிகவும் ருசியான, சத்தான ராகி மிக்ஸட் வெஜிடபிள் தோசை தயார்.
காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகள் விரும்பாத காய்கறிகளைப் பொடியாக நறுக்கி கடைசியாக வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேற்சொன்ன முறையில் செய்து கொடுக்க குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பாரம்பரிய உணவான கேழ்வரகை நவீன முறையில் காய்கறிகள் மற்றும் இயற்கைச் சர்க்கரையுடன் சமைத்து வழங்குவதன் மூலம் குடும்பத்தினருக்குச் சத்தான மற்றும் சீரான ராகி உணவுகள் எளிதாகக் கொடுக்க முடியும்.