
அன்றாடம் நீங்கள் சின்னதாய் செய்யும் சில செயல்கள், பெரிதாய் பலன்களைத் தருகிறது என்கிறார்கள். உதாரணமாக, காலை உணவிற்கு முன் நடப்பது பல வகைகளில் உதவுகிறது என்கிறார்கள். உங்கள் உடல் சேகரித்து வைத்திருக்கும் கொழுப்பு எரிந்து சக்தியாக மாற்றப்படுகிறது. உடலிலுள்ள வெள்ளை கொழுப்பு ஆரோக்கியமான பழுப்பு நிற கொழுப்பாக மாற உதவுகிறது.
நடப்பதால் உடலில் படும் சூரிய ஒளி உங்கள் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. மூளை செல்களை இயக்கச் செய்து இரவு தூக்கம் தடையின்றி நடக்க உதவுகிறது. போதிய வைட்டமின் டி கிடைக்கும். இதன் குறைபாடுதான் பல நோய்களுக்கு மூல காரணம் என்கிறார்கள்.
உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உங்கள் உணவு முறைகளை கூட மாற்ற வேண்டாம். அட்லீஸ்ட் நீங்கள் சாப்பிடும் முறைகளையாவது மாற்றுங்கள். நமது ஜீரண மண்டல உறுப்புகளுக்கு 12 மணி நேரம் ஓய்வு தேவை. அப்போதுதான் அது தனது பணியைத் ஒழுங்காக செய்யும். நமது உடல் கழிவுகளை முற்றிலும் அகற்றும். விஞ்ஞான ஆய்வில் கூறுவது இதுதான். காலை 8 மணிக்கு காலை உணவு. இரவு உணவு இரவு 8 மணிக்கு முன் முடித்து விட்டு 12 மணி நேரம் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுங்கள் என்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கை முறைக்கும் உடலில் ஏற்படும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக, உணவுக்கு. உணவு முறையில் மாற்றம் செய்தாலே 13 ஆண்டுகள் உங்கள் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் நார்வேயின் பெர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உங்கள் அன்றாட உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளுக்கு அதிக இடம் கொடுங்கள். குறிப்பாக, புரோக்கோலி, முட்டைக்கோசு, பசலைக்கீரை, நூல்கோல் போன்றவை. இவற்றில் முக்கிய தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன. தினசரி கீரைகள் சாப்பிட்டு வருகின்றவர்களுக்கு மூளை 12 வயது இளமைக்கு திரும்புகிறது என்கிறார்கள் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இடையே ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ள விரும்பினால் அவசியம் கொட்டை வகைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பழைய டெக்னிக்தான் இது. ஆனால், இன்றும் சிறந்தது. அதுதான் கூடிய மட்டிலும் சுறுசுறுப்பாக இயங்கும் பழக்கம். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உடல் இயக்கமே போதுமானது. முடிந்த மட்டும் படிகளில் ஏறிச் செல்லுங்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காதீர்கள். எந்த விதமான உடல் இயக்கமும் நல்லதுதான் என்கிறார்கள் கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 20 நொடிகள் மாடிப்படி ஏறுவது கூட இதயத்திற்கும், நுரையீரலுக்கும் ஆரோக்கியமான பயிற்சியாகிறது என்கிறார்கள்.
ஒரு தேதியை நினைவில்கொள்ள, நெருங்கியவர்கள் போன் நம்பரை தேட, வழி தேட, சிறு கூட்டல் கணக்கு போட கூட என எதற்கெடுத்தாலும் போனை நாடாதீர்கள். உங்கள் மூளையை நம்புங்கள், அதற்கு வேலை கொடுங்கள். இது 33 சதவீதம் மறதி நோய் வருவதைத் தடுக்கும் என்கிறார்கள். தினசரி இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து டிவி பார்க்காதீர்கள். இந்த நேரத்தில்தான் நாம் அதிக கலோரிகள் உள்ள உணவுகளை, இனிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க அடித்தளமிடுகிறோம் என்கிறார்கள். தினசரி இரண்டு மணி நேரம் டிவி பார்த்தால் அவசியம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த மட்டும் வெளியே சாப்பிடாதீர்கள். அதனால்தான் உடலில் தேவையற்ற கொழுப்பு, சர்க்கரை உடலில் சேர்கிறது. முடியாதபட்சம் எளிதாக செரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிட்டாலும் சரி, அன்றைய பொழுது சரியான அளவு தூங்காவிட்டால் அவ்வளவும் வீண்தான். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். முதலில் இரவு 10 மணிக்கு தூங்கி காலையில் 5 மணிக்கு எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
உங்கள் வேலையை நீங்களே செய்ய பழகுங்கள். உங்கள் அறையை, உங்கள் அலமாரிகள் மற்றும் டேபிள் போன்றவற்றை சுத்தம் செய்வது, உங்களது துணியை நீங்களே துவைத்தல் போன்றவை. முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். வீட்டு வேலைகள் செய்வது நல்ல உடற்பயிற்சி. அதோடு உங்கள் மனைவியும் மகிழ்ச்சி கொள்வார். காபி குடித்தவுடன், அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லை என்றால் அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள உதவும். முடிந்த வரை எங்கு சென்றாலும் நடந்து செல்லுங்கள். பண மிச்சம் மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
எங்கெல்லாம் வீட்டில் உதவி செய்ய முடியுமோ உதவுங்கள். அது முக்கியமானது. மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும். வீட்டில், குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள். இடை இடையே நல்ல விஷயங்களை பாராட்டவும் செய்யுங்கள். வேண்டுமென்றால் தவறுகளை நல்ல முறையிலே எடுத்துக் கூறுங்கள். கோபமும், அதட்டலும் நமக்கு ஆரோக்கிய குறைகளை ஏற்படுத்தும். வீட்டில் உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம், ‘சாப்பிட்டு விட்டீர்களா?’ என்று கேளுங்கள். குழந்தைகளைக் கூப்பிட்டு கேளுங்கள். வீட்டில் அனைவரும் அமர்ந்து உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். இதனால் மனநிறைவு ஏற்படும்.