முதலாம் பானிபட் யுத்தம் 1526ம் ஆண்டு முகலாயருக்கும் பாபருக்கும் நடைபெற்றது. இதில் பாபர் வெற்றி பெறுகிறர். அதைத் தொடர்ந்து கிழக்கு இந்தியா முழுவதையும் பாபர் கைப்பற்றி விடுகிறார். 1528ம் ஆண்டு அயோத்தி வழியாக திரும்பிய பாபர், அங்கு வற்றாது ஓடும் சரயு நதிக்கரையில் ஒய்வெடுத்தார். சரயு நதியின் அழகும் கம்பீரமும் அதில் தவழ்ந்து வந்த தென்றலும் பாபரை மிகவும் கவர்ந்தது. உடனே, அதன் கரையில் ஒரு மசூதி கட்டவேண்டும் என்று திட்டமிட்டார் அதற்கான ஆணையையும் தனது தளபதி மீர்பாஹியிடம் கூறுகிறார்.
ஏற்கெனவே அங்கிருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டிவிடலாம் என்று மீர்பாஹி போட்ட கணக்கு அவ்வளவு எளிதில் கைகூடவில்லை. மன்னர் ராஜா மெகதீர் சிங், தேவேந்திர பாண்டே, ராணி ஜெயராஜ் கன்வர் என்பவர்களுடன் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட போரை ராமர் கோயிலுக்காக மேற்கொள்ள வேண்டியிருந்தது.
மன்னர் தேவேந்திரா பாண்டே 17 நாட்கள் மீர்பாஹியின் பெரும்படையை எதிர்த்து நின்று களத்தில் போராடினார். அதையும் தாண்டி, ராணி ஜெயராஜ் கன்வர் ஒரு படி மேலே போய் தன்னுடன் ஐயாயிரம் (பெண்களை) வீராங்கனைகளைக் கொண்ட படையுடன் போரிட்டார்,
இப்படி அயோத்தியில் பிறந்த ஒவ்வொருவரும், வீரராகவோ வீராங்கனையாகவோ மாறுவதைக் கண்ட பாபரின் படை, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எதிர்ப்பவர்களை பயமுறுத்த வேணடும் என்பதற்காக, சிறைப்பிடிக்க வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமல் ராணியை போர்க்களத்தில் தலையை வெட்டிக் கொன்றனர். மீர்பாஹியின் பீரங்கி மற்றும் துப்பாக்கி படையை பழங்கால வேல், வாள் போன்ற ஆயுதங்களுடன் எதிர்கொள்ள முடியாத நம் வீரர்கள் பல ஆயிரக்கணக்கில் பலியாகினர்.
இப்படி ராமர் கோயிலை கைப்பற்ற வருகிறார்கள், கோயிலை சிதைத்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த அக்கோயில் அர்ச்சகராக இருந்த பாபா ராம்தேவ் என்பவர் கர்ப்பகிரகத்தில் இருந்த குழந்தை ராமர் சிலையை எடுத்துக் கொண்டு தலைமறைவானார். இதை அறிந்த மீர்பாஹி சல்லடை போட்டு அர்ச்சகரையும் அவர் எடுத்துச் சென்ற ராமர் விக்ரகத்தையும் தேடினார். ஆனால், கடைசி வரை இருவருமே அவரது கையில் கிடைக்கவில்லை. நீண்ட காலம் கழித்து மலைக்குன்றில் இருந்த குழந்தை ராமர் சிலை மட்டும் மீட்கப்பட்டது. அதுதான் இன்று வரை ராமர் கோயிலில் ராம் லல்லாவாக வழிபடப்படுகிறது.
ஒரு சிறு கோயில்தானே! போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருந்தால், அவர்களது உயிர் போயிருக்காது. மாறாக, பாபரின் ஆசியும் பொன்னும், பொருளும் கூட பரிசாகக் கிடைத்திருக்கும். ஆனால், தங்களது உயிரை விட ராமர் கோயிலே உயர்ந்தது என்ற எணணம் கொண்டிருந்ததால் களத்தில் பலியாவோம் எனத் தெரிந்தே எதிர்த்து நின்று உயிரை விட்டனர். இவர்களின் இரத்தத்தின் மீது நடந்து சென்றுதான் மீர்பாஹி ராமர் கோயிலை கைப்பற்ற முடிந்தது. கோயில் தகர்க்கப்பட்டு மன்னரின் விருப்பப்படி அங்கு மசூதியும் கட்டப்பட்டது. அதுவே பாபர் மசூதியானது.
இப்படி போரும், போராட்டமுமாக சென்ற ராமர் கோயில் வரலாற்றில் ஒரு திருப்புமுனை பிரிட்டிஷார் ஆட்சியில் ஏற்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய்க்கலகம் துவங்கி, பல்வேறு போராட்டங்களில் இந்து - முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு பொது எதிரியான பிரிட்டிஷாரை எதிர்க்கத் துவங்கினர். ஆனால், அயோத்தியில் மட்டும் இந்து - முஸ்லிம் ஒன்றுபடுவதற்கு ஒரு உறுத்தலாக, நெருடலாக ராமர் கோயில் பிரச்னை இருந்தது.
