ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். சிறிது காலத்திற்கு பிறகு, மண்பாண்டத்தில் சமைத்தவர்கள் அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள். அலுமினியத்தைத் தொடர்ந்து எவர்சில்வருக்கு மாறினார்கள். அடுத்தகட்டமாக நான்ஸ்டிக் பாத்திரத்திற்கு மாறினார்கள்.
பணம் வரவர ஒவ்வொன்றுக்கும் மாறிக்கொண்டே சென்ற பணக்காரர்கள் மண்பாண்டத்தில் சமைத்தவர்களை பார்த்து முகம் சுழித்தார்கள். நான்ஸ்டிக் இருந்தால் எண்ணெய் இல்லாமல் தோசை, சப்பாத்தி சுடலாம். குக்கர் இருந்தால் சீக்கிரம் சமையல் செய்திடலாம் என்று வெறுப்பேத்தினார்கள். அப்போது இந்த வசதி குறைந்தவர்கள் மனசுக்குள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள்!
நாம எப்ப இந்த மாதிரி அழகான கண்ணை கவரும் பாத்திரத்தில் சமைக்கப் போறோம்? என்று ஏங்கினர். ஓரளவுக்கு அவர்களுக்கு வசதி வர வர அவர்களும் ஒவ்வொன்றுக்கும் மாறி, நான்ஸ்டிக் பாத்திரம் வாங்கலாம்னு நினைக்கையில், 'பழைய குருடி கதவை திறடி'ங்கிற கதையா... பணம் உள்ளவர்கள் மண்பானையில் சமைத்தால் தான் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னதோட இல்லாம, இனிமே நாங்க மண்பானையில் தான் சோறாக்கி குழம்பாக்கி விளையாட போறோம்னு சொன்னதோட, வாங்கவும் ஆரம்பிச்சாங்க.
அதற்கு தகுந்த மாதிரி மண்பாண்டம் விற்பனை செய்தவர்களும் குடிக்கிற தண்ணி பாட்டில் ஆரம்பித்து கடைசியா சுடுகாட்டில் உடைக்கிற கொள்ளிக்குடம் வரைக்கும் நல்ல டிசைனா செய்ய தொடங்கினாங்க. இப்ப பார்த்திங்கன்னா, 30 ரூபாய்க்கு வாங்க ஆளில்லாமல் இருந்த மண்சட்டி இன்னைக்கு 200 ரூபாய் தோசைக்கல், ஆப்ப சட்டி இட்லி பானையின்னு எல்லாமே விலை ஏறிப்போச்சு.
கடைசியில நான்ஸ்டிக் பாத்திரம் வாங்க ஆசைப்பட்டான் பாருங்க அவன் யோசிக்கிறான்.
'ஏன்டா நான் சிவனேன்னு மண் சட்டியிலதான் குழம்பு வைச்சு சாப்பிட்டேன்.. என்னை அற்பமா பார்த்தே.. இப்ப நான் அவ்வளவு தூரம் ஓடிவந்து நான்ஸ்டிக் வாங்க வரும் போது .... நீ மண்பானைதான் நல்லதுன்னு சொல்லி வாங்குறீயே இப்ப நான் என்னத்தடா வாங்குறது? நான்ஸ்டிக் விலைக்கு மண்சட்டி விக்கிது.. என்னால நான்ஸ்டிக்கும் வாங்க முடியல, மண்சட்டியும் வாங்கமுடியலன்னு' தலையில கையவைச்சிக்கிட்டு உக்காந்துட்டான் .
வாழ்க்கை ஒரு வட்டங்கிறது எவ்வளவு உண்மை பாருங்க. ஆதிகாலத்தில் நாம் சாப்பிட்ட சாப்பாடு நம் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் எல்லாமே ஆரோக்கியமானது. கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி பழமையை நோக்கித்தான் வர்றோம்.
ஆரம்பத்தில் வேப்பங்குச்சியும் ஆலங்குச்சியிலும் பல் விளக்கினார்கள். இப்ப உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா? வேம்பு இருக்கா? கிராம்பு இருக்கான்னு ஓடி வர்றாங்க. இருப்பது அப்படியே இருந்திருக்கலாம். விலைவாசியும் அப்படியே இருந்திருக்கும்.
எல்லாத்தையும் மாத்தி எல்லாத்தையும் உயர்த்தி கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ சாதாரண மக்கள் தான். யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? எல்லாமே வியாபார நோக்கமா இல்லை மக்களே தன்னை மாற்றிக் கொள்கிறார்களா ஒன்றுமே புரியவில்லை.