

கூவம் ஆறு ஒரு பாவப்பட்ட ஆறு. இப்போது இதன் பெயரை சொன்னாலே காதையும் மூக்கையும் பொத்தி கொள்கிறார்கள். நம்புவீர்களா... இந்த ஆற்றில் முழுகி எழுந்தால் பாவங்கள் தீரும் என்று சொல்லப்பட்டது என்று? இந்த ஆறுக்கு திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு.
பிறக்கும்போதே இது சாக்கடையாக பிறக்கவில்லை.. பிறப்பிடத்திலிருந்து சென்னை நகருக்குள் நுழையும் வரை கூவம் ஒரு புனித ஆறு. வெள்ளையர் காலத்தில் இதன் கரைகளில் வீடுகள் கட்டி வாழ்ந்தார்கள் பணக்காரர்கள். படகுகள் மூலம் நடந்தது வணிகம்.
இப்போது கூட திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பல கிராமங்கள் கூவம் நீரை கொண்டு தான் விவசாயம் செய்கின்றனர். சென்னை நகரம் வளர வளர தேய ஆரம்பித்து விட்டது கூவம்.
கூவத்தில் படகு விடுகிறேன் என்று திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் கோடிகளில் பணம் கொட்டப்பட்டது தான் மிச்சம். அது தவிர அதன் கரைகளில் நடந்த ஆக்கிரமிப்புகள். இதை அரங்கேற்றியவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. பெரிய பணக்காரர்களும் கூட.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு முறை நான் திருப்பதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்புகையில் வழி தவறி எங்கெங்கோ அலைந்து ஒரு ஆற்றங்கரைக்கு வந்தேன். அதன் இருபுறமும் பயிர் பச்சை. தண்ணீர் பளிங்கு போல சல சல என்று ஒலி எழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் குளித்து கும்மாளமடித்து கொண்டிருந்தனர்.
தாகத்தால் தொண்டை வறண்டு போன நிலையில் அந்த ஆற்றில் இறங்கி தண்ணீரை இரு கைகளாலும் எடுத்து குடித்தேன். அது மட்டுமல்லாமல் பைக்கில் வைத்திருந்த துண்டை கட்டிக்கொண்டு குளிக்கவும் செய்தேன்.
அந்த புத்துணர்ச்சியை விவரிக்க முடியாது. ஒருவழியாக உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பசுவை மேய்த்து கொண்டிருந்த ஒரு கிராமவாசியிடம் சென்னை செல்லும் நெடுஞ்சாலைக்கு வழி கேட்டேன்.
பின்பு அவரிடம் அந்த அற்புத ஆறு பற்றி கேட்டேன். அவர் சொன்ன பதிலை கேட்டு நான் அப்படியே ஷாக்காயிட்டேன். 'நீங்க சாக்கடை ன்னு சொல்றீங்களே அந்த கூவம் தான் இந்த ஆறு. நாங்கள் குடிக்க, விவசாயம் செய்ய எங்களுக்கு உயிர் துணையாய் இருக்கும் ஆறாக்கம் இது.
நகரம் நுழைந்ததும், ஆள் மட்டுமல்ல, ஆறும் கெட்டுப் போகிறது. என்னத்த சொல்ல? கலியுகம் தம்பி கலியுகம். திருவேற்காடு வரை புனிதம் புண்ணியம். பிறகு நாற்றம் நரகம்.
அன்று படகு சவாரி விட முயற்சியாவது செய்தார்கள். இன்று இதை திரும்பி பார்ப்பவர் இல்லை. பாவம் கூவத்தின் பிறந்த இடம் சொர்க்கம். புகுந்த இடம் சென்னை மாநரகம்.
ஒரு காலத்தில் லண்டனின் தேம்ஸ் ஆறும் கூவம் போலத்தான் இருந்ததாம். ராணி விக்டோரியா காலத்து இன்ஜினீயரான Sir Joseph Bazalgette என்பவர் அதை தூய்மைபடுத்துவதை சவாலாக ஏற்று அதில் வெற்றியும் பெற்றாராம்.
நம் கூவத்தை நம் முதல்வர் Joseph Vijay Sir தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா?
******
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் எங்கள் காம்பவுண்ட் சுவருக்கு அருகில் ஒரு அஞ்சல் பெட்டி இருந்தது. நான் அதை உயிரற்ற ஜட பொருளாக என்றும் பார்த்ததில்லை. அதுவும் நம்மை போல ஒரு உயிருள்ள ஜீவனாக தான் பாவித்தேன்.
காஞ்சிபுரத்தில் வசித்த என் தாத்தாவுக்கு நான் எழுதிய எண்ணற்ற போஸ்ட் கார்டுகளை எல்லாம் அந்த தபால் பெட்டியில் தான் போடுவேன். ஒவ்வொரு முறையும் நான் இந்தப் பெட்டியில் ஒரு கடிதத்தை போடும் போது அதன் சிவப்பு ஹெல்மெட்-தலையை தட்டி, தேங்க்ஸ் சொல்வது என் வழக்கமாக இருந்தது.
அந்த போஸ்ட் பாக்ஸ் மட்டும் அங்கில்லாதிருந்தால் நான் தபால் நிலயத்திற்கே கால் கடுக்க காத தூரம் நடந்து போக வேண்டியிருந்திருக்கும்.
