வீடியோ காலில் இறுதிச்சடங்கு: உணர்வுகளை இழந்து நிற்குதா மனித உலகம்?

நேரமில்லை என்ற ஒற்றை வார்த்தையில் புதைந்துபோகும் பெற்றோரின் தியாகங்களும் உறவுகளின் உன்னதமும்!
மனித உறவுகள் - human relationships,
மனித உறவுகள் - human relationships,
Updated on

“எங்களுக்கு வர நேரமில்லை…”

வீடியோ காலில் ஒரு இறுதிச்சடங்கு…

எதை நோக்கிச் செல்கிறது இந்த உலகம்?

இந்த வார்த்தைகளுக்குள் எத்தனை பெரிய வாழ்க்கைத் துயரம் புதைந்து கிடக்கிறது! சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒரு தந்தை இறந்துகிடக்கிறார். மும்பை, நேபாளம், உத்தரப்பிரதேசம் என்று வெவ்வேறு இடங்களில் வாழும் அவரது மூன்று மகள்களுக்கும் செய்தி செல்கிறது.

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வர முடியவில்லை.

காரணம்?

நேரமில்லை.

ஆனால், அவர்களால் வீடியோ காலில் இறுதிச்சடங்கைப் பார்க்க முடிந்தது.

தந்தையின் உடலுக்கு அருகில் நிற்க நேரமில்லை.

ஆனால் செல்போன் திரைக்கு முன்னால் நிற்க நேரம் இருந்தது.

ஒரு காலத்தில், “கல்யாணத்திற்குப் போகாவிட்டாலும் கருமாதிக்காவது போகவேண்டும்” என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அது வெறும் சடங்கு பற்றிய அறிவுரை அல்ல.

மனித உறவுகள் மீது நமக்கிருக்கும் கடைசிக் கடமை பற்றிய நினைவூட்டல்.

இன்று அந்தக் கடமையும் ‘ஆன்லைன்’ ஆகிவிட்டதா?

அன்பும் அனுதாபமும் கூட இணைய வேகத்தில் அளக்கப்படும் காலத்திற்கு நாம் வந்துவிட்டோமா?

ஒரு தந்தை தனது மூன்று மகள்களையும் வளர்த்தார். கல்வி கொடுத்தார். திருமணம் செய்து வைத்தார். அவர்களின் எதிர்காலத்திற்காக தனது வாழ்நாளையே செலவிட்டார்.

அப்போது அவர்,

“எனக்கு நேரமில்லை… இவர்களை வளர்க்க முடியாது…”

என்று நினைத்திருந்தால்? அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை இன்று இப்படியிருக்குமா?

அவர்களுக்கு கல்வி கற்பிக்க அவர் ஒதுக்கிய நேரம், அவரது வாழ்க்கையின் பொன்னான ஆண்டுகள் அல்லவா?

அவர்களின் திருமணத்திற்காக ஓடிய ஓட்டங்கள், உறக்கமின்றிக் கழித்த இரவுகள், ஆசைகளைத் தியாகம் செய்த நாட்கள்… இவை அனைத்தும் அவருடைய வாழ்க்கையின் விலைமதிப்பற்ற நேரம்தானே?

இன்று அந்தத் தந்தைக்கு அவருடைய மகள்களால் கொடுக்க முடிந்தது என்ன?

இதையும் படியுங்கள்:
Work from home; வீட்டிலிருந்தே செய்ய ஏற்ற சிறந்த 10 வேலைகள்!
மனித உறவுகள் - human relationships,

ஒரு வீடியோ அழைப்பு.

ஒரு சிறிய பணப்பரிமாற்றம்.

“சடங்கை முடித்துவிட்டு வீடியோ அனுப்புங்கள்” என்ற வேண்டுகோள்.

அதுவும் முடிந்த பிறகு, “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்” என்ற கேள்வி.

நாம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டோம்; ஆனால் உறவுகளுக்கான இடத்தைச் சுருக்கிக் கொண்டோம். ஒரே வீட்டில் இருந்தபோதும் ஒவ்வொருவரும் தனித்தனி திரைகளுக்குள் வாழ்கிறோம். தொலைவில் இருப்பவர்களுடன் நொடியில் பேசும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.

ஆனால் நம் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முதியவரின் கதையை ஐந்து நிமிடங்கள் பொறுமையாகக் கேட்கும் மனம் இருக்கிறதா?

முதியோர் இல்லங்கள் பெருகுவது கட்டிடங்களின் வளர்ச்சி அல்ல; சில சமயங்களில் அது உறவுகளின் சுருக்கத்தையும் காட்டுகிறது. எல்லா முதியோர் இல்லங்களிலும் இருப்பவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. சூழ்நிலைகள் பல குடும்பங்களைப் பிரிக்கலாம். ஆனால், உடலால் அருகில் இருக்க முடியாத நிலையிலும் மனதால் அருகில் இருக்க முடியும் அல்லவா?