அன்று அயோத்தியில் இருந்த இரு மதத் தலைவர்களான பாபா ராம்சரந்த் மற்றும் அமீர் அலி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அயோத்தியில் பதினைந்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. இதில் ஐந்து மசூதிகளில் வழிபாடு நடப்பதில்லை. வழிபாடு நடக்காத மசூதிகளில் பாபர் மசூதியும் ஒன்று. ஆகவே, ராமர் கோயிலை இந்து சகோதரர்களுக்கே கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து அதை ஒப்பந்தத்தில் எழுதி இருவரும் கையெழுத்திட்டனர்.
எல்லாம் சுபமாக முடிந்தது என்று நினைத்த வேளையில், பிரிட்டிஷார் விழித்துக் கொண்டனர். தாங்கள் இந்தியாவில் பிழைப்பு நடைத்த வேண்டும், இந்த மண்ணை ஆள வேண்டும், இங்குள்ள வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துச் செல்ல வேணடும் என்றால், அதற்கு இந்துக்களும் - முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் எண்ணம் முழுவதும் ஒருவரை ஒருவர் எப்படி அடித்துக்கொள்வது என்பதிலேயே இருக்க வேண்டும். மாறாக, ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் நம் கதி அதோகதிதான் என்பதை உணர்ந்து உடனடியாக அயோத்தியில் நடந்த ஒப்பந்தத்தின் மீது விசாரணை நடத்தினர்.
‘நாங்கள் ஆட்சி செய்யும் மண்ணில் நீங்கள் எப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்? சூரியன் உதிக்க வேண்டும் என்றாலும், மறைய வேண்டும் என்றாலும் எங்களை கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆணவமாகப் பேசி பொதுமக்கள் மத்தியில் அந்த ஒப்பந்தத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டனர். அத்தோடு விடாமல், அரசை எதிர்த்து தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருவரையும் அயோத்தி அருகே உள்ள, 'குபாரலீலா' என்ற இடத்தில் உள்ள ஒரு புளிய மரத்தின் இரு கிளைகளில் ஒரே நேரத்தில் இருவரையும் பொதுமக்கள் மத்தியில் துாக்கிலிட்டுக் கொன்றனர்.
‘இவர்களால்தான் நம் தலைவர் இறந்தார்’ என்று ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு மீண்டும் இந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே பிரிட்டிஷாரின் இந்தச் செயலுக்கான நோக்கம். ஆனால், சிறிது காலத்தில் இறந்த அந்தத் தலைவர்களை மகான்களாகவும், அவர்கள் துாக்கிலிடப்பட்ட புளிய மரத்தை புனித மரமாகவும் மக்கள் வணங்கவும் போற்றவும் செய்தனர். இதன் காரணமாக அந்த புளிய மரத்தையே பிரிட்டிஷார் வேரோடு வெட்டி வீழ்த்தினர். இதனால் கொதித்துப்போன குழந்தை ராமரை வைத்து வணங்கி வந்த, சம்பு பிரசாத் என்ற அர்ச்சகர் விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு, இறந்தவர்களுக்காக நியாயம் கேட்டும் அவர்களுக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தினார். பிரிட்டிஷார் நரபலி வேட்கையுடன் அவரையும் துாக்கில் போட்டனர்.
இப்படி போரும் போராட்டமுமாக ராமர் கோயில் விவகாரம் போய்க்கொண்டு இருந்தது. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த வழிபாடும் கூடாது என்பதால் பாபர் மசூதி வளாகம் யாருடைய நடமாட்டமுமின்றி பாதுகாப்பு வளையத்தில் உறைந்து கிடந்தது.
மீண்டும் இந்த இடத்தில் ராமர் கோயில் வரவேண்டும் என்பதற்காக 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அந்த தியாகத்தைச் சொல்லும், அவர்களின் தீரத்தைக்கூறும், வீரம் செறிந்த சுமார் 500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது இந்த ராமர் கோயில்.
ராமர் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் அயோத்தி ராமர் கோயிலுக்கு கூடுதல் மதிப்பு மரியாதை. ராமர் குழந்தையாக இந்த மண்ணின் ஒவ்வொரு அடியிலும் ஓடி விளயைாடியதால் கருவறையில் உலோகத்தாலான ஆறு அங்குல உயரமே உள்ள குழந்தை ராமர் சிலையை வைத்து வழிபட்டனர். அதற்கு உதாரணம் காசியை சேர்ந்த தஸ்னின் அன்சாரி, நஜ்மா பர்வீன் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் அயோத்தியில் இருந்து ராம ஜோதியை ஏற்றிக்கொண்டு ராமர் மற்றும் ராமர் கோயில் பெருமைகளை சொல்லிக்கொண்டு வருகின்றனர்.
தற்போது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பூமி பூஜை போடப்பட்டு பக்தர்கள் வழங்கிய இரண்டாயிரம் கோடி ரூபாய் நன்கொடையினைக் கொண்டு குழந்தை ராமர் கோயில் பிரம்மாண்டமாக எழுந்துள்ளது. ராமர் வனவாசம் போய் திரும்பி வந்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டபோது அயோத்தி எங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. நகரம் பல்வேறு அலங்காரங்களுடன் களைகட்டியது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என்று கம்பர் தனது ராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பார்.
அதில் எள்ளளவும் குறையாமல் மேலும் பலமடங்கு கூடுதல் உவகை, உற்சாகம், மகிழ்சியுடன் மீண்டும் ஒரு ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தை போன்ற கும்பாபிஷேகத்தை நாடே கண்டு களித்துக்கொண்டுள்ளது.