பல வழிமுறைகளில் இறைவழிபாடு செய்கின்றனர். திருப்பதிக்கு பாதயாத்திரை செல்வது, ஐயப்பனுக்கு பல நாட்கள் கடுமையான விரதம் இருந்து வழிபடுவது, தமிழ் கடவுளாம் முருகனுக்கு உரிய விசேஷமான நாட்களில் பாதயாத்திரை செல்வது உள்ளிட்ட வழிபாடுகள் ஏராளம் உண்டு. இதில் பாதயாத்திரை குறித்து தெரிந்து கொள்வோம்.
முருகனுக்கு உரிய விசேஷமான நாட்களில் பல நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து ஆண்டி முதல் அரசன் வரை பல ரூபங்களில் அருள்பாலிக்கும் பழனி முருகனை பாதயாத்திரையாக சென்று தரிசித்தால் கர்மவினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
பெற்றோர் செய்த பாவம் குழந்தைகளை சேரும், யாரோ செய்த தவறு என்னை பாதிக்கிறது என்று பலரும் கூறக் கேட்டிருப்போம்! ஜோதிட ரீதியாக பாதயாத்திரை செல்வது என்பது சனிப்பெயர்ச்சிக்கான மிகச்சிறந்த பரிகாரங்கள் அல்லது தன்னைத்தானே உணரக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி கால்கள், பாதங்கள் என்பது சனிபகவானை குறிக்கும். கடின உழைப்பு என்பது சனி பகவானின் காரகத்துவத்தை குறிக்கும். நீதி, நேர்மை, மட்டுமல்லமால், உழைப்பது என்பதும் சனியின் தன்மைகளில் ஒன்று. இதனால் தான், சனி பெயர்ச்சி ஒரு ராசிக்கு ஏழரை சனியாக, ஜென்ம சனியாக, அல்லது அஷ்டம சனியாக வரும் போது, கடினமாக உழைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது.
பாத யாத்திரை என்பது கடுமையான, கடினமான செயலாகும். இதற்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன பலமும் அவசியம். ஒரு நபர் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று இறைவனை தரிசிப்பது என்பது தன்னை பல விதமாக சோதித்துக் கொள்கிறார்கள் என்பதையும் உள்ளடக்கும்.
விரும்பி, ஒரு கடினமான விஷயத்தை செய்வது, அதை வெற்றிகரமாக செய்துமுடிப்பது, நீங்களே அறியாத அளவுக்கு பெரிய மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் தரும். கர்ம வினைகளின் சுழற்சி, அதை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை, இது போன்ற கடினமான பிரார்த்தனைகள் தரும். உடலை வருத்திக் கொண்டு விரதம் இருப்பது என்பது இறைவனுக்காக, ஏதோ ஒரு வேண்டுதலுக்காக செய்யப்படுகிறது என்றாலும், அது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். சிந்தனைகளை தெளிவாக்கி, குழப்பங்களுக்கு தீர்வு காண வைக்கும்.
ஜோதிட சாஸ்திரங்கள் கிரகங்களின் தன்மை என்ன, என்னசெய்தால் கிரகங்கள் பலமடையும், என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பல விஷயங்களை வரையறுத்துள்ளன. இதில் ஒரு சில விஷயங்கள் ஒரு மனிதனின் உளவியலோடு நெருக்கமாக இணைந்துள்ளது.
திருப்பதிக்கு படியேறி செல்வதும் இதில் அடங்கும். திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில், வெறுங்காலில் நடந்து கிரிவலம் செல்வது இதில் அடங்கும். பாதயாத்திரை சென்றால் பாவங்கள் குறைகிறதோ இல்லையோ, உடல் மற்றும் மன வலிமை அதிகரிக்கும். மற்றொரு பக்கம், ஜோதிட ரீதியாக, பாத யாத்திரை செல்வது சனி பெயர்ச்சி, ஜாதகத்தில் சனியால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும். எனவே, சனி பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய கடினமான சூழல் மாறலாம் அல்லது நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் கிடைக்கலாம்!
நம் முன்னோர் அன்றிலிருந்து பின்பற்றி வந்த கடவுளை வழிபடும் முறைகளில் மிக முக்கியமான ஒன்றான பாதயாத்திரை ஆன்மீகத்தோடு அறிவியலும் தொடர்புடையது.