மனித உறவுகள் - human relationships,
மனித உறவுகள் - human relationships,AI Image

ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு நலம் விசாரிப்பு, “அப்பா, சாப்பிட்டீர்களா?” என்ற நான்கு வார்த்தைகள்… இவற்றுக்கு பணம் தேவையில்லை. நேரமும் அதிகம் தேவையில்லை. தேவைப்படுவது ஒன்றே ஒன்று — அக்கறை.

நம் பெற்றோர் நம்மிடம் கேட்பது பெரிய சொத்தையோ, விலையுயர்ந்த பரிசையோ அல்ல. அவர்கள் வயதாகும்போது, தாங்கள் இன்னும் யாருக்கோ தேவையானவர்கள் என்ற உணர்வைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

பிள்ளைகளின் சிறு வயதில் அவர்கள் விழுந்தால் தூக்கி நிறுத்திய கைகள், வயதானபோது நடுங்கும்போது பிடித்துத் தூக்கப்பட வேண்டிய கைகளாக மாறுகின்றன. அந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வதுதான் மனிதநேயம்.

இன்று நாம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் எதைச் சாதிக்கிறோம் என்று ஒரு கணம் நின்று யோசிக்க வேண்டும். பதவி உயர்வு கிடைக்கலாம். பணம் சேரலாம். வீடு பெரிதாகலாம். வங்கிக் கணக்கு நிறையலாம். ஆனால், நம்மை வளர்த்த மனிதர்களின் கண்களில் நமக்கான இடம் காலியாகிவிட்டால், அந்த வெற்றியின் அர்த்தம் என்ன?

வாழ்க்கையின் இறுதியில் நம்முடன் பயணிப்பது நம் சம்பளச் சீட்டுகளோ, வங்கிக் கணக்குகளோ அல்ல. நாம் கொடுத்த அன்பும், நம்மால் காப்பாற்றப்பட்ட உறவுகளும்தான்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை ஒரு வட்டம்: வீட்டிற்கு மெருகூட்டும் வளைந்த வடிவங்கள்!
மனித உறவுகள் - human relationships,

அதனால் ‘நேரமில்லை’ என்று சொல்லும் முன், ஒருமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

நேரம் உண்மையிலேயே இல்லையா? அல்லது நமக்கு முக்கியமானவர்களுக்காக அதை ஒதுக்க மனமில்லையா?

அந்த வார்த்தைகள் காதில் விழும்போது, இறந்துபோனது ஒரு மனிதரின் உடல் மட்டுமல்ல என்று தோன்றுகிறது.

நம் உணர்வுகளில் ஏதோ ஒன்று இறந்து கொண்டிருக்கிறது.

பணம்… பணம்… பணம்…

ஒரு காகிதத்திற்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட மனிதர்களுக்குக் கொடுக்க முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோமா?

காலம் நம்மை ஆளக்கூடாது; நாம்தான் காலத்தை ஆள வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள்.

ஆனால் இன்று காலத்தை வெல்ல ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து, நம்மை நேசித்தவர்களையே இழந்து கொண்டிருக்கிறோம்.

நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லிச் சொல்லி… ஒருநாள், நமக்காக காத்திருந்தவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்.

அப்போது அவர்களிடம் பேச முடியாது.

அவர்களின் கையைப் பிடிக்க முடியாது.

அவர்களின் கண்களைப் பார்க்க முடியாது.

வீடியோ கால்கூட உதவாது.

ஏனென்றால், சில உறவுகளுக்கு ‘ஆன்லைன்’ என்ற வசதி கிடையாது.

பெற்றோருடன் செலவிடும் நேரம் செலவு அல்ல.

அது ஒரு முதலீடு.

அதன் பலன் பணமாக வராது.

இதையும் படியுங்கள்:
பொருட்களுக்கும் உண்டு ஆயுட்காலம்! இது அறிவது அவசியம்!
மனித உறவுகள் - human relationships,

ஒரு நாள், நாம் முதுமையின் வாசலில் நிற்கும்போது…

நம்மைச் சுற்றி மனிதர்கள் இருப்பார்களா என்பதுதான் அந்த முதலீட்டின் உண்மையான பலன்.

அதனால், இன்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்:

பெற்றவர்களுக்கு ஒதுக்க முடியாத இந்த நேரம், வேறு எந்த வேலைக்குப் பயன்படப் போகிறது?

வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?

ஒரு தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த அந்த மூன்று மகள்களின் கதை, அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டாக மட்டும் இருக்கக் கூடாது.

அது நம் ஒவ்வொருவருக்கும் காட்டப்பட்ட கண்ணாடியாக இருக்கட்டும்.

இன்று நமக்கு அருகில் இருப்பவர்களின் கைகளைப் பிடிப்போம்.

நாளை அவர்கள் புகைப்படமாக மாறிய பிறகு மலர் வைப்பதைவிட, இன்று அவர்கள் உயிரோடு இருக்கும்போதே ஒரு நிமிடம் அன்பாகப் பேசுவோம்.

ஏனென்றால், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நேரம் கிடைப்பதைவிட, உயிரோடு இருப்பவர்களுடன் வாழ நேரம் ஒதுக்குவதுதான் மனித வாழ்க்கையின் மிகப்பெரிய கடமை.

logo
Kalki Online
kalkionline.com