

பொறாமை குணம் மனித மனதில் குடி கொண்டிருக்கும் கொடிய அகநோய். ஆத்மாவை அழிக்கும் பெருநோய் என்றும் கூறலாம். புறத்தில் இருக்கும் எதுவும் அச்சம் தருவது அல்ல. உள்ளுக்குள்ளே இருந்து ஒருவரின் ஆன்ம பலத்தை அரித்துத் தின்னும் பொறாமையே அச்சம் தருவதாகும். சரியாக சொன்னால் இது ஒரு பயங்கரவாதமாகும்.
எப்படி ஒரு நச்சுத் தாவரம் வளர்ந்து மற்ற பயிர்களை அழிக்குமோ, அதேபோல, பொறாமைக் குணம் ஒரு மனிதரின் உள்ளே வளர்ந்தால், அவருக்குள்ளே இருக்கும் நற்குணங்கள், அமைதி மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அனைத்தையும் அழித்தொழித்து விடும்.
பொறாமைக்கான ஆணிவேர் தன்னிலை மறத்தல்:
பொறாமைக் கொள்ளும் ஒருவர், தான் அடைந்திருக்கும் உயர்வுகளையோ, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையோ ஒருபோதும் சிந்திப்பதில்லை. மாறாக, பிறர் அடைந்திருக்கும் உயரத்தை மட்டுமே இடைவிடாது சிந்தித்து, தன் ஆற்றலை முழுவதுமாக வீணாக்குகிறார்.
பிறர் வளர்ச்சி கண்டு எழும் இந்தக் கசப்பு, அவரின் உழைப்பைக் குறைத்து, மனதைக் கலங்கச் செய்து, இறுதியில் அவனது முன்னேற்றப் பாதையை அடைத்து விடுகிறது.
அடுத்தவர் வாழ்கிறாரே என்று வயிற்றெரிச்சல் படுவதால், மனச் சாந்தி கிடைக்காது; முடிவில்லா துயரமும், ஆத்ம வறுமையுமே கிடைக்கும். பொறாமையால் மற்றவர்களை வீழ்த்த நினைப்பவர், தன்னையே களங்கப்படுத்திக் கொண்டு, வீழ்ச்சியின் விளிம்பில் நிற்பர்.
வெற்றிக்கான ஊக்கசக்தியாக மாற்றுவோம்:
பொறாமை குணத்தை மாற்றுவதும், தன்னைச் செதுக்குதலும் ஒன்றே. பிறரின் வெற்றியைப் பொறாமையுடன் பார்ப்பதற்குப் பதிலாக, அதைத் தனக்கான ஊக்க சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ‘அவரால் சாதிக்க முடிந்ததென்றால், நம்மால் ஏன் முடியாது?’ என்ற நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்வின் அனைத்துச் சிந்தனைகளும், நமது வளர்ச்சி, நமது நலம், நமது குடும்பத்தின் உயர்வு என்ற ஒரே புள்ளியில் குவிக்கப்பட வேண்டும்.
நமது கவனத்தைக் குவித்து, நம்முடைய கடமையைச் செம்மையாகச் செய்து முன்னேறுவதே, பொறாமையாளர்களும், துயரங்களும் நிறைந்த உலகில் நாம் அமைதியுடன் வாழ்வதற்கான ஒரே தந்திரம்.
பாரத வரலாற்றில், பொறாமையின் கொடூரமான விளைவை நாம் துரியோதனன் வாழ்வின் மூலம் அறியலாம். தன்னுடைய சகோதரர்களான பாண்டவர்கள், தரும நெறியாலும், உழைப்பாலும், மக்களின் அன்பாலும், இந்திரப்பிரஸ்தத்தில் அளவற்ற செல்வத்தையும், புகழையும், வெற்றிகளையும் பெற்றபோது, துரியோதனன் அவற்றை நேர்மறையாகப் பார்க்கவில்லை. பாண்டவர்களின் நல்வாழ்வைப் பார்த்து, அவன் நெஞ்சில் பொறாமை என்னும் விஷம் மூண்டது.
இந்தப் பொறாமையின் விளைவே, மாபெரும் சூதாட்டமாக மாறி, முடிவில் குருட்சேத்திரப் போர் என்னும் உலகப் பேரழிவுக்கு வித்திட்டது. தன் பொறாமையின் காரணமாக, துரியோதனன் தன் ஒட்டுமொத்த குலத்தையும், உறவுகளையும், பேரரசையும் அழித்து, கடைசியில் தானும் மாண்டான்.
கடந்து செல்வோம்; உணர்ந்து செயல்படுவோம்:
நமது வாழ்வில் இத்தகைய பொறாமைக் குணம் கொண்ட நபர்களை நாம் கடக்காமல் இருக்க முடியாது. அவர்கள் எங்கும் நிறைந்திருப்பார்கள்.
அவர்கள் நம்மைக் கண்டு எரிச்சல் கொள்ளும்போது, நமது முன்னேற்றத்திற்குத் துணை நிற்க மறுக்கும்போது, நமது வளர்ச்சியைக் கண்டு சந்தேகம் கொள்ளும்போது, முற்றிலும் அவர்களைக் கண்டு கொள்ளாதிருப்பது நன்மை பயக்கும்.
நம் வேலையைச் சிறப்பாகச் செய்வோம். எப்போதும் போல நம் இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் செயல்படுவோம். நமக்கு நாமே ஊக்கம் கொடுத்து நமது முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்.
அடுத்தவர் வாழ்வை வீணாக்க நினைக்கும் பொறாமை குணம் கொண்டவருக்குத் துயரமே பரிசாகக் கிடைக்கும். ஆனால், நம் கடமையில் கவனம் செலுத்தி, நமக்காக நாம் உழைக்கும்போது, அமைதியும் வெற்றியும் நமது நிழலாகத் தொடரும்.