
மனித வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளுக்கும், சுக துக்கங்களுக்கும் ஆன்மிக ரீதியான காரணமாக விளங்குபவை நவகிரகங்களே என்று கூறியுள்ளனர் ஆன்றோர். அப்படிப்பட்ட நவகிரகங்களின் குணநலன்களைக் குறிக்கும் அவர்களின் பயோ-டேட்டா குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. சூரியன்: நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பான இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாவார். இவரது திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன், தலம் - சூரியனார் கோவில், நிறம் - சிவப்பு, வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம், தானியம் - கோதுமை, மலர் - செந்தாமரை, எருக்கு, வஸ்திரம் - சிவப்பு, ரத்தினம் - மாணிக்கம், நிவேதனம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.
2. சந்திரன்: பாற்கடலிலிருந்து தோன்றிய சந்திரன், தன்னொளி உடையவர். கடக ராசிக்கு அதிபதியான இவர், வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். இவரது திக்கு – தென்கிழக்கு, அதிதேவதை – ஜலம், ப்ரத்யதி தேவதை – கௌரி, தலம் – திருப்பதி, நிறம் - வெள்ளை. வாகனம் - வெள்ளைக் குதிரை, தானியம் – நெல், மலர் - வெள்ளை அரளி, வஸ்திரம் – வெள்ளாடை, ரத்தினம் – முத்து, நிவேதனம் - தயிர் சாதம்.
3. அங்காரகன் (செவ்வாய் பகவான்): வீரபத்திரரின் அம்சமான அங்காரகன் எனும் செவ்வாய் பகவான், முருகப்பெருமானை தெய்வமாகக் கொண்டவர். பாவப் பலனைக் கொடுக்கக்கூடிய குரூர். இவர் மேஷம், ரிஷ்பம் ராசிக்கு அதிபதி. இவரது திக்கு – தெற்கு, அதிதேவதை – நிலமகள், ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர், தலம் - வைத்தீசுவரன் கோவில், நிறம் – சிவப்பு, வாகனம் – ஆட்டுக்கிடா, தானியம் – துவரை, மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி, வஸ்திரம் - சிவப்பு ஆடை, ரத்தினம் – பவளம், நிவேதனம் - துவரம் பருப்பு பொடி சாதம்.
4. புதன் பகவான்: கல்விக்கு அதிபதியான புதன் பகவான் சந்திரனின் குமாரர் ஆவார். தீய சக்திகளை விளைவிக்கும் பீடைகளை அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவ இவர், மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதி. இவரது திக்கு - வடகிழக்கு, அதிதேவதை - மகாவிஷ்ணு, ப்ரத்யதி தேவதை - நாராயணன், தலம் - மதுரை, நிறம் - வெளிர் பச்சை, வாகனம் - குதிரை, தானியம் - பச்சைப் பயறு, மலர் - வெண்காந்தள், வஸ்திரம் - வெண்ணிற ஆடை, ரத்தினம் - மரகதம், அன்னம் - பாசிப் பருப்பு பொடி சாதம்.
5. குரு பகவான்: தேவ குரு என்ற பட்டத்தைக் கொண்ட பிருகஸ்பதி முழு சுப கிரகமாவார். இவர் தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடியவர். தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி. இவரது திக்கு - வடக்கு, அதிதேவதை - பிரம்மா, ப்ரத்யதி தேவதை - இந்திரன், தலம் - திருச்செந்தூர், நிறம் - மஞ்சள், வாகனம் - மீனம், தானியம் - கடலை, வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை, ரத்தினம் - புஷ்பராகம், நிவேதனம் - கடலைப் பொடி சாதம், சுண்டல்.
6. சுக்கிரன் பகவான்: அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் எனும் சுக்கிர பகவான். மழைக்கோள் என அழைக்கப்படக்கூடியவர். இவர் ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். இவரது திக்கு – கிழக்கு, அதிதேவதை - இந்திராணி, ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன், தலம் - ஸ்ரீரங்கம், வாகனம் – முதலை, தானியம் - மொச்சை, மலர் - வெண் தாமரை, வஸ்திரம் - வெள்ளாடை, ரத்தினம் - வைரம், நிவேதனம் - மொச்சைப் பொடி சாதம்.
7. சனி பகவான்: சூரிய பகவானின் குமாரர் இவர். பாவ பலன்களைத் தருவதில் ஈஸ்வர பட்டம் பெற்றவர். சனி பகவானைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி. மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி இவர். இவரது திக்கு - மேற்கு, அதிதேவதை - யமன், ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி, தலம் - திருநள்ளாறு, நிறம் - கருமை, வாகனம் - காகம், தானியம் - எள், மலர் - கருங்குவளை, வன்னி, வஸ்திரம் - கருப்பு நிற ஆடை, ரத்தினம் - நீலம், நிவேதனம் - எள்ளுப்பொடி சாதம்.
8. ராகு: நிழல் கிரகம் என அழைக்கப்படும் ராகு அசுரத் தலையும், பாம்பின் உடலையும் கொண்டவர். வீரம் மிக்க இவர் கருநாகம் என்று அழைக்கப்படுபவர். இவரது திக்கு - தென்மேற்கு, அதிதேவதை - பசு, ப்ரத்யதி தேவதை - பாம்பு, தலம் - திருக்காளத்தி, நிறம் - கருமை, வாகனம் - நீல சிம்மம், தானியம் - உளுந்து, மலர் - மந்தாரை, வஸ்திரம் - கருப்பு நிற ஆடை, ரத்தினம் - கோமேதகம், நிவேதனம் - உளுத்தம் பருப்புப் பொடி சாதம்.
9. கேது: நாகத்தின் தலையும், அசுரனின் உடலையும் கொண்ட இவர் செந்நாகம், சிகி என்றும் அழைக்கப்படுபவர். இவரது திக்கு - வட மேற்கு, அதிதேவதை - சித்திரகுப்தன், ப்ரத்யதி தேவதை - பிரம்மன், தலம் - திருக்காளத்தி, நிறம் - செம்மை, வாகனம் - கழுகு, தானியம் - கொள்ளு, மலர் - செவ்வல்லி, வஸ்திரம் - பல நிற ஆடை, ரத்தினம் - வைடூரியம், நிவேதனம் - கொள்ளுப்பொடி சாதம்.