

கோபம், வன்மம் போன்ற எதிர்மறை உணர்வுகள் நம் மனதையும் உடலையும் எரிக்கும் நெருப்பாக சித்தரிக்கப்படுகின்றன. இயலாமை, ஏமாற்றம் ஆகியவை கோபத்தின் பின்னணி என்பதை உணர்ந்து, கோபம் தூண்டும் சூழ்நிலையிலிருந்து விலகி, பிடித்த செயல்களில் ஈடுபட வேண்டும் என கூறுகிறது. மன்னிக்கும் குணம், அன்பான வார்த்தைகள், கனிவான நடத்தை ஆகியவை நிம்மதியான வாழ்விற்கு வழிகாட்டும் என இந்த எழுத்து நினைவூட்டுகிறது.
கோபம் நம் மனதை சுமையாக்கி சிந்திக்கும் திறனைக் குறைக்கிறது. கோபத்தால் நல்ல உறவுகளையும், நண்பர்களையும் இழக்க நேரிடுகிறது. முக்கியமாக நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. அத்துடன் கோபத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் பின்னாளில் பெரிய வருத்தத்தை மட்டுமே தரும்.
வாழ்க்கைக்கு வன்மமும் கோபமும் தேவையற்றவை. இவை இரண்டும் ஒரு மனிதனின் மன அமைதியை சிதைப்பதுடன், உடல் நலனையும் கெடுத்து, உறவுகளைப் பிரிப்பது போன்ற தீமைகளையும் ஏற்படுத்துகின்றன. இந்தக் குறுகிய மனித வாழ்க்கையில் எதிர்மறை உணர்வுகளைத் தவிர்த்து அன்பையும் நிம்மதியையும் கடைப்பிடிப்பது அவசியம்.
வன்மம் என்பது முற்றிலும் தேவையற்ற ஒரு மனச் சுமையாகும். இது பொறாமை, கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் போன்ற தீய குணங்களை வளர்த்து நம்முடைய அமைதியைக் குலைக்கும். மனதில் வன்மத்தை சுமந்து திரிவது என்பது அடுத்தவருக்கு தீங்கு நினைக்கும் முன்பாக நம்மை நாமே எரித்துக்கொள்ளும் நெருப்புக்கு சமமாகும். வன்மம் என்பது மற்றவர்களைவிட நம் மனதைத்தான் அதிகம் பாதிக்கும். கடந்த கால கசப்பு உணர்வுகளைச் சுமப்பதால் புதிய இலக்குகளையும் வெற்றியையும் அடைய முடியாது.
யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் பகை வளர்ப்பது நம்முடைய சந்தோஷத்தைப் பறித்துவிடும். எனவே கடந்த கால கசப்புகளையும், வன்மத்தையும் விட்டுவிட்டு மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வது மனதிற்கு பெரும் அமைதியைத்தரும்.
கோபத்தைத் தூண்டும் எண்ணங்கள் வந்தால் அந்த இடத்தை விட்டு விலகி, வேறு ஆக்கபூர்வமான செயல்களில் அல்லது பிடித்தமான விஷயங்களில் கவனத்தைச் செலுத்தலாம். பெரும்பாலான கோபத்திற்குப் பின்னால் நம்முடைய இயலாமை அல்லது ஏமாற்றமே இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நம்மை நாம் மாற்றிக்கொள்ளலாம்.
கோபதாபங்களைக் குறைத்துக்கொண்டு நம்மை கோபப்படுத்தும் ஆட்களிடம் இருந்து சற்று விலகிச் செல்லப் பழகினால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும். சூழ்நிலைகளை அமைதியாக கையாள கற்றுக் கொள்வதும் கோபத்திற்கு பதிலாக மற்றவர்களிடம் கனிவாகவும் அன்பாகவும் பழக ஆரம்பித்தால் நிம்மதியான வாழ்வைப் பெறலாம்.
கோபத்தை கட்டுப்படுத்தவும் வன்மத்தைக் கைவிடவும் மன்னிப்பும் புரிதலும் உதவும். தவறுகளை மன்னிக்கப் பழகுவது மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது வன்மத்தை வேரறுக்கும். தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி நல்ல விஷயங்களில், ஆக்கபூர்வமான வேலைகளில் கவனத்தைச் செலுத்தலாம்.
கோபத்தால் எந்த நன்மையும் இல்லை என்பதை உணர்ந்து அமைதியான வழிகளை தேர்ந்தெடுப்பது சிறப்பு. காரணம் நாம் பேசும் சொற்களுக்கு, வார்த்தைகளுக்கு நிறைய சக்தி உண்டு. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பதுடன் நம் மனநிலையையும் மேம்படுத்தும். அதுவே மோசமான வார்த்தை அல்லது கோபமான சொல் அல்லது வன்மமான செயல் போன்றவை நம்முடைய மகிழ்ச்சியான மனநிலையைக் கெடுத்துவிடும். எனவே நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகளை பேசவும் பழகவும் வேண்டும்.
இந்த உலகில் நல்லபடியாக வாழ்வதற்கு கோபத்தை அடக்கி ஆளும் திறனும், நியாயமான கோபத்தை நேர்மையாக வெளிப்படுத்தும் ஆற்றலும் தேவை. கண்மூடித்தனமான கோபம் எப்பொழுதும் ஆபத்தானது. அதேபோல்தான் வன்மமும். எத்தனையோ பேர்களுடைய வாழ்க்கையை இந்த கோபம் மற்றும் வன்மம் அழித்த கதைகள் பல உண்டு.
எனவே நிம்மதியான வாழ்விற்கு வன்மமும் கோபமும் தேவையற்றது. இவை பலவீனம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடு. இவற்றைத் தவிர்த்தால் குற்றங்கள் குறைந்துவிடும். அன்பின் வழியில் வாழ்வை வளப்படுத்துவோமா நண்பர்களே!
கோபத்தையும் வன்மத்தையும் முற்றிலுமாகத் தவிர்த்து கனிவான வார்த்தைகளைப் பழகும்போது, உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் மதிப்பு உயர்வதோடு, மன அழுத்தமற்ற ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் பெறலாம்.