இந்த பெட்டியினால் எங்கள் வீட்டிற்கு ஒரு தனிப்பட்ட பெயர் கிடைத்தது. எங்கள் வீட்டை தபால் பெட்டி வீடு (POST BOX HOUSE ) என்று அக்கம் பக்கத்தில் அழைத்தார்கள். சொல்லப்போனால் அதை நான் என் இளைய சகோதரனை போல பார்த்தேன்.
அது தவறாக பயன்படுத்தப்படுவதையோ அல்லது அசுத்தபடுத்த படுவதையோ என்னால் தாங்க முடியாது. தெரு நாய்கள் என் அஞ்சல் பெட்டியின் பீடத்தில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினால் எனக்கு கோபம் வரும். அவ்வழியே செல்லும் எருமை மாடுகள் சில சமயம் என் பிரிய போஸ்ட் பாக்சில் தங்கள் முதுகுகளை தேய்த்து கொள்ளும்.
அப்படி அவை செய்வதை பார்த்தால் அவ்வளவு தான்"அரிப்புக்கு வேறு ஏதாவது மரத்தை பார்" என்று விரட்டி விடுவேன்.
எங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெறுக்கும் ஒரு விசித்திரமான ஒரு ஆசாமி பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். அவர் என்னையும் எனது மூன்று சகோதரர்களையும் வெறுத்தார்; அவர் எங்கள் மரங்களை வெறுத்தார்; அவர் எங்கள் பூனையை வெறுத்தார்; அவர் என் அருமை அஞ்சல் பெட்டியையும் வெறுத்தார்.
பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதையில் அஞ்சல் பெட்டி நிற்கிறது என்று புகார் செய்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதினார்.
ஒருநாள் காலையில் P & T துறையைச் சேர்ந்த சிலர் வந்தார்கள். எங்கள் அஞ்சல் பெட்டியை அகற்றி எடுத்துச் சென்று அப்பகுதி தபால் நிலையத்தில் டம்ப் செய்து விட்டு போய் விட்டனர். எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. அப்போதே நான் அதைத் திரும்பக் கொண்டுவருவதாக சபதம் எடுத்தேன்.
அஞ்சல் பெட்டியை அகற்றுவது எப்படி அவசியமில்லை என்பதை விளக்கி எனது பட்லர் இங்கிலீஷில் PMG க்கு எழுதினேன்.
ஒரு வாரத்திற்குள் ஒரு தபால் அதிகாரி அந்த இடத்தைப் பார்வையிட வந்தார். எனது அஞ்சல் பெட்டி சிறிது நேரத்திற்குப் பிறகு அது முன்பு இருந்த இடத்திற்கு திரும்பியது.
அந்த நாட்களில் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டபின் திருடிய பர்ஸுகளை தபால் பெட்டியில் போட்டு விட்டு போவது வழக்கம். எங்கள் தபால் பெட்டி அதற்கு விதி விலக்கல்ல. ஒரு காலகட்டத்தில் எங்கள் அஞ்சல் பெட்டியில் தொடர்ந்து பர்ஸுகள் விழ ஆரம்பித்தது. இதுபற்றி தபால் ஆபீஸ் காவல்துறைக்கு புகார் அளிக்க, ஒரு போலீஸ்காரர் சாதாரண உடையில் தபால் பெட்டியை கண்காணித்தார்.
ஜேப்பிடி மேல் பாய்வதற்கு காத்திருந்தார். வந்தான் ஒரு போக்கிரி. போட்டான் பெட்டியில் ஒரு மணி பர்ஸை. மாட்டினான் கையும் களவுமாக. விசாரித்தபோது அவன் நகரின் வேறு பகுதியைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது.
இன்னொரு மறக்க முடியாத விஷயம் என்னவென்றால், ஒரு முறை ஒரு முரட்டு காளையின் கொலைவெறி தாக்குதலில் இருந்து என்னை அந்த தபால் பெட்டி தான் காப்பாற்றியது. அதன் பின்னால் பதுங்கி தான் நான் காளையின் கொம்புகளுக்கு பலியாகாமல் தப்பித்தேன்.
இந்த போஸ்ட் பாக்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் அன்றைக்கே என் உடம்பு போஸ்ட் மார்ட்டம் ஆகியிருக்கும். தப்பித்தது தம்பிரான் இல்லை. தபால் பெட்டி புண்ணியம்.
இப்போதெல்லாம் தபால் பெட்டியை எங்கே பார்க்க முடிகிறது? முன்பெல்லாம் தெருவுக்கு ஒரு தபால் பெட்டி கண்டிப்பாக இருக்கும். இப்போதுதான் கடிதம் கைகளால் எழுதி கவரில் போட்டு அனுப்பும் முறை அறவே போய் விட்டதே. ஜி மைலுங்கரான் வாட்சப் கரான் X ன்றான் Y ன்றான். அன்று நாங்கள் ஒரு பக்கம் எழுதும் விஷயத்தை உப்பு சப்பில்லாத ஒத்த வரியில் அனுப்புறான். அஞ்சல் பெட்டியின் அவசியம் எங்கே இருக்கு? பார்த்து கொண்டே இருங்கள். மிச்சமிருக்கும் அஞ்சல் பெட்டிகளை குப்பை தொட்டிகளாக மாற்றினாலும் மாற்றிவிடுவர்!