
வெற்றிக்கு வழி வகுக்கும், கடவுளரின் குணம் எது தெரியுமா?
உற்சாகம்.
இதற்கான ஆங்கில வார்த்தை எந்துஸியாஸம் ENTHUSIASM.
ENTHEOS என்பது ஒரு கிரேக்க வார்த்தை. இதிலிருந்து பிறந்தது தான் ENTHUSIASM.
ENTHEOS என்றால் கடவுளிடம் இருப்பது அல்லது இறைகுணம் நிரம்பியது என்று பொருள்.
இதை கிரேக்க நாகரிகம் மட்டும் கூறவில்லை. இந்திய நாகரிகமும் வலியுறுத்துகிறது.
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் ஒரு காட்சி.
கொடூரமான, இரக்கமற்ற ராவணன் ஆளும் இலங்கையில் புகுந்து அனுமன் சீதையைத் தேட ஆரம்பிக்கிறான்.
எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் எப்படித் திரும்பிப் போக முடியும்? சற்று சிந்திக்கிறான். அவனுக்கு வழி தெரிந்து விடுகிறது.
அதை வாயாரச் சொல்லி தன்னை ஊக்கப்படுத்திக் கொள்கிறான்.
“மனம் தளராமையே செல்வத்திற்குக் காரணம். மனம் தளராமையே மேலான சுகம். எப்பொழுதும் எல்லா விஷயங்களிலும் முயலும்படி செய்வது மனம் தளராமையே. மானிடரின் காரியத்தை எது பலனுடையதாகச் செய்கிறதோ அதை மனம் தளராமை செய்கிறது. ஆதலால் நான் உற்சாகத்தினால் ஏற்பட்ட சிறந்த முயற்சியை மேற்கொள்கிறேன்”.
(சுந்தரகாண்டம் 12வது ஸர்க்கம் 10. 11ம் ஸ்லோகங்கள்)
இப்படி ‘அநிர்வேதம்’ (மனம் தளராமை) என்ற சொல்லைக் கூறிக் கொண்டு உற்சாகம் அடைகிறான்; வெற்றி பெறுகிறான். கடவுளரின் குணத்தைக் கொண்ட அனுமனே வெற்றிக்கான வழியைக் காண்பிப்பவன்.
அன்று முதல் இன்று வரை இது தான் உண்மை.
ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்த ரைட் சகோதரர்களை எள்ளி நகையாடினார்கள் – பறவையைப் போல பறக்கும் எந்திரம் தயாரிக்கப்போகிறார்களாம், இவர்கள் என்று!
எடிஸனைக் கேலி செய்தார்கள் – மெஷினை வைத்து பேசப்போகிறானாம் இவன் என்று!
ஃபோர்டை எள்ளி நகையாடினார்கள் – சாலையிலே ஓடுமாம் இவனது கார் என்று.
அவர்கள் அனைவரும் ஜெயித்தார்கள் – உற்சாகத்தை மேற்கொண்டு!
இது முடியாது என்ற எண்ணத்தை விட்டுவிட்டு இது எப்படி முடியும் என்று எண்ண வைப்பது உற்சாகமே!
“ஒவ்வொரு பிரச்னையும் அதற்கான தீர்வை அந்தப் பிரச்னைக்குள்ளேயே வைத்திருக்கிறது.”
“Every Problem contains within itself the seeds of its own solution” –
இந்த 11 வார்த்தை சூத்திரத்தை உலகிற்கு அளித்தவன் ஸ்டான்லி ஆர்னால்ட் என்ற சிறுவன்.
13 வயதான அவன் க்ளீவ்லாந்திலேயே மிக மோசமாகத் தாவுபவன் (Jumber) என்ற பெயரைப் பள்ளியில் எடுத்தான். உடல்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற அவன் ஏன் முன்னால் தாவ வேண்டும், பின்னால் தாவிப் பார்த்தால் என்ன என்று நினைத்தான். அனைவரும் அவனது இந்த எண்ணத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
ஆனால் அவன் முயன்று பின்னால் தாவிப் பார்த்தான். அனைவரும் தாவுவதற்கு நின்ற போது ஜிம்மில் இருந்த கோச் தாவலாம் என்ற போது அவன் பின்னால் தாவினான்.
என்ன ஆச்சரியம்! அவனது சாதனையை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவனைப் பாராட்டினார். புதிய ஒரு விளையாட்டு வழியைக் காட்டி உற்சாகத்தை அவன் உலகில் ஊட்டினான்.
பேக்வேர்ட் ப்ராட் ஜம்பரில் (Backward Broad Jumber) உலகின் முதல் சாம்பியனாக அவன் ஆனான்.
மிகப்பெரும் நிறுவனமான ஸ்டான்லி ஆர்னால்ட் & அசோஸியேட்ஸ் - STANLEY ARNOLD & ASSOCIATES - நிறுவனத்தை நிறுவி உலகப் புகழ் பெற்றான்.
ஆக வெற்றி பெறத் தேவையான முதல் குணம் உற்சாகமே!
உற்சாகமே உயிர்!
அனுமனிலிருந்து ஆர்னால்ட் வரை சொல்வது இதைத் தான்!