
கவனம் உடையோர் பிறரின் கவனத்தை தம்பால் ஈர்க்கின்றனர். கவனச் சிதறல் உடையோர் கேட்பாரின்றி அனாதைகள் போல் கிடக்கிறார்கள். கவனம் என்பது நம் அன்றாட வாழ்வில் மிக மிகத் தேவையானது. சாலையைக் கடக்கும் போது கவனமின்றிக் கடந்தால் சவமாகிறோம். பேருந்தில் படிக்கட்டில் கவனமின்றி பயணித்தால் பிணமாகிறோம். கவனக் கூடுதல் கைத்தட்டலுக்குரியன. கவனமின்மை பல காரியங்கள் நிறைவேறுதலில் தடையாகின்றன. கவனம் படிக்கட்டு. கவனமின்மை வழுக்கும் பாறை.
புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் மின் தூக்கி முன் நிற்கிறார். மின் தூக்கி முன் நிலைக் கதவில் 'மின் தூக்கி வேலை செய்யவில்லை, பழுதாகி உள்ளது, படிக்கட்டில் இறங்கிச் செல்லவும்' என பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கதவிற்கு முன் காவலாளி ஒருவரும் கவனமின்றி மின் தூக்கி உள்ளே நுழைய முயல்பவர்களை தடுப்பதற்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
30 மாடிக் கட்டிடம். 30 ஆவது மாடியில் அந்த விஞ்ஞானி ஆய்வறிக்கை சமர்ப்பித்துவிட்டு தரைத்தளத்திற்கு செல்வதற்காக மின் தூக்கி நகர்வு பலகைக் கதவு முன் வந்து நிற்கிறார். காவலாளி மின்தூக்கி நகர்வு பழுதடைந்துள்ளது என தடுக்கிறார். அந்த விஞ்ஞானி ஏதோ ஒரு நினைவில், அந்தக் காவலாளியை தன் முழுத் திறனையும் பயன்படுத்தி நகர்த்தி விட்டு அவர் இறங்க முயல பரலோகம் இறப்பை சந்திக்கின்றார். அவர் அறிவாளி தான். இருந்தும் கவனமற்ற அவரின் செயல்பாடு அவரை காலனின் காலடியில் காணிக்கையாக்கிவிட்டது.
இப்படித்தான் பலரும் சாலை விபத்து, மின்விபத்து, குளியல் அறை விபத்து, சமையலறை விபத்து, தேர்வு எழுவதில் விபத்து, உடற்பயிற்சி விபத்து, மருந்து மாத்திரை கையாள்வதில் விபத்து, கோப்புகளைக் கையாள்வதில் விபத்து, செய்யும் வேலைகளில் விபத்து, பணிகளில் விபத்து, பனிமனைகளில் விபத்து, வாழும் வாழ்க்கையில் விபத்து என கவனச் சிதறலால் நாம் கவலைக்கு, துன்பத்திற்கு உள்ளாகின்றோம்.
கவனம், கவனம் என நம் முன்னோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் என பலரும் 'கவனம்' கையாளப்பட வேண்டுமென்பதை நம் அன்றாட வாழ்வில் அறிவுறுத்தி வருவதை நாம் அறிவோம்.
இருந்தும் பேசப்படும் வார்த்தைகளை முழுவதையும் நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை, ஏனோதானோ என்று எச்சரிக்கை உணர்வின்றி ஏடகூடமாய் இருந்து விடுகிறோம். விளைவு விபரீதங்களை சந்திக்கிறோம்.
இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், மகிழுந்துகள், பேருந்துகள், தொடர் வண்டிகள், விமானங்கள், சுவர்கள், விற்கும் பொருட்களின் மேல் உறைகள் என பலவற்றிலும் நச்சென படிப்போரின் மனதில் பதியும் அளவிற்கு 'கவனம் தேவை' என்று இரு வார்த்தைகளில் வாசகங்கள் இடம்பெறுகின்றன.
நாம் கவனமுடன் இருந்தால் காரியங்கள் எளிதில் கைகூடும், கவனமின்றி இருந்தால் கூடிய காரியங்கள் விரைவில் கலைந்தோடும். கவனம்....கவனம் என இருப்போர் பிறரின் கவனம் அவர்மேல் படும் வண்ணம் தொடர்ந்து பல காரியங்களில் வெற்றிகரமாய் பயணித்துக் கொண்டிருப்பார். தோல்விகளை அவர் போன்றோர் தோளில் போட்டு சுமப்பதில்லை. அவ்வப்போது, அங்கங்கே, களைகளை உரமாக்குவது போல் உழுது கொண்டே இருப்பார்கள். கவனம்...கவனம்... வாழும் வாழ்வில், அனைத்து செயல்களிலும் கவனம் கொள்வோம்.