பிறந்த தின நட்சத்திரத்துக்குரிய வழிபாட்டுத் தலங்கள்!
நட்சத்திரங்கள் மொத்தம் 27. இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களில்தான் ஒவ்வொருவரின் பிறந்த தினங்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு கோயில் உண்டு. அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று அதற்குரிய கோயில்களுக்குச் சென்று அத்தல இறைவனை தரிசனம் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம். இதன் அடிப்படையில் 27 நட்சத்திரத்திற்குரிய கோயில்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
அஸ்வினி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
பரணி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம் அக்னீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கார்த்திகை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம். இது மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ரோஹிணி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பாண்டவ தூதப் பெருமாள் ஆலயம். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பேரஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் உள்ளது.
மிருகசிரீடம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிநாராயண பெருமாள் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கி.மீ. தூரத்தில் முகுந்தனூர் என்ற ஊரில் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.
திருவாதிரை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபய வரத ஈஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அபிராமப்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து 12 கிலோ மீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.
புனர்பூசம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிதீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த கோயில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கி.மீ. தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் பழைய வாணியம்பாடியில் இருக்கிறது.
பூசம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில். பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 30 கி.மீ. தொலைவு சென்றால் விளங்குளம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் இக்கோயிலை வந்து அடையலாம்.
ஆயில்யம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோயில் கற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோயில் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவிசநல்லூரிலிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.
மகம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலை வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது விராலிப்பட்டி. இங்கிருந்து 2 கி.மீ. சென்றால் இந்தஆலயத்தை அடையலாம்.
பூரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் திருவரங்குளம் உள்ளது.
உத்திரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாங்கல்யேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் இடையாற்றுமங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
அஸ்தம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது கிருபா கூபாரேசுவரர் திருக்கோயில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ. தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
சித்திரை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் சித்திர ரத வல்லபப்பெருமாள் கோயில். மதுரையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள குருவிதுறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் இக்கோயில் உள்ளது.
சுவாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை, பூந்தமல்லி சாலையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் சித்துக்காடு உள்ளது.
விசாகம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைகோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை சென்றும் தென்காசியில் இருந்தும் அங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றும் இந்த ஆலயத்தை அடையலாம்.
அனுஷம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் திருநின்றியூர் திருத்தலத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
கேட்டை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.
மூலம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது சிங்கீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ. தொலைவில், பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
பூராடம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் ஆகாசபூரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.
உத்திராடம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்கொடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்திலிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ சென்றால் பூங்கொடி தலத்தை அடையலாம்.
திருவோணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசன்னா வேங்கடேச பெருமாள் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
அவிட்டம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் வழியாக மருதாநல்லூர் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.
சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கினிபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
பூரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவானேஸ்வர் திருக்கோயிலில் அருளும் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் ரங்கநாதபுரம் என்ற ஊரில் உள்ளது. திருவையாறில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இந்த தலம் உள்ளது.
உத்திரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள திருபுவனவாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது.
ரேவதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது கயிலாயநாதர் ஆலயம். திருச்சியில் இருந்து முசிறி சென்று அங்கிருந்து 21 கி.மீ. சென்று தாத்தையங்கார் ஊரில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.