

பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், ஜிம்முக்குச் சென்றும் உடற் தகுதி (Body fitness) பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்பது தற்போதைய ட்ரெண்ட்டாக உள்ளது. இவற்றில் எதையும் பின்பற்றாமலே ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை நிரூபித்துக்கொண்டு பலர் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தம் தினசரி வாழ்வில் ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் வகையில் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நடந்து சென்று அடைய வேண்டிய இடங்களுக்கு அவர்கள் நடந்தே செல்வார்கள். இது அவர்களின் மூட்டுகளுக்கு பாதிப்பின்றி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும், இதய ஆரோக்கியம் காக்கவும் உதவும். அடுத்த தெருவிலிருக்கும் கடைக்கோ, நண்பரைப் பார்க்கவோ நடந்து செல்வது கால்களை இயக்கத்தில் வைத்திருக்க உதவும்.
2. அவர்கள் உடலின் இரத்த ஓட்டம், சமநிலைத்தன்மை, உடல் தோரணை ஆகியவற்றில் பாதிப்பை உண்டுபண்ணக்கூடிய விதத்தில் நாளின் பெரும்பகுதியை உட்கார்ந்தே கழிப்பதில்லை. போன் பேசும்போது நின்றுகொண்டு பேசுவது போன்ற சிறு சிறு அசைவுகளை (micro-movements) உண்டுபண்ணி தசைகளை சுறுசுறுப்பாகவும் இரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்திருப்பர்.
3. கையை நீட்டி அலமாரியில் உள்ள பொருளை எடுப்பது, துணி காயப்போடும்போது குனிந்து நிமிர்வது, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற செயல்களில் அவர்கள் அடிக்கடி ஈடுபடுவது உண்டு. இது அவர்களின் உடலில் முழுமையான அசைவுகளை உண்டுபண்ணி எலும்பு மூட்டுக்களை நெகிழ்வுத் தன்மையுடனும், தசைகள் விறைப்புத் தன்மையடையாமலும் வைத்துப் பராமரிக்க உதவும்.
4. அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. தட்டில் வைக்கப்பட்டுள்ள உணவுகளில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்தவர்களாய், சரிவிகித உணவை அளவோடும், மன நிறைவோடும் உட்கொள்வார்கள்.
5. காலையில் எழுவது, சாப்பிடுவது, வேலை செய்வது, ஓய்வெடுப்பது, உறங்குவதென அனைத்து செயல்பாடுகளிலும் ஓர் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிப்பார்கள். இது அவர்களின் ஹார்மோன் சுரப்பு, செரிமானம் மற்றும் சக்தியின் அளவை மேம்படுத்த உதவி புரியும். இதனால் உடலும் தன்னைத்தானே சரிப்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட முடியும்.
6. அவர்கள் தம் தினசரி தேவைகளுக்காக கடைகளுக்கு செல்லும்போது பொருட்களை தாமே சுமந்துகொண்டு வீடு திரும்புவர். தற்செயலான வலிமை பயிற்சி (incidental strength training) எனப்படும் இச்செயல், திட்டமிட்டு உண்டுபண்ணிக் கொள்ளும் பயிற்சியாகாது. வயதான பின்னும் தனது வேலைகளைத் தானே செய்துகொள்ள உதவும் பயிற்சி இது.
7. அவர்கள் தம் மனதை ஸ்ட்ரெஸ் இல்லாமலும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள மெடிடேஷன், தெரபி என எதுவும் இல்லாமல் இயற்கையை ரசிப்பதிலும், பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தை செலவிடுவர். நன்றியுணர்வுடனும் முதிர்ச்சியுற்ற மனோபாவம் கொண்டும் அமைதியாக வாழ்வார்கள்.
8. அவர்கள் ஒருபோதும் தனித்திருப்பதில்லை. நட்பு வட்டம் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதை பலமாக நினைப்பார்கள்.