

யுதிஷ்டிரன் சூதில் தோல்வியடைந்தது, தர்மம் கடைப்பிடிப்பவருக்கும் கர்மா விதிக்கும் சோதனைகள் தவிர்க்க முடியாதவை என்பதை காட்டுகிறது. துரியோதனின் அதர்மம், பாண்டவர்களின் தற்காலிக இழப்பை உருவாக்கினாலும், அதுவே மகாபாரதப் போருக்கான காரணமாகி, கெளரவர்களின் அழிவையும் தர்மத்தின் இறுதி வெற்றியையும் ஏற்படுத்துகிறது. இழப்பு தற்காலிகம், தர்மத்தின் பலன் நிரந்தரம் எனக் கூறப்படுகிறது.
தர்மன் நீதி , நேர்மை, உண்மை ஆகியவற்றை தீவிரமாகக் கடைப்பிடிக்கக் கூடியவன். அப்படி இருந்தும்தர்மன் சூதாட்டம், ஏன் அனைத்தையும் இழந்தான்? தர்மப்படி சூதாடுவது தவறு என்றுரைத்து அதிலிருந்து விலகி இருக்கலாம் அல்லவா? மற்றவர்களுக்கு ஒரு போதும் தீங்கை நினைக்காத தர்மனுக்கு கடுமையான சோதனைகள் ஏற்பட்டது ஏன்? அறிந்துகொள்வோம்.
ஒருவர் உண்மை, ஒழுக்கம் மற்றும் நீதியைக் கடைப்பிடிப்பதால் மட்டும் இழப்பிலிருந்து மீளமுடியாது. ஒரு அரசனுக்கு முன்னால் அறைகூவல் விடுக்கப் படும்போது அதை அவர் ஏற்க வேண்டும், என்றுதான் ராஜநீதி கூறுகிறது. அதை மறுக்கும் உரிமை யுதிஷ்டிரனுக்கு உண்டு என்றாலும், மறுத்தல் கோழைத்தனமாகக் கருதப்படுகிறது.
தர்மப்படி சூது விளையாட அழைக்கும்போது அவர் ஏற்றதுதான் தர்மம். ஆனால், தர்மன் விளையாட்டில் தன் சார்பாக நன்றாக விளையாடக்கூடிய ஒருவரை வைத்து பகடையை உருட்டி இருக்கலாம் .
பகடை விளையாட்டின் தோல்வியின்போது, தர்மர் தன்னிடம் இருந்த அனைத்தையும் இழக்கிறார். தர்மர் நினைத்தால் பீமனை ஏவி அனைத்து கெளரவர்களையும் அப்போது துவம்சம் செய்திருக்கலாம். விளையாட்டில் தோற்றதை ஏற்றுக்கொள்ளாமல் போர் புரிந்து இருக்கலாம். ஆனால், விளையாட்டின் விதிகளை அவர் ஏற்றுக்கொண்டார். அதுதான் விளையாட்டின் தர்மம். தான் இழந்தவைகள் மீது அவர் உரிமை எதுவும் கோராமல் இருந்தார்.
ஒருவர் எவ்வளவுதான் நல்லவர் ஆயினும் அவரை கர்மாவே வழிநடத்தி செல்கிறது. சூதின்போது தர்மனின் கர்மா செயல்படவில்லை. மாறாக துரியோதனின் கர்மா அவனை அதர்மம் செய்யத்தூண்டியது. அவன் அதை தீர்க்கமாகச் செய்தான்.
பாண்டவர்கள் சூதில் தோற்றால்தான் , அவர்களுக்கும் கெளரவர்களுக்கும் கடும் பகை ஏற்படும். கடும் பகையின் விளைவால் தீமை முற்றிலும் அழிக்கப்படும். கர்மா, உடனடியாக செயல்படாவிட்டால்கூட நீண்டகாலம் செயலில் இருக்கிறது.
யுதிஷ்டிரரின் இழப்பு, அவர்களுக்குக் கிடைத்த உடனடி பின்னடைவுகள் பொறுமை மற்றும் பணிவு ஆகியவற்றைக் கற்பிக்கவும் உதவுகிறது. தோல்வி ஒரு மனிதனை மிகவும் வலிமையாக்குகிறது. அடிப்பட்ட புலியின் அடுத்தத் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருக்கும். தற்காலிக தோல்விகள் ஞானம், நுண்ணறிவு மற்றும் உள்வலிமையை வழங்குகின்றன. இத்தனை தோல்விக்குப் பின்னரும் யுதிஷ்டிரன் தன் தர்ம சிந்தனையை விடவில்லை.
யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தை இழக்காமல் இருந்தால், அவரிடம் ஒரு சிறிய நாடு மட்டுமே இருந்திருக்கும். காலத்திற்கும் கெளரவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் செய்த துரோகத்தைத் தாங்கிக்கொண்டு அவர்களுடன் வாழ வேண்டிய நிர்பந்தம் இருக்கும். பகையானது மிச்சம் வைக்கக்கூடாது. அது எந்த இடத்தில் மிஞ்சுகிறதோ, அங்கிருந்து இழப்புகள் அதிகரிக்கும். பாண்டவர்களின் சந்ததிகளும் அதே பகையை காலம்காலமாகத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியிருக்கும். இதனால், கடுமையான பாதிப்பு பாண்டவர்களுக்குத்தான் இருக்கும்.
பாண்டவர்கள் ஶ்ரீ கிருஷ்ணர் மூலம் அனுப்பிய சமாதான தூது வெற்றி பெற்றாலும், திரவுபதியின் அவமானம் துடைக்கப்பட்டு இருக்காது. அதனால், போர் களத்தில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தத்தை துரியோதனன் தானே ஏற்படுத்தினான்.
துரியோதனின் கர்மா மீண்டும் செயல்படத் தொடங்கியது எதிர் திசையில். இப்போது அவரது வினைகள் அவரையே பழி வாங்கத் தொடங்கியது. மகாபாரதப் போர் தொடங்கியது. இதில் கெளரவர்கள் முழுவதும் கொல்லப்பட்டனர்.
தர்மனின் அப்பா பாண்டுவை ஏமாற்றி திருதராஷ்டிரன் அதர்மம் செய்து ஆட்சியில் அமர்ந்தான். இப்போது திருதராஷ்டிரன் தன் தம்பியை ஏமாற்றிய கர்மாவிற்கு, தம்பியின் மகன்கள் ஆட்சியில் அமர்ந்ததை பார்த்து வருந்த வேண்டும். தன் மக்கள் அழிந்ததை எண்ணி புழுங்கியே இறுதிக் காலத்தை கவலையில் கழிக்க வேண்டும் என்று கர்மா செயலில் இருந்தது. சூதாடும்போது தர்மன் இழந்த எல்லாவற்றையும் போருக்குப் பின் மீண்டும் பெற்றுக்கொண்டான். தர்மம் வென்றது. யுதிஷ்டிரன் இழந்தவைகளைவிட பெற்றது ஆதிகம்.
தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு இழப்பு என்பது தாற்காலிமாக இருக்கும். ஆனால், அவர்களின் வரவு நிரந்தரமாக இருக்கும்.
மகாபாரதத்தின் மிக முக்கியமான திருப்புமுனையான சூதாட்டத்தின் பின்னணியில் உள்ள கர்ம நியதிகளையும், தற்காலிகத் தோல்விகளைக் கடந்து வாழ்க்கையில் நிரந்தர வெற்றியை அடைவதற்கான ஆன்மீக மற்றும் வாழ்வியல் தத்துவங்களையும் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.