ராஜசூய யாகத்தில் தர்மரின் அகந்தையை உடைத்த தங்கக் கீரி: கிருஷ்ணரின் அற்புத லீலை!

மிகப்பெரிய தானம் செய்தும் யுதிஷ்டிரரின் புண்ணியம் ஏன் குறையத் தொடங்கியது தெரியுமா?
ராஜசூய யாகம் - Golden Mongoose Mahabharata
ராஜசூய யாகம் - Golden Mongoose MahabharataImage credit - Gemini
Updated on

காபாரதத்தில் தர்மத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர் யுதிஷ்டிரர். ‘தர்மராஜர்’ என்று அனைவராலும் போற்றப்பட்ட அவரிடமும், சில தருணங்களில் அறியாமையினால் நுட்பமான அகந்தை தலை தூக்கியது. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய தர்மிஷ்டனாக இருந்தாலும், அவனுக்குள் ‘நான்’ என்ற அகந்தை புகுந்தால் அது அவனது புண்ணியத்தைச் சிதைத்துவிடும் என்பதை உலகிற்கு உணர்த்த, ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளின் மூலம் யுதிஷ்டிரரின் அகந்தையைக் களைந்தார்.

ராஜசூய யாகம் நடந்தபோது புகழ்பெற்ற நிகழ்வின் விரிவான தொகுப்பு:

ராஜசூய யாகமும் யுதிஷ்டிரரின் பெருமிதமும்: குருஷேத்திரப் போருக்கு முன்னதாக, இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரர் ‘ராஜசூய யாகத்தை’ மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார். யாகத்தின் நிறைவில், உலகெங்கிலுமிருந்து வந்திருந்த முனிவர்கள், ஏழைகள், எளியோர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் வாரி வாரித் தானங்களை வழங்கினார்.

வந்திருந்த அனைவரும் உணவருந்தி, ஆடைகளையும் பொன்னையும் தானமாகப் பெற்று மனமுவந்து வாழ்த்தினர். இதைக் கண்ட யுதிஷ்டிரரின் மனதில் ஒரு சிறிய எண்ணம் அரும்பியது.

“இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த தானத்தை நாம் செய்துவிட்டோம். நம் தானத்தால் திருப்தியடையாத மனிதர்களே இல்லை” என்று அவர் நினைத்தார். தர்ம நெறியில் வாழ்பவர் என்றாலும், அந்தச் சுப தருணத்தில் ‘நான்’ என்ற அகந்தை அவரையுமறியாமல் குடிகொண்டது.

கிருஷ்ணரின் லீலையும் அரைத் தங்கக் கீரியும்: அனைத்தையும் அறிந்த ஸ்ரீகிருஷ்ணர், யுதிஷ்டிரரின் இந்த நுட்பமான அகந்தையைப்போக்க விரும்பினார். யாகசாலையின் அருகே ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

அங்கே ஒரு கீரிப்பிள்ளை (Mongoose) வந்தது. அதன் உடலின் ஒரு பாதி பிரகாசமான தங்க நிறத்திலும், மறுபாதி சாதாரணக் கீரியின் நிறத்திலும் இருந்தது. அந்த கீரிப்பிள்ளை, மக்கள் உணவருந்தி எறிந்த எச்சில் இலைகள் மற்றும் தானியங்களின் மீது புரண்டு எழுந்தது. பின்னர், சத்தமாகச் சிரித்துவிட்டுப் பேசியது.

ராஜசூய யாகம் - Golden Mongoose Mahabharata
ராஜசூய யாகம் - Golden Mongoose MahabharataImage credit - Gemini

“அரசரே! நீர் செய்த இந்த ராஜசூய யாக தானம், அந்த ஏழை அந்தணனின் சொற்ப தானத்திற்கு ஈடாகாது. எனவே, இதைக் கண்டு பெருமை கொள்ளாதீர்!”

கீரி கூறிய ஏழை அந்தணனின் கதை: கீரியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த யுதிஷ்டிரர், “அப்படிப்பட்ட தானத்தைச் செய்தவன் யார்?” என்று வினவினார். அதற்குக் கீரி பின்வரும் கதையைக் கூறியது:

முன்பு ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் நிலவியபோது, ஒரு ஏழை அந்தணனும் அவனது குடும்பமும் பல நாட்கள் உணவின்றிப் பட்டினியால் தவித்தனர். இறுதியில், அவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலான ‘உஞ்சவிருத்தி தானியம்’ (வயலில் சிதறிக்கிடக்கும் தானிய மணிகள்) மட்டுமே உணவாகக் கிடைத்தது. அவர்கள் அந்த மாவை நால்வராகப் பங்கிட்டு உண்ணத் முற்பட்டபோது, ஒரு பசியோடிருந்த விருந்தினர் அவர் வாசலுக்கு வந்தார்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களை திருப்திபடுத்த முயற்சித்தால் தோல்வி தான் மிஞ்சும் – மகாபாரதம் தரும் பாடம்!
ராஜசூய யாகம் - Golden Mongoose Mahabharata

முதலில் அந்தணன் தன் பங்கைக் கொடுத்தான். விருந்தினரின் பசி தீரவில்லை. அடுத்து அவனது மனைவி, மகன், மருமகள் என நால்வரும் தங்களின் முழு உணவையும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் அந்த விருந்தினருக்குக் கொடுத்தனர். அந்தச் தியாகத்தைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அவர்களுக்கு நற்கதியைளித்தார். அந்த இல்லத்தில் சிந்திய சில தானிய மாவுத் துகள்களின் மீது நான் புரண்டபோது, என் உடலின் ஒரு பாதி தங்கமாக மாறியது.

“இன்று உலகமே போற்றும் உங்களின் பிரம்மாண்டமான ராஜசூய யாகத்தில் புரண்டால் என் மறுபாதியும் தங்கமாகும் என்று நினைத்து வந்தேன். ஆனால், என் உடலின் மறுபாதி தங்கமாக மாறவில்லை. ஏனெனில், உங்களிடம் செல்வத்தின் மிகுதியால் கொடுத்த தானமே உள்ளது; அங்கு இருந்த தன்னலமற்ற தியாக உணர்வு இங்கு இல்லை!” என்று கீரி கூறியது.

அகந்தை அகன்ற தருணம்: கீரியின் வார்த்தைகள் யுதிஷ்டிரரின் இதயத்தில் சாட்டையடியாக விழுந்தன. ஒரு தானத்தின் பெருமை, கொடுக்கப்படும் பொருளின் அளவிலோ அல்லது பிரம்மாண்டத்திலோ இல்லை; அதைக் கொடுக்கும்போது நெஞ்சில் இருக்கும் தியாக உணர்விலும் அகந்தையற்ற தன்மையிலுமே உள்ளது என்பதை உணர்ந்தார். தன் தவற்றை உணர்ந்த தர்மராஜர், ஸ்ரீகிருஷ்ணனின் திருப்பாதங்களில் விழுந்து தன் அகந்தைக்காக மன்னிப்பு கோரினார்.

தர்மராஜா கதையின் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் உலகிற்கு உணர்த்தும் தத்துவம் எவ்வளவு பெரிய நற்செயல் செய்தாலும், “நான் செய்தேன்” என்ற அகந்தை வந்துவிட்டால், அதற்கான புண்ணியப் பலன் அழிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீராமனை வனவாசம் அனுப்ப வரம் கேட்ட கைகேயியின் தியாக உள்ளம்!
ராஜசூய யாகம் - Golden Mongoose Mahabharata
logo
Kalki Online
kalkionline.com