
அழகர் கோவில் 108 திவ்ய வைணவ தேசங்களில் ஒன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். சித்திரை திருவிழா என்றாலே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தான் நினைவுக்கு வரும். இந்த அழகரையும், மலையையும் காவல் காத்து வருபவர் தான் பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி. அழகர் கோவிலின் ராஜ கோபுரக் கதவு வருடம் முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் மட்டுமே அந்த கதவு திறக்கப்படும்.
கருப்பண்ணசாமிக்கு என்று உருவம் எதுவும் கிடையாது. மூடப்பட்ட கதவு, பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் மாலைகள் என கம்பீரமாக காட்சித் தருகிறார் கருப்பண்ணசுவாமி. இங்கே மிகப்பெரிய அரிவாள் உள்ளது. அழகர்மலைக்கு பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி காவல் தெய்வமாக மாறியக் கதை தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அழகர் பெயரில் மட்டுமில்லை தோற்றத்திலும் கொள்ளை அழகு. அதனால் தான் அவரை கவர்ந்து செல்ல ஆசைப்பட்டான் மலையாள தேசத்து மன்னன் ஒருவன். வளம் மிகுந்த கேரள தேசத்தை ஆட்சிப் புரிந்து வந்த மன்னன் ஒருவன் ஒருமுறை அழகர் கோவில் வந்து அழகரை தரிசித்தான். அழகரின் அழகையும், சக்தியையும் கண்ட அரசன் அதை தன் தேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினான்.
நாடு திரும்பிய அரசன் மந்திர தந்திரங்களில் நன்றாக தேர்ச்சிப்பெற்ற 18 கேரளத்து மந்திரவாதிகளை அழைத்து அழகரை கேரளம் எடுத்துவர சொல்லி உத்தரவிட்டான். பதினெட்டு மந்திரவாதிகளும் அழகர் கோவில் வருவதற்கு தயாரானார்கள். அவர்களுக்கு காவலாக மலையாள தேசத்து காவல் தெய்வமான கருப்புசாமியும் வெள்ளை குதிரையில் ஏறி அவர்கள் முன்பு சென்றது. அனைவரும் அழகர்மலையை அடைந்தனர்.
அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது. அழகரை எடுத்து செல்ல ஆலயத்தில் மறைந்திருந்து மந்திரம் ஜெபிக்க ஒரு மையை பயன்படுத்தினர் மந்திரவாதிகள். அந்த மையை கண்களின் இமைகளில் பூசிக்கொள்ள அவரவர் உருவம் மறைந்துப் போய்விடும். அப்படி தந்திரமாக செயல்பட்டு அழகரின் சக்தியை களவாட திட்டம் போட்டனர்.
இதை பெருமாள் கோவில் பட்டர் ஒருவரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் பற்றிக்கூறி எச்சரித்து மறைந்தார். பட்டர் உடனே நாட்டார்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி மறுநாள் நிவேதனத்திற்கு செய்யும் பொங்கலில் அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுவதும் உருட்டி வைத்தார். பொங்கலின் வாசனையால் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள் அதை எடுத்து தின்றனர். அடுத்த கணமே அதிகமாக சேர்க்கப்பட்ட மிளகின் காரம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.
இதனால் கண்ணில் இருந்த மை அழிந்து உருவம் வெளிப்பட்டது. உடனே நாட்டார்கள் அவர்களைப் பிடித்து கொன்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒருபடிக்கட்டில் புதைத்தனர். மந்திரவாதிக்கு காவலாக வந்த காவல் தெய்வத்தையும் மந்திர சக்தியால் கட்டினர். அந்த தெய்வமோ அழகரின் அழகில் மயங்கி இனி தான் இங்கிருந்து அழகருக்கு காவல் செய்வதாக சொல்லியது.
அதற்கு கூலியாக தினமும் அழகருக்கு செய்யப்படும் அர்த்த ஜாம நிர்மாலிய நிவேதனங்களை தனக்கு வழங்கும்படி கேட்டது. அதற்கு அனைவரும் சம்மதிக்க, இன்றளவும் அழகருக்கு காவல் தெய்வமாக பதினெட்டாம்படி கருப்பு பாதுகாக்கிறது. அந்த பதினெட்டு மந்திரவாதிகளையும் புதைத்த 18 படிகளின் மீது ஏறி நின்று காவல் தெய்வமாக காட்சித் தருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